Skip to main content

ரோடு மேல ரோடு போட்டு வயலை எல்லாம் அழிச்சுப்போட்டு சோத்துக்கு எதை தின்ப? விவசாயிகள் கூக்குரல்!!

Published on 15/04/2019 | Edited on 15/04/2019

 


சேலம் - சென்னை எட்டுவழிச்சாலை திட்டம் உறுதியாக நிறைவேற்றப்படும் என்று சேலத்தில் நடுவண் அமைச்சர் நிதின் கட்கரி கூறியது, சேலம் மாவட்ட விவசாயிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

e


மக்களவை தேர்தலில் போட்டியிடும் தேஜகூ வேட்பாளர்களை ஆதரித்து, நடுவண் அமைச்சர் நிதின் கட்கரி சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 14, 2019) பரப்புரை செய்தார். அவர் பேசுகையில், ''சேலம் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு சேலம் & சென்னை எட்டுவழிச்சாலைத் திட்டம் அவசியம். இது தொடர்பான வழக்கில் நீதிமன்றம்  தீர்ப்பு அளித்திருக்கிறது. என்றாலும், விவசாயிகளின் ஒப்புதலைப் பெற்று, இந்த திட்டத்தை நிறைவேற்றுவோம். கூடுதல் இழப்பீடும் வழங்கப்படும்,'' என்றும் பேசினார்.


எட்டுவழிச்சாலை விவகாரத்தில் பாதிக்கப்படும் விவசாயிகளிடம் கருத்துகளை கேட்காமலும், சமூக பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொள்ளாமலும், சுற்றுச்சூழல் துறையின் அனுமதி பெறாமலும் திட்டத்திற்காக நிலத்தை கையகப்படுத்துவது தவறு என உயர்நீதிமன்றம் சம்மடி அடியாக கடந்த 8ம் தேதி தீர்ப்பு அளித்திருந்தது. எங்கே இந்த தீர்ப்பால், தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டு விடுமோ என பயந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யமாட்டோம். எட்டுவழிச்சாலைத் திட்டம் கொண்டு வரப்படமாட்டாது என்று பரப்புரை கூட்டங்களில் பேசி வந்தார்.


இந்த திட்டத்தை எதிர்த்து, பொதுநல வழக்கு தொடர்ந்த பாமகவின் அன்புமணி ராமதாஸ், இந்த தீர்ப்பு தனக்கும், கட்சிக்கும் வாக்குகளை பெருமளவில் அறுவடை செய்து தரும் என்று நம்பிக் கொண்டிருந்தார்.


இந்த நிலையில்தான், சேலத்தில் பாமக நிறுவனர் ராமதாசையும், எடப்பாடி பழனிசாமியையும் பக்கத்தில் வைத்துக்கொண்டே, எட்டுவழிச்சாலை கொண்டு வரப்படும் என தடாலடியாக யார்க்கர் பந்தை வீசினார். இதைக்கேட்டு பக்கத்தில் இருந்த இபிஎஸ்ஸூம், ராமதாஸும் ரொம்பவே ஆடிப்போனார்கள். அவர்களின் முகம் வெளிறியது.


இந்த திட்டத்தால் ஏற்கனவே நொந்து போயிருந்த சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்ட விவசாயிகளும் கட்கரியின்  பேச்சால் ரொம்பவே கொந்தளித்தனர். இதைக் கண்டித்து சேலத்தை அடுத்த பூலாவரியில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் உடனடியாக திரண்டு வந்து கருப்புக்கொடி  ஏந்தி எதிர்வினை ஆற்றினர்.


இரண்டாவது நாளாக, சேலத்தை அடுத்த ராமலிங்கபுரம், குள்ளம்பட்டி ஆகிய பகுதிகளிலும் திங்கள் கிழமையன்றும் (ஏப்ரல் 15, 2019) விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். ராமலிங்கபுரத்தில் 70க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். 


இதுகுறித்து குப்பனூரைச் சேர்ந்த விவசாயி நாராயணன் கூறுகையில், ''எட்டுவழிச்சாலைத் திட்டத்தை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் தீர்ப்பை மதிக்காத வகையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மீண்டும் எட்டுவழிச்சாலையைக் கொண்டு வருவோம் என்கிறார். அதை நாங்கள் மிக வன்மையாக கண்டிக்கின்றோம். நிதின் கட்கரி பினாமிகள் மூலம் 450க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதனால்தான் இத்திட்டத்தை செயல்படுத்த அவர் துடிக்கிறார்.

 

e


முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், பாமக நிறுவனர் ராமதாசும் மேடையில் இருக்கும்போதே எட்டுவழிச்சாலையைக் கொண்டு வருவோம் என்று மத்திய அமைச்சர் பேசுகிறார். அதை அவர்கள் இருவரும் மறுத்துப்பேசாமல் அமைதி காத்தனர். விவசாயிகள் ஒன்றிணைந்து அதிமுக, பாஜக கூட்டணியை இந்த தேர்தலில் தோற்கடிப்போம். அதற்கான பரப்புரைகளைச் செய்து வந்தோம். ஆனால் நிதின் கட்கரி, எங்களுக்கு வேலை இல்லாமல் செய்து விட்டார். அவரை பேச வைத்து, எடப்பாடி பழனிசாமி தனக்குத்தானே ஆப்பு வைத்துக்கொண்டார்,'' என்றார்.


குள்ளம்பட்டியில் எட்டுவழிச்சாலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் அருள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. விவசாயிகள் பன்னீர்செல்வம், அன்புராதா, கவிதா, செல்வி, சித்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


''கண்டிக்கின்றோம் கண்டிக்கின்றோம் நிதின் கட்கரியை கண்டிக்கின்றோம்', 'மதிப்புக்கொடு மதிப்புக்கொடு விவசாயிகளுக்கு போராட்டத்திற்கு மதிப்புக்கொடு', 'ரோடு மேல ரோடு போட்டு வயலை எல்லாம் அழிச்சுப்போட்டு சோத்துக்கு எதைத் தின்ப?,' 'எடப்பாடியே பதில் சொல் கட்கரியே பதில் சொல்,' 'சாலை மட்டும் வளர்ச்சியா? பதில் சொல் கட்கரியே! மவுனம் ஏன் எடப்பாடியே? 'தர மாட்டோம் தர மாட்டோம் எங்கள் நிலத்தை தர மாட்டோம்,'' என்று முழக்கமிட்டனர்.


விவசாயிகள் அன்புராதா, கவிதா ஆகியோர் கூறுகையில், ''அன்புமணி ராமதாஸ் நான்தான் வழக்குப்போட்டு இந்த திட்டத்தையே நிறுத்தி வைத்திருப்பதாக சொல்லி வருகிறார். ஆனால் அவர் தொடர்ந்த வழக்கின் வாதங்கள் ஏதும் தீர்ப்பில் குறிப்பிடப்படவில்லை. அன்புமணி, தர்மபுரி தொகுதியில் தீர்ப்பைக் குறித்து வீடு வீடாக வாக்கு சேகரித்து வருகிறார். அதேநேரம், சேலத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி எட்டுவழிச்சாலைத் திட்டத்தை கொண்டு வருவோம் என்கிறார். விவசாயிகள் ஒவ்வொருவரும் அதிமுக, பாஜக கூட்டணியை தேர்தலில் தோற்கடிப்போம். இந்தக் கூட்டணிக்கு எதிராக தலா 100 வாக்குகளை திரட்டி வாக்களிப்போம்.


எட்டுவழிச்சாலை திட்டம் என்ன என்று மக்களிடம் சொல்லாமலேயே திடீரென்று நிலத்தை அளந்து முட்டுக்கல் போட்டுவிட்டனர். இதனால் ஒட்டுமொத்த விவசாயிகளும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில்தான் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு எங்களுக்கு நிம்மதியைக் கொடுத்தது. ஆனால், மத்திய அமைச்சரின் பேச்சால் இப்போது மீண்டும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்தப் பகுதியில் வந்தால் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் செய்வோம். அதிமுக கூட்டணியை தோற்கடிப்போம்,'' என்றனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

8 வழி பசுமைச் சாலை தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி மனு!

Published on 08/01/2021 | Edited on 08/01/2021

 

salem to chennai 8 roads supreme court

 

சேலம் - சென்னை 8 வழி பசுமைச் சாலை திட்டத்தை அனுமதித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

 

சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டிணம் பகுதியைச் சேர்ந்த யுவராஜ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், 'ஏற்கெனவே சென்னை - சேலம் இடையே உள்ள மூன்று நெடுஞ்சாலைகளில் ஒன்றை விரிவாக்கம் செய்யலாம். புதிதாக விலை கொடுத்து நிலம் கையகப்படுத்த தேவையில்லை, புதிய திட்டம் தேவையில்லை. விவசாய நிலங்களை கையகப்படுத்துவதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும். எனவே, சேலம் - சென்னை 8 வழி பசுமைச் சாலை திட்டத்தை அனுமதித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் மறு ஆய்வு செய்ய வேண்டும்' என கோரியுள்ளார். 

 

இந்த மனு உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

Next Story

எட்டுவழிச்சாலை விவகாரம்: அவசர வழக்காக விசாரிக்க புதிய மனுத்தாக்கல்; கருப்புக்கொடி... கண்டனம்... கொந்தளிக்கும் விவசாயிகள்!

Published on 05/06/2020 | Edited on 05/06/2020
8 lane way-model




சேலம் - சென்னை எட்டுவழிச்சாலை வழக்கை, அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று எட்டுவழிச்சாலைத் திட்ட இயக்குநர் உச்சநீதிமன்றத்தில் வியாழனன்று (ஜூன் 4) மனுத்தாக்கல் செய்துள்ளதற்கு, இத்திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 
 


சேலம் - சென்னை இடையே புதிதாக, பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ், 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், பசுமைவழி விரைவுச்சாலை என்ற பெயரில் எட்டுவழிச்சாலை அமைப்பதற்காக நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் வாக்கில் தமிழக அரசு தொடங்கியது. சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் வழியாக 277.3 கி.மீ. தூரத்திற்கு இத்திட்டம் அமைகிறது. இதற்காக, 1900 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்தும் பணிகளை மாநில அரசு முடுக்கி விட்டிருந்தது.
 


இத்திட்டத்தை செயல்படுத்தினால் பத்தாயிரம் விவசாயக் குடும்பங்கள் நேரடியாக பாதிக்கப்படுவதோடு, கையகப்படுத்தப்படும் விளை நிலங்கள் மட்டுமின்றி அதையொட்டியுள்ள நிலங்களும் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. எதையும் காதில் போட்டுக்கொள்ளாத எடப்பாடி பழனிசாமி அரசு, காக்கித்துறையின் லட்டிகளைக் கொண்டு மிரட்டி, அடாவடியாக நிலத்தைக் கையப்படுத்தி, முட்டுக்கல் நட்டது.
 


இத்திட்டத்திற்குத் தடை கேட்டு, தர்மபுரி கிருஷ்ணமூர்த்தி, சேலம் வீரபாண்டி மோகனசுந்தரம் உள்ளிட்ட 50 பேர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ''விவசாயிகளிடம் கருத்து கேட்காமல், காவல்துறையினர் உதவியுடன் நிலத்தைக் கையகப்படுத்திய நடவடிக்கையே தவறு. 8 வழிச்சாலைத் திட்டம் தொடர்பான அரசாணையை உடனடியாக ரத்து செய்வதுடன், முட்டுக்கற்களை அகற்றிவிட்டு, கையகப்படுத்திய நிலங்களை உரியவர்களிடம் முன்பிருந்த நிலையின்படி ஒப்படைக்க வேண்டும்,'' என்று எடப்பாடி அரசுக்கு சம்மட்டி அடியாக ஒரு தீர்ப்பை வழங்கியது. இத்தீர்ப்பு கடந்த 2019, ஏப்ரல் 8ம் தேதி வழங்கப்பட்டது.


அப்போது மக்களவைத் தேர்தல் காலம் என்பதால் மத்திய, மாநில அரசுகள் அடக்கி வாசித்தன. தேர்தல் முடிந்த பிறகு, உயர்நீதிமன்றம் விதித்த தடை உத்தரவை எதிர்த்து தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தரப்பில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தமிழக அரசும் அதில் தன்னை இணைத்துக் கொண்டது.


உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு, நீதிபதி ரமணா உள்ளிட்ட மூன்று பேர் கொண்ட பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. நீதிபதி ரமணா, ''எட்டுவழிச்சாலைத் திட்டத்திற்கு நிலத்தை கையகப்படுத்திய விவகாரத்தில் நிறைய தவறுகள் நடந்திருப்பதை பார்க்க முடிகிறது. இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. விரிவாக விசாரிக்க வேண்டும். அதனால் உயர்நீதிமன்றத்தின் தடை உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது,'' என்று அதிரடியாக உத்தரவிட்டார்.


அதன்பிறகு என்ன நடந்ததோ, மூன்றே மாதத்திற்குள்ளாக நீதிபதி ரமணா திடீரென்று அந்த பெஞ்ச்சில் இருந்து விடுவிக்கப்பட்டு, நீதிபதி அருண்மிஸ்ரா தலைமையிலான அமர்வு பொறுப்பேற்று விசாரணை நடத்தி வந்தது. இதையடுத்து வழக்கில் அடுத்தக்கட்ட முன்னேற்றம் ஏதுமில்லாமல் இருந்த நிலையில், இடையில் கரோனா ஊரடங்கால் நீதிமன்ற செயல்பாடுகளும் முடங்கின.


இந்நிலையில், எட்டுவழிச்சாலைத் திட்ட இயக்குநர் திடீரென்று, இந்த வழக்கு விசாரணையை அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டும் என்று கோரி, வியாழனன்று (ஜூன் 4) ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். எட்டுவழிச்சாலைத் திட்டம் மற்றும் கரோனா ஊரடங்கால் ஏற்கனவே வாழ்வாதாரத்தை இழந்து நொந்து போயிருக்கும் விவசாயிகள், இந்த புதிய மனுத்தாக்கலால் கடும் கொந்தளிப்பு அடைந்துள்ளனர். 

 

8 lane way issue - salem




மனுத்தாக்கல் விவரத்தை அறிந்த சில மணி நேரங்களில் சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் விவசாயிகள் அவரவர் வீடுகள் முன்பு குடும்பத்துடன் கையில் கருப்புக்கொடி ஏந்தி கண்டனப் போராட்டம் நடத்தினர். 


இதுபற்றி தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த எட்டுவழிச்சாலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழனியப்பன் நம்மிடம் பேசினார்.

 

palaniyappan-farmer-darmapuri




''சேலம் - சென்னை இடையிலான எட்டுவழிச்சாலைத் திட்டம் என்ன நோக்கத்திற்காக போடப்படுகிறது என்பது குறித்து இதுவரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களிடம் தெளிவுப்படுத்தவில்லை. இத்திட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் 700 கோடி ரூபாய் டீசல் செலவு மிச்சமாகும் என்று தமிழக அரசு நீதிமன்றத்தில் பதில் கொடுத்திருக்கிறது. இப்போதோ, ராணுவத் தளவாட தொழிற்சாலை வருவதால் எட்டுவழிச்சாலை அவசியம் என்கிறது தமிழக அரசு. 


உண்மையில் கஞ்சமலை, கவுந்திமலை, வேடியப்பன் மலைகளில் உள்ள கனிம வளங்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலம் சுரண்டி எடுத்துச் செல்வதற்காகவே இத்திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கொண்டு வர துடிக்கின்றன. அதற்காகவே ரஷ்யாவைச் சேர்ந்த கார்ப்பரேட் நிறுவனங்களை தொழில் தொடங்க அழைக்கின்றனர். 


எட்டுவழிச்சாலைத் திட்டம் வந்தால் சேலம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களிலும் கிட்டத்தட்ட 10 ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். அதேநேரம், சேலம் - சென்னை இடையே ஏற்கனவே உள்ள சாலையை விரிவுபடுத்துவதில் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை. கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், இந்த வழக்கை விரைவுபடுத்த வேண்டும் என்பதில் உள்நோக்கம் இருப்பதாக கருதுகிறோம்,'' என்கிறார் பழனியப்பன்.


சேலம் மாவட்டம் வீரபாண்டி, பூலாவரி பகுதிகளில் எட்டுவழிச்சாலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் மோகனசுந்தரம் தலைமையில் விவசாயிகள் அவரவர் வீடுகள் முன்பு கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

 

mohanasundaram-farmer-salem



விவசாயி மோகனசுந்தரம் கூறுகையில், ''எட்டுவழிச்சாலைத் திட்டம் வந்தால் நேரடியாகக் கையகப்படுத்தப்படும் 1900 ஹெக்டேர் நிலம் மட்டுமின்றி, அதையொட்டியுள்ள விவசாய நிலங்களும் அடியோடு பாதிக்கப்படும். இத்திட்டத்தின் பேரில் உள்ளே வரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்துவிடுவர். அப்படியானால் உழவுப்பணிக்கு தண்ணீருக்கு எங்கே போவோம்? 


கரோனா ஊரடங்கு காலத்தில் எல்லா மக்களுமே அரிசி, காய்கறி, பருப்பு என்று அத்தியாவசிய பொருள்களைத் தேடித்தான் படையெடுத்தார்கள். விவசாயிகளின் முக்கியத்துவத்தை இந்த கரோனா காலம் மக்களிடம் உணர்த்தி இருக்கிறது. ஆனால், இதை முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் இன்னும் உணராமல் இருக்கிறார். எட்டுவழிச்சாலை வந்தால் தொழிற்சாலைகள் வரும் என்கிறார். தொழிற்சாலைகள் வரும்; ஆனால் சோறு வருமா? விவசாயிகளை தினக்கூலிகளாக விரட்டிவிட்டால் சோத்துக்கு எங்கே போவார்கள்? நாங்கள் வயலில் பாடுபட்டு விளைவிக்கும் பொருள்களை நாங்களேவா தின்கிறோம்? மக்களுக்குதானே கொடுக்கிறோம்? எங்கள் வேதனைகளை முதல்வர் உணரவே இல்லை.


கரோனா ஊரடங்கால் நொந்து போயிருக்கும் நிலையில், இப்போது எட்டுவழிச்சாலை வழக்கை வேகமாக விசாரித்து என்ன செய்யப் போகிறார்கள்? விவசாயிகளுக்கு தீங்கான இந்த திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும்,'' என்றார்.


சேலம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் சாலையோரங்களில் உள்ள பசுமையான மரங்களையும், பலன் தரும் பல்லாயிரக்கணக்கான தென்னை மரங்களையும் அழித்துவிட்டு பசுமைவழிச்சலைத் திட்டத்தை போடத் துடிக்கின்றன மத்திய, மாநில அரசுகள். மேடைக்கு மேடை தன்னை விவசாயி மகன் என்று சொல்லிக்கொள்ளும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியோ, விவசாயிகளின் நலன் என்ற பெயரில் ஒருபுறம் குடிமராமத்துப் பணிகளை முடுக்கி விடுவதும், இன்னொரு புறம், எட்டுவழிச்சாலை என்ற பெயரில் விளை நிலங்களை அபகரிப்பதும் முரண்பாடுகளின் உச்சம்.