Skip to main content

போலி நீதிமன்ற உத்தரவு நகல் சமர்ப்பிப்பு; அரசுப் பள்ளி ஆசிரியரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி  

Published on 08/06/2023 | Edited on 08/06/2023

 

 Salem Attur Court dismisses government school teachers anticipatory bail pla

 

மனைவிக்கு ஜீவனாம்ச தொகையைத் தனது சம்பளத்தில் பிடித்தம் செய்யக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது போன்ற போலி உத்தரவு நகல்களை சமர்ப்பித்த வழக்கில், அரசுப் பள்ளி ஆசிரியரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.    

 

சேலம் மாவட்டம் ஆத்தூர் புதூரைச் சேர்ந்தவர் சரவணன் (45) அரசுப்பள்ளி ஆசிரியர். இவருடைய முதல் மனைவி கலா. கருத்து வேறுபாட்டால் இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டனர். இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில், கலாவுக்கு ஆசிரியர் சரவணனின் ஊதியத்தில் இருந்து மாதம்தோறும் ஜீவனாம்சத்திற்காக குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. இந்நிலையில் சரவணன், ஆத்தூர் 2வது நீதித்துறை நடுவர் மன்றத்தின் பேரில்  ஒரு உத்தரவு நகலை, அவர் முன்பு பணியாற்றி வந்த கள்ளக்குறிச்சி  மாவட்டம் சிக்காடு அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்கினார். அந்த உத்தரவு நகலில், சரவணனின் முதல் மனைவி கலாவுக்கு தனது சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட ஜீவனாம்ச தொகையை அவர் கோரவில்லை. எனவே பிடித்தம் செய்யப்பட்ட தொகையை வட்டியுடன் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

 

அதேபோல, தற்போது பணியாற்றி வரும் எலவாடி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரிடமும் அதே நீதிமன்றம் உத்தரவிட்டது போன்ற ஒரு உத்தரவு நகலை சமர்ப்பித்தார். அந்த உத்தரவில், முதல் மனைவி கலாவுக்கு கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் ஜீவனாம்சமாக மாதம் 9000  ரூபாய் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது. ஆனால் அவர் ஜீவனாம்ச தொகை வேண்டாம் என்று கலா சொல்லிவிட்டார்.  எனவே, 2022 ஆம் ஆண்டு முதல் சரவணனுடைய சம்பளத்தில் ஜீவனாம்ச தொகை பிடித்தம் செய்ய வேண்டாம் என்று கூறப்பட்டு இருந்தது. இந்த இரு உத்தரவு நகல்களின் மீதும் இரண்டு தலைமை ஆசிரியர்களுமே சந்தேகம் அடைந்தனர். இதையடுத்து உத்தரவின் உண்மைத்தன்மை குறித்து அறிய அவற்றை ஆத்தூர் 2வது நீதித்துறை நடுவர் மன்றத்திற்கு அனுப்பி வைத்து விவரம் கோரினர். இந்த உத்தரவு நகல்களை ஆய்வு செய்த நீதிமன்ற எழுத்தர் செல்வி, இப்படி ஒரு உத்தரவை ஆத்தூர் நீதிமன்றம் பிறப்பிக்கவில்லை என்றும், இவை இரண்டுமே போலியானவை என்றும் கூறினார்.

 

மேலும் செல்வி, இது தொடர்பாக ஆசிரியர் சரவணன் மீது ஆத்தூர் காவல் நிலையத்தில்  புகார் அளித்தார். அதன் பேரில் ஆத்தூர் காவல் நிலைய காவல்துறையினர் கடந்த ஆண்டு சரவணன் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் ஆசிரியர் சரவணன், முன்ஜாமீன் கோரி சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி சுமதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் தம்பிதுரை ஆட்சேபனை தெரிவித்தார். ஆசிரியரே மோசடியாக  நீதிமன்ற உத்தரவுகளை தயாரித்துள்ளது அதிர்ச்சியாக உள்ளது. அதனால் அவருடைய முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்  என்றார். அரசுத் தரப்பு வழக்கறிஞரின் வாதத்தை ஏற்ற நீதிபதி சுமதி, ஆசிரியர் சரவணனின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதையடுத்து அவரை கைது செய்ய ஆத்தூர் நகர காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.