Skip to main content

அ.தி.மு.க. பெண் பிரமுகரைக் கொன்றது ஏன்? கைதானவர் பகீர் வாக்குமூலம்!

Published on 22/05/2020 | Edited on 22/05/2020

 

police


அ.தி.மு.க. பெண் பிரமுகர் கொல்லப்பட்ட வழக்கில் கைதான இளைஞர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.


சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள சந்தியூர் ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்தவர் மணி. இவருடைய மனைவி சாந்தா (50). ஸ்டார்ச் மாவு வியாபாரம் செய்து வந்தார். பனைமரத்துப்பட்டி ஒன்றிய அ.தி.மு.க. மகளிர் அணி தலைவராகவும், பெரமனூர் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தின் இயக்குநர்களுள் ஒருவராகவும் இருந்து வந்தார். 
 


சாந்தாவின் மருமகள் வைத்தீஸ்வரி. இவர், பனைமரத்துப்பட்டியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் வேலை செய்து வருகிறார். ஊரடங்கு காரணமாக பேருந்து போக்குவரத்து இல்லாததால், வேலை முடிந்து வீடு திரும்பும் மருமகளை தானே இருசக்கர வாகனத்தில் நேரில் சென்று அழைத்து வந்துள்ளார்.


புதன்கிழமை (மே 20) மாலை 6 மணியளவில், தனது இருசக்கர வாகனத்தில் மருமகளை அழைத்து வருவதற்காக பனைமரத்துப்பட்டி நோக்கிச் சென்று கொண்டிருந்தார். நீண்ட நேரம் ஆகியும் மாமியார் வராததால் சந்தேகம் அடைந்த வைத்தீஸ்வரி, வீட்டில் இருக்கும் உறவினர்களுக்குத் தகவல் கொடுத்துள்ளார்.


இது ஒருபுறம் இருக்க, பனைமரத்துப்பட்டி செல்லும் வழியில் ஓரிடத்தில் சாந்தா ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தார். மர்ம நபர்கள் அவரை வயிறு, மார்பு, தலை ஆகிய இடங்களில் தாக்கியிருப்பதும், அதனால் ரத்தக்காயங்கள் ஏற்பட்டிருப்பதும் தெரிய வந்தது. 


அந்த வழியாகச் சென்றவர்கள் இதுகுறித்து மல்லூர் காவல்நிலையத்திற்குத் தகவல் அளித்தனர். ஆய்வாளர் அம்சவள்ளி மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கத்தி போன்ற கூர்மையான ஆயுதம் மற்றும் கல்லால் தாக்கி கொலை செய்திருப்பதும், மாலை 5.20 மணி முதல் 5.30 மணிக்குள் கொலை நடந்திருக்கலாம் என்பதும் உடற்கூறாய்வில் தெரிய வந்தது.


எஸ்.பி. தீபா கனிகர், புறநகர் டி.எஸ்.பி. உமாசங்கர் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரித்தனர்.

 

ramesh


காவல்துறை விசாரணையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. சாந்தா கொல்லப்பட்டதன் பின்னணியில் ஊர் மக்களின் ஒட்டுமொத்த சந்தேகமும் மல்லூர் எஸ்.ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்த ரவி என்பவருடைய மகன் ரமேஷ் (26) என்பவர் மீது இருந்தது. இருவருமே பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி உறவினர்கள்தான் என்கிறார்கள். ரமேஷை உள்ளூரில் கழுதை பாலு என்றும் பட்டப்பெயரிட்டு அழைக்கின்றனர். அவர் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். 
 


அவருக்கும் சாந்தாவுக்கும் கடந்த ஓராண்டுக்கு மேலாகவே முன்விரோதம் இருந்து வந்ததும் தெரிய வந்தது. இந்தக் கொலைக்கு நான்கு முக்கிய 'மோட்டிவ்'கள் இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை முடுக்கினர். 


கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு, சாந்தா வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த அவருக்குச் சொந்தமான ஆட்டோ ஒன்று திடீரென்று காணாமல் போனது. இதுபற்றி சாந்தா மல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரில் ரமேஷ் மீது சந்தேகம் இருப்பதாகக் கூறியிருந்தார். இந்தப் புகார் அளித்த அடுத்த இரு நாள்களில் காணாமல் போனதாக கூறப்பட்ட ஆட்டோ, அப்பகுதியில் கேட்பாரற்று நிறுத்தப்பட்டு இருந்தது. 


இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், ஆட்டோவை மீட்டு சாந்தாவிடம் ஒப்படைத்தனர். எனினும் ஆட்டோ மாயமானதற்கும் ரமேஷூக்கும் தொடர்பு இருப்பதாக ஆதாரம் இல்லாததால் காவல்துறையினரும் அப்போது வழக்குப்பதிவு செய்யவில்லை. ஆனால் இந்த விவகாரத்தில் சாந்தா மீது ரமேஷூக்கு கடும் ஆத்திரம் இருந்தது.


இதுமட்டுமின்றி ரமேஷ், கள்ளச்சாராயம் விற்பதாகவும், உள்ளூரில் நடக்கும் அத்தனை ரவுடித்தனங்களுக்கும் ரமேஷ்தான் காரணம் என்றும், அவர் கூலிப்படை ரவுடி என்றும் சாந்தா அடிக்கடி அவர் மீது புகார் கூறி வந்திருக்கிறார். ஒருகட்டத்தில், அவர் மீது 'ஹிஸ்டரி ஷீட்' பதிவு செய்து, குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறும் காவல்துறையினருக்கு அழுத்தம் கொடுத்து வந்துள்ளார் என்கிறார்கள்.


அவர்களுக்குள் மற்றொரு சம்பவமும் முன்விரோதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ரமேஷின் பெரியப்பா முருகேசன் தற்போது சந்தியூர் ஆட்டையாம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவராக இருக்கிறார். கடந்த ஏப்ரல் மாதம் தமிழக அரசு ரேஷன் கடைகள் மூலம் 1,000 ரூபாய் கரோனா நிவாரண நிதியுதவி வழங்கியது. நிவாரணத் தொகையை வழங்கும் திட்டத்தை சாந்தா முன்னின்று துவக்கி வைத்திருக்கிறார். அப்போது ரமேஷ், எங்கள் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நீங்கள் எப்படி நிவாரண உதவி வழங்கலாம் எனக்கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது இருதரப்புக்கும் பெரிய அளவில் வார்த்தைப் போர் ஏற்பட்டுள்ளது. பலர் தலையிட்டு அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.


ரமேஷ் மீது சாந்தாவுக்கு விரோதம் ஏற்பட வேறு ஒரு முக்கியமான மோட்டிவ் இருந்ததும் காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது. அதாவது, சாந்தாவின் அண்ணன் மகள் உமாவுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாட்டால் அவர் கணவரை பிரிந்து மல்லூரில் வாழ்ந்து வருகிறார். அவருடன் ரமேஷூக்கு 'நெருக்கமான உறவு' இருந்து வந்திருக்கிறது. அண்ணன் மகளுடனான தொடர்பை விட்டுவிடுமாறு சாந்தா பலமுறை எச்சரித்தும், கேட்காததால்தான் அவர் மீது காவல்துறையிடம் அடுக்கடுக்காக பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சொல்லி வந்திருக்கிறார் என்கிறார்கள் உள்ளூர்க்காரர்கள். 


இந்த நிலையில்தான் ரேஷன் கடையில் நிவாரண நிதி வழங்கிய அன்று ஏற்பட்ட மோதல் அவர்களிடையே யார் முதலில் தீர்த்துக்கட்டுவது என்ற கடுமையான விரோதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சாந்தாவும் கூலிப்படையை வைத்து ரமேஷை தீர்த்துக்கட்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்தார் என்றும் சொல்கிறார்கள். அதற்குள் ரமேஷ் முந்திக்கொண்டு சாந்தாவைக் கொலைசெய்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. 


சம்பவத்தன்று அவரை தீர்த்துக்கட்டிய ரமேஷ், சாந்தாவின் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு ராசிபுரத்தில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் சென்று பதுங்கிக் கொண்டார். காவல்துறையினர் தேடுகிறார்கள் என்பதை அறிந்த அவர், அங்கிருந்து தப்பிப்பதற்காக அத்தனூர் அருகே வந்து கொண்டிருந்தபோது மே 21 ஆம் தேதி மாலையில், மல்லூர் காவல்துறையினர் மடக்கிப்பிடித்து கைது செய்துள்ளனர். சடலம் கிடந்த இடத்திற்குச் சில அடி தூரத்தில் கொலைக்குப் பயன்படுத்திய கத்தி ஒன்றையும் காவல்துறை பறிமுதல் செய்துள்ளது.
 

http://onelink.to/nknapp


மேலும், சம்பவ இடத்தில் ரமேஷ் சுற்றிக்கொண்டிருந்ததைப் பார்த்த நேரடி சாட்சியங்களின் வாக்குமூலங்களையும் காவல்துறையினர் பதிவு செய்திருக்கிறார்கள். காவல்துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தில், ''சாந்தா உயிருடன் இருந்திருந்தால் கூலிப்படை மூலம் என்னை நிச்சயமாக காலி செய்திருப்பார். அவர் இருக்கும் வரை எனக்கு நிம்மதியே கிடையாது. அதனால்தான் அவர் முந்திக்கொள்வதற்குள் நானே முந்திக்கொண்டு அவரை தீர்த்துக் கட்டிட்டேன்,'' என்று கூறியுள்ளார். 

 


என்றாலும், இச்சம்பவத்தில் மேலும் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. 
 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்” - மா.செ. ராஜேந்திரன் நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Rajendran Hope DMK alliance will definitely win in all 40 constituencies

தமிழகம், புதுவையில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வெள்ளிக்கிழமை (ஏப்.19) தேர்தல் நடந்தது.சேலம் நாடாளுமன்றத் தொகுதியைப் பொருத்தவரை திமுக சார்பில் சேலம் மேற்கு மா.செ.,டி.எம்.செல்வகணபதி போட்டியிடுகிறார். எம்எல்ஏவும், மத்திய மா.செ.வுமான ராஜேந்திரன், சேலம் சி.எஸ்.ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் அவருடையமனைவி, மகளுடன் வந்து வாக்களித்தார்.

இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''தமிழக அரசின் சாதனைத் திட்டங்களான விடியல் பேருந்து பயணத் திட்டம், மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன்திட்டம் உள்ளிட்ட நலத்திட்டங்களே திமுக கூட்டணிக்கு வெற்றியைத் தேடித்தரும். பெண்களை முன்னிறுத்தி தமிழக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெண்களுக்குஆதரவு தரும் தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார்.  இந்த தேர்தலில் நிச்சயமாக தமிழகம்,புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். அதிமுகவுக்கு இரண்டாம்கிடைக்க வாய்ப்பு உள்ளது,'' என்றார்.

Rajendran Hope DMK alliance will definitely win in all 40 constituencies

திமுக நிர்வாகிகள் ஷா நவாஸ், கே.டி.மணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இது ஒருபுறம் இருக்க, சேலம் தொகுதி திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி, சேலம் சாரதாபாலமந்திர் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது மனைவியுடன் வாக்களித்தார். பின்னர் அவர் கூறுகையில், ''திமுக ஆட்சியின் நலத்திட்டங்கள்தான் இந்த தேர்தலில் கதாநாயகன். பெண்களுக்கான பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதால் அவர்களின் ஆதரவு திமுகவுக்குகிடைத்துள்ளது. நாடும் நமதே; நாற்பதும் நமதே,'' என்றார்.

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.