Skip to main content

சேலம் மாநகரில் மீண்டும் ரவுடிகள் வேட்டை! ஒரே நாளில் 84 பேர் கைது!!

Published on 13/05/2020 | Edited on 13/05/2020

 

salem


சேலம் மாநகரில் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அடிதடி, ஆள்கடத்தல், கட்டப்பஞ்சாயத்து ரவுடிகளைக் கொத்து கொத்தாகக் கைது செய்யும் நடவடிக்கையில் மாநகர காவல்துறையினர் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். 


குறிப்பாக, காவல்நிலையங்களில் ‘ஹிஸ்டரி ஷீட்’ பின்னணி கொண்ட ரவுடிகளை அவ்வப்போது கைது செய்வதுடன், அவர்கள் மீது தடுப்புக்காவல் (குண்டாஸ்) சட்டத்தின் கீழும் கைது நடவடிக்கை மேற்கொள்ளத் தவறுவதில்லை. 


இந்நிலையில், கரோனா ஊரடங்கு காரணமாக ரவுடிகளின் கொட்டமும் கடந்த ஒன்றரை மாதமாகக் கட்டுக்குள் இருந்தது. காவல்துறையினரும் நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையில் முழுமையாக ஈடுபட்டனர். ஊரடங்கில் படிப்படியாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதில் இருந்து காவல்துறையினரும் அன்றாட அலுவல்கள் பக்கம் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.


இதையடுத்து, மீண்டும் குண்டர் சட்டத்தில் கைது செய்யும் நடவடிக்கைக்குத் திரும்பியுள்ள காவல்துறையினர், தற்போது ரவுடிகளைத் தேடித்தேடி கொத்து கொத்தாக அள்ளி வருவதிலும் கவனம் செலுத்துகின்றனர். 


இதில், நீண்ட நாள்களுக்குப் பிறகு, நேற்று முன்தினம் சேலம் மாநகரில் ஸ்டார்மிங் ஆபரேஷனுக்கு மாநகர காவல்துறை ஆணையர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இந்த அதிரடிச் சோதனையில், மாநகரம் முழுவதும் 84 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது சந்தேகத்தின்பேரில் சி.ஆர்.பி.சி. சட்டப்பிரிவுகள் 109, 110 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 


அவர்கள் அனைவரும் மாநகர காவல்துறை துணை ஆணையர் தங்கதுரை முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். ஓராண்டு வரை எந்தக் குற்றத்திலும் ஈடுபடமாட்டோம் என உறுதிப்பத்திரம் எழுதிக் கொடுத்ததன் பேரில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்த உறுதிமொழியை மீறி செயல்படுவோர் உடனடியாகக் கைது செய்யப்படுவர் என அதிகாரிகள் அவர்களை எச்சரித்து அனுப்பினர். 


இவர்கள் தவிர, சந்துக்கடைகள் மூலம் மதுபானங்கள் விற்பனை செய்ததாக 13 பேர் கைது செய்யப்பட்டனர். சாலை விதிகளை மீறியதாக 1,629 பேர் மீது மோட்டார் வாகன வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.


 

சார்ந்த செய்திகள்

Next Story

விசாரணைக் கைதி மரணம்; சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்!

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
madurai youth karthi incident Relatives involved in the road block

மதுரை மாவட்டம் மதிச்சியம் என்ற பகுதியில் கார்த்திக் (வயது 30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீது காவல் நிலையத்தில் நிலுவையில் இருந்த பல்வேறு வழக்குகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டிருந்தார். இத்தகைய சூழலில் வழிப்பறி வழக்கில் தொடர்பு இருப்பதாகவும், தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் போலீசாரால் கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) கைது செய்யப்பட்டார்.

அதன் பின்னர் 3 ஆம் தேதி நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, மருத்துவ தகுதிச் சான்று வழங்கப்பட்ட பின்னர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து 4 ஆம் தேதி திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அதிகாலை உயிரிழந்தார்.

கைது செய்யப்பட்ட ஒரே நாளில் சிறையில் இருந்து உடல் நலக்குறைவால் விசாரணை சிறைக்கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது. மேலும் கார்த்திக் உயிரிழப்புக்கு காவல்துறையினரே காரணம் என அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டி இருந்தனர். 

madurai youth karthi incident Relatives involved in the road block

இந்நிலையில் இளைஞரின் உயிரிழப்பிற்கு நீதி கேட்டும், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் கூறியும், உரிய நிவாரணம் அளிக்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கோரிப்பாளையம் தேவர் சிலை அருகே இன்று (07.04.2024) சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். 

Next Story

இரவில் நடப்பது என்ன? பாண்டிச்சேரி டூ திண்டிவனம் சாலையில் பரபரப்பு

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
Late night thefts on Pondicherry to Tindivanam road

பாண்டிச்சேரி வார இறுதி நாட்களில் எந்த அளவுக்கு பிரபலமானது என்பது அனைவரும் அறிந்ததே. அதே அளவுக்கு முக்கியமானது பாண்டிச்சேரி டூ திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை, 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். சென்னை செல்லும் வாகனங்களும், பெங்களூரூ திருவண்ணாமலை, செஞ்சி போன்ற நகரங்களுக்கு செல்லும் வாகனங்களும் இந்த சாலையை தான் பிரதானமாக பயன்படுத்துகின்றன. எப்பொழுதும் வாகனங்கள் சென்று கொண்டே இருக்கும்.

இந்த சாலையில் பாண்டிச்சேரி நுழைவாயிலில் இந்தியாவின் பிரபலமான ஜிப்மர் மருத்துவமனை உள்ளது, இந்த மருத்துவமனைக்கு திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு போன்ற பகுதிகளில் இருந்து நோயாளிகள் வருகின்றனர். அதில் திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இந்த சாலையை அதிக அளவு பயன்படுத்துகின்றனர். 

இந்த சாலையில் தான் இப்பொழுது திட்டமிட்டு இரவு நேரங்களில் குறிப்பாக விடியற்காலை நேரத்தில் வாகனங்களை மறித்து கொள்ளை நடப்பதாக நான்கு சக்கர வாகன ஓட்டுனர்கள் தங்களது அனுபவங்களை, சக வாகன ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை பதிவாக சமூக ஊடங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

இதுகுறித்து அவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் முறையிட்ட போது அவர்கள் நாங்கள் கவனிக்கிறோம் என சொல்கிறார்களே தவிர அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை என்கிறார்கள. தேசிய நெடுஞ்சாலைகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும், அவசர தொடர்புக்கு சுங்கச்சாவடியை தொடர்புகொள்ளும் வசதியை உருவாக்கி வைக்கவேண்டும் என்கிற  நெடுஞ்சாலைத்துறை விதி, சாலையைப் பாதுகாப்பது கட்டணம் வசூலிக்கும் சுங்கச்சாவடிகளின் பொறுப்பு எனக்கூறுகிறது. ஆனால் அவர்கள் அதனை கண்டு கொள்வதில்லை, சாலையை மட்டும் தான் பராமரிப்போம் என்கிறார்கள்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி பாண்டிச்சேரிக்கு சுற்றுலா வரும் பொதுமக்கள் இந்த சாலையை பயன்படுத்துபவர்கள் அச்சத்தில் இருக்கின்றனர். அது 2021 ஆம் ஆண்டு வெளியான பழைய ஆடியோ இப்போது அப்படியல்ல, அங்கு இரவில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்கிற தகவல் பரப்பப்படுகிறது.