Skip to main content

கந்துவட்டி கொடுமை; விபரீத முடிவெடுத்த தம்பதியினர் 

Published on 26/01/2023 | Edited on 26/01/2023

 

salem azhagapuram over interest married couple incident 

 

சேலம் அழகாபுரம் புதூரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 66). இவருடைய மனைவி சாந்தி (வயது 56). இவர்களுக்கு ராம கவுண்டர், ராமவேல் ஆகிய இரு மகன்களும், தமிழரசி என்ற மகளும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. மகன்கள் இருவரும் பெற்றோருடன் வசித்து வருகின்றனர். ராஜேந்திரன், பெரிய புதூரில் சொந்தமாக சைக்கிள் கடை வைத்திருந்தார். கடந்த 2000ம் ஆண்டில் ராஜேந்திரன் உள்பட 9 பேர் கூட்டாக சேர்ந்து வாங்கிய லாட்டரி டிக்கெட்டில் 7 கோடி ரூபாய் பரிசு விழுந்தது. அதில், ராஜேந்திரனின் பங்காக ஒரு கோடி ரூபாய் கிடைத்தது. அந்தப் பணத்தை வைத்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை (24.01.2023) அதிகாலை 5 மணியளவில், ராஜேந்திரனின் இளைய மகன் ராமவேல், மாடியிலிருந்து கீழே இறங்கி வந்தபோது, பெற்றோர் தங்கியிருந்த அறைக் கதவு திறந்து கிடந்ததைக் கண்டு அங்கு சென்று பார்த்தபோது, அறைக்குள் தாயும், தந்தையும் வாயில் நுரை தள்ளிய நிலையில் சடலமாகக் கிடந்துள்ளனர்.

 

இதைப் பார்த்த அதிர்ச்சியில் ராமவேல் கதறி அழுதார். இதுகுறித்து தகவல் அறிந்த அழகாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, இருவரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறை விசாரணையில், ராஜேந்திரன் வீடு கட்டுவதற்காக வங்கியில் கடன் பெற்றுள்ளார். அதை திருப்பிச் செலுத்த முடியாததால்  அதே பகுதியைச் சேர்ந்த நடேசன் என்பவரிடம் கடந்த 2018ம் ஆண்டு 19 லட்சம் ரூபாய் வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார். அந்தப் பணத்தைக் கொண்டு வங்கி கடன் நிலுவையை செலுத்திய ராஜேந்திரன், வங்கியில் இருந்து வீட்டு பத்திரத்தையும் மீட்டுக் கொண்டு வந்துள்ளார். அந்தப் பத்திரத்தை நடேசனிடம் வாங்கிய கடனுக்கு அடமானமாக கொடுத்துள்ளார். அசலாக 19 லட்சம் ரூபாய் கடன் கொடுத்துவிட்டு அதற்கு  21 லட்சம் ரூபாய் வட்டியுடன் மொத்தம் 40 லட்சம் ரூபாய் கேட்டு கந்துவட்டிக்காரர்கள் மிரட்டி வந்துள்ளனர்.

 

ஆனால் நடேசனிடம் வாங்கிய கடன் அசல், வட்டி ஆகியவற்றை அவர் சரியாக திருப்பிச் செலுத்தவில்லை எனத் தெரிகிறது. இதனால் அசல், வட்டி, வட்டிக்கு வட்டி என கடன் சுமை அதிகரித்துள்ளது. இதற்கிடையே நடேசனும் அவருடைய குடும்பத்தினரும் கடன் பாக்கிக்காக ராஜேந்திரனின் வீட்டை தங்கள் பெயருக்கு எழுதித் தரும்படி அவரை தொந்தரவு செய்து  வந்துள்ளனர். சம்பவத்தன்று இரவும் நடேசன் தரப்பினர் அவரிடம் கடன் தொகையை திருப்பிக் கேட்டு ஆபாச சொற்களால் திட்டி விட்டுச் சென்றுள்ளனர். கடன் கொடுத்தவர்கள் அடிக்கடி வீட்டு வாசலில் நின்றபடி ஆபாசமாக திட்டி விட்டுச் செல்வதால் ராஜேந்திரன், சாந்தி ஆகியோர் மனம்  உடைந்த நிலையில், ஒரு கட்டத்தில் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்துள்ளனர். அதையடுத்து அவர்கள் சம்பவத்தன்று இரவு விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 

தம்பதியினர் இறந்து கிடந்த அறையில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். அங்கிருந்து ராஜேந்திரன் கைப்பட எழுதிய ஒரு தற்கொலை குறிப்பு கடிதம் கைப்பற்றப்பட்டது. அந்தக் கடிதத்தில், ''எங்கள் சாவுக்கு நடேசன், அவருடைய மகன்கள், மகள், மருமகன் உள்ளிட்ட 6 பேரும் தான் காரணம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று எழுதப்பட்டு இருந்தது. இதையடுத்து நடேசனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அவர், உள்ளூரைச் சேர்ந்த உலகநாதன் என்பவரிடம் இருந்து குறைந்த வட்டிக்கு கடன் பெற்று அந்தப் பணத்தை நடேசன் கூடுதல் வட்டிக்கு ராஜேந்திரன் உள்ளிட்ட பலருக்கு கடன் கொடுத்துள்ளது தெரிய வந்தது. இதையடுத்து நடேசன், உலகநாதன் ஆகிய இருவர் மீதும் கந்துவட்டி தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

நீரோடையில் மிதந்த சடலம்; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
A body lying in a stream; Police investigation shocked

தந்தையைக் கொலை செய்தவரைப் பழிக்குப் பழி கொலை செய்து நீரோடையில் வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் தெற்கு ஏறாந்தை கிராமத்தில் வசித்து வருபவர் தேவபாலன். லாரி ஓட்டி வந்த தேவபாலன் திடீரென காணாமல் போன நிலையில், உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நீரோடை ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தகவல் பரவியது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார் ஆய்வு செய்ததில், வெட்டுக் காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு நீரோடையில் வீசப்பட்டது தெரிய வந்தது.

உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன தேவபாலன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தேவபாலன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தூர் நீதிமன்றத்தில் உத்திரகுமார், சுரேஷ்குமார், சேர்மதுரை உள்ளிட்ட மூன்று பேர் சரணடைந்தனர். மூவரும் சகோதரர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழிக்குப் பழியாக லாரி டிரைவரை கொலை செய்தது தெரியவந்தது.

2017 ஆம் ஆண்டு துரைபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேவபாலனுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணம் ஆகாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், துரைபாண்டியனின் மகன்களான சுரேஷ்குமார், உத்திர குமார், சேர்மதுரை ஆகிய மூன்று பேரும் பல வருடங்கள் கழித்து தேவபாலனை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.