Skip to main content

சேலம் - சென்னை விமான சேவை; மார்ச் முதல் மீண்டும் தொடக்கம்! 

Published on 12/02/2022 | Edited on 12/02/2022

 

Salem - Chennai Airlines; Starting again from March!

 

சேலம் - சென்னை இடையிலான பயணிகள் விமான சேவை, வரும் மார்ச் மாதம் முதல் மீண்டும் தொடங்கப்படும் என்று சாலை மற்றும் விமான போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் விஜயகுமார் சிங் தெரிவித்துள்ளார். 

 

இரும்பு, மேக்னசைட், பாக்சைட் உள்ளிட்ட கனிமங்கள், ஜவுளி, ஸ்டார்ச், வெள்ளி கொலுசு, மலர் சாகுபடியில் முக்கிய சந்தை மற்றும் உற்பத்தி கேந்திரமாக சேலம் மாவட்டம் விளங்குகிறது. 

 

வர்த்தக நிமித்தமாக சேலத்தில் இருந்து சென்னைக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. இதையடுத்து, மத்திய அரசின் சிறு நகரங்களுக்கு இடையிலான விமான சேவை (உடான்) திட்டத்தின் கீழ் சேலத்தில் இருந்து சென்னைக்கு கடந்த 2018- ஆம் ஆண்டு பயணிகள் விமான போக்குவரத்து தொடங்கப்பட்டது. 

 

உடான் திட்டத்தின் கீழ் ஆர்சிஎஸ் எனப்படும் மண்டல அளவிலான வழித்தடத் திட்டத்தின் கீழ் மட்டும் இயக்கப்படும் விமான சேவை கொண்டு வரப்பட்டன. அதன்படி, முதல்கட்டமாக சென்னை - சேலம் - சென்னை வழித்தடத்தில் விமான சேவை தொடங்கப்பட்டது. இந்த வழித்தடத்தில் ட்ரூஜெட் நிறுவனம் ஒரே ஒரு பயணிகள் விமானத்தை இயக்கி வந்தது. ஒரே நேரத்தில் அதிகபட்சம் 72 பேர் இந்த விமானத்தில் பயணம் செய்ய முடியும்.

 

ஆரம்ப நிலையில், இந்த நிறுவனத்திற்கு மூன்று ஆண்டுகள் ஒப்பந்தம் கொடுக்கப்பட்டு இருந்தது. இந்த ஒப்பந்தம் 2021ம் ஆண்டுடன் முடிந்த நிலையில் மீண்டும் ஓராண்டுக்கு ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டது. எனினும், கரோனா உள்ளிட்ட காரணங்களால் விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது. இதற்கிடையே, ட்ரூஜெட் நிறுவனத்தை டர்போ மெகா ஏர்வேஸ் நிறுவனம் கையகப்படுத்தி உள்ளது. 

 

அதேநேரம், சேலத்தில் இருந்து சென்னைக்கு தினமும் பயணிகள் விமானத்தை இயக்க வேண்டும் என்று வர்த்தகர்கள், பொதுமக்களிடையே தொடர்ந்து கோரிக்கை எழுந்தன. 

Salem - Chennai Airlines; Starting again from March!

இது தொடர்பாக சேலம் தி.மு.க. எம்.பி., பார்த்திபன், கடந்த 8.12.2021ம் தேதி மக்களவையில் நேரமில்லா நேரத்தில் பேசும்போது, சேலம் மாவட்ட மக்களின் முக்கிய கோரிக்கையான சேலம் - சென்னை இடையிலான விமான சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதன்பின், கடிதங்கள் வாயிலாகவும் நினைவூட்டினார். 

 

அவருடைய கோரிக்கையை பரிசீலித்த மத்திய அரசு, வரும் மார்ச் மாதம் முதல் மீண்டும் சேலம் - சென்னை பயணிகள் விமான சேவை தொடங்கப்படும் என்று பதில் அளித்துள்ளது. 

 

இது தொடர்பாக சாலை மற்றும் விமானப் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் விஜய்குமார் சிங், எம்பி., பார்த்திபனுக்கு கடந்த 31.12.2021ம் தேதி எழுதியுள்ள கடிதத்தில், ''உடான் திட்டத்தின் கீழ் சென்னை - சேலம் - சென்னை வழித்தடத்தில் கடந்த 25.3.2018ம் தேதி பயணிகள் விமான சேவை தொடங்கப்பட்டது. 

 

இந்த சேவைக்கான மூன்று ஆண்டு ஒப்பந்தக்காலம் முடிவடைந்து விட்ட நிலையில், மீண்டும் ஓராண்டு காலம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, வரும் மார்ச் மாதம் முதல் மேற்கண்ட வழித்தடத்தில் மீண்டும் விமான சேவை தொடங்கப்படும்,'' என்று குறிப்பிட்டுள்ளார். 

 

இதுகுறித்து சேலம் விமான நிலைய அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "பயணிகள் விமான சேவையைத் தொடங்குவது குறித்து இன்னும் எங்களுக்கு மத்திய அரசிடம் இருந்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வரவில்லை. 

 

கடைசியாக கடந்த 2021ம் ஆண்டு ஜூன் 2- ஆம் தேதி இந்த விமானம் இயக்கப்பட்டது. 68 இருக்கைகள் நிரம்பி இருந்தன. வர்த்தக ரீதியாக சென்னை - சேலம் - சென்னை வழித்தடத்தில் விமான சேவை திருப்திகரமாக இருந்து வந்தது. அதனால்தான் மாலை வேளையிலும் விமான சேவையைக் கொண்டு வருவதற்கான பணிகள் அப்போது நடந்தன. அதன்பின் என்ன நடந்ததோ தெரியவில்லை. அந்தப்பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன,'' என்றார். 

 

சேலத்தில் இருந்து மீண்டும் விமான சேவை தொடங்க உள்ள தகவல் வணிகர்கள், பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெறுப்பு பிரச்சாரம்; மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டி போராட்டம் (படங்கள்)

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, வெறுப்பு பிரச்சாரம் செய்துவரும்  பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவும், வழக்கு பதிவு செய்திடவும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் மத்திய சென்னை மாவட்டம் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை கண்டனம் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. பிறகு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க, பேரணியாக சென்றனர்.

Next Story

ஷர்மிளா தற்கொலை விவகாரம்; ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Sharmila incident RdO Order for investigation

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணை கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்த காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால் ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியுள்ளதோடு கொலைக்கு காரணமானவர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஷர்மிளாவின் உடற்கூராய்வு சற்று நேரத்தில் நடைபெற உள்ளது எனவும், உடற்கூராய்வு வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.