Skip to main content

வேளாண் சட்டத்தை எதிர்த்து சிறையில் மாவோயிஸ்ட் சாகும் வரை உண்ணாவிரதம்!

Published on 23/02/2021 | Edited on 23/02/2021

 

salem central jail prisoner fasting

 

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாவோயிஸ்ட் போராளி சுரேஷ்ராஜன் கடந்த இரண்டு நாட்களாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்.

 

சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி அருகே உள்ள ராமமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் மணிவாசகம், மாவோயிஸ்ட். கேரள வனப்பகுதியில் தலைமறைவாக இருந்து போராடி வந்தார். கடந்த 2019- ஆம் ஆண்டு, அம்மாநில தண்டர்போல்ட் அதிரடிப் படையினருக்கும், மாவோயிஸ்ட்களுக்கும் இடையே நடந்த மோதலில் மணிவாசகம் சுட்டுக் கொல்லப்பட்டார்.

 

சொந்த ஊரில் அவருடைய உடல் தகனம் செய்யப்பட்டது. அப்போது, அரசுக்கு எதிராகவும், ‘ரத்தத்திற்கு ரத்தத்தால் பழி வாங்குவோம்’ என்றும் மாவோயிஸ்ட் போராளிகள் சபதம் எடுத்தனர்.

 

இது தொடர்பாக தீவட்டிப்பட்டி காவல்துறையினர், 16 பேர் மீது வழக்குப் பதிவுசெய்தனர். இந்த வழக்கில் சில நாட்களுக்கு முன்பு, மதுரையைச் சேர்ந்த மாவோயிஸ்ட் சுரேஷ் ராஜன் (45) என்பவரை கைது செய்தனர். அவரை ஓமலூர் நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர்படுத்திய காவல்துறையினர், நடுவர் உத்தரவின்பேரில் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். 

 

இந்நிலையில், சேலம் சிறையில் பிப். 21- ஆம் தேதி மதியம் திடீரென்று உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார் சுரேஷ்ராஜன். சிறை வார்டன்கள் அவருக்கு மதிய உணவு கொண்டு வந்து கொடுத்தபோது, அதை சாப்பிட மறுத்ததோடு, உணவையும் திருப்பி அனுப்பினார்.

 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்; மத்திய அரசின் புதிய வேளாண்மை சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்; இந்தச் சட்டத்திற்கு எதிராக போராடி வரும் விவசாயிகளை ‘தேச விரோதிகள்’ என அறிவிப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும்; விவசாயிகள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும்; 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள அரசியல் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.

 

மாவோயிஸ்ட் சுரேஷ்ராஜன் தொடர்ந்து இரண்டாம் நாளாக திங்களன்றும் (பிப். 22) உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். ‘கோரிக்கைகள் நிறைவேறும் வரை உணவு உண்ண மாட்டேன்’ என்றார். அவரிடம் சிறைத்துறை அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

 

இந்தச் சம்பவம் சிறைத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.