Skip to main content

சேலத்தில் சினிமா பாணியில் சம்பவம்!வாலிபர்களை கடத்தி பணம் பறித்த போலீஸ் எஸ்.ஐ. உள்பட 8 பேர் கைது!

Published on 31/12/2018 | Edited on 31/12/2018
a

 

சேலத்தில் சினிமா பாணியில் திட்டமிட்டு வாலிபரை கடத்தி, அடைத்து வைத்து பணம் பறித்த சிறப்பு எஸ்ஐ உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.


நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் புதுத்தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல் (20). தனியார் மருந்து நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர், அதே பகுதியைச் சேர்ந்த மின்னணு பொருள்களை விற்பனை செய்து வரும் பூபதி என்பவரிடம் புதிய செல்போன் வாங்கித்தர கேட்டிருந்தார். அதற்காக அவர் பூபதியிடம் 60 ஆயிரம் ரூபாய் கொடுத்திருந்தார்.


ஆனால் பூபதி செல்போன் வாங்கித்தராமல் சாக்கு போக்குச் சொல்லி, காலம் கடத்தி வந்தார். இதையடுத்து பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடும்படி சக்திவேல் அடிக்கடி பூபதியிடம் கேட்டு வந்தார்.


இந்நிலையில் பூபதி, 'தான் புதிதாக 9 செல்போன்கள் கொண்ட பார்சலை தருகிறேன். அவற்றை எடுத்துச்சென்று, சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே உள்ள தனது நண்பர்களிடம் கொடுத்தால், அவர்கள் அதற்குரிய பணம் தருவார்கள். நான் உனக்குத் தர வேண்டிய பணத்தை அதிலிருந்து எடுத்துக்கொள்,' என்று கூறியதோடு, செல்போன் பார்சலையும் அவரிடம் கொடுத்து அனுப்பினார்.


இதை நம்பிய சக்திவேல், துணைக்கு பிரபாகரன் என்ற நண்பரை அழைத்துக்கொண்டு செல்போன் பார்சலுடன் சேலம் வந்தார். கொண்டலாம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே அவர்கள் பார்சலுடன் காத்திருந்தனர். அப்போது பூபதி அனுப்பியதாகச் சொல்லி அங்கு வந்த 7 பேர் கொண்ட கும்பல், சக்திவேலிடம் இருந்து பார்சலை வாங்கி பிரித்து பார்த்தனர். அந்த பார்சலில் செல்போன்கள் இல்லாமல், சாக்லெட்டுகளும், கற்களும் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

 

a


இதையடுத்து அந்த கும்பல் இருவரையும் கடத்திச்சென்று, அஸ்தம்பட்டியில் உள்ள ஒரு குடோனில் அடைத்து வைத்தனர். கடுமையாக தாக்கியுள்ளனர். ஏற்கனவே பூபதி, கேமரா வாங்கிக் தருவதாகக்கூறி 2 லட்சம் ரூபாய் ஏமாற்றிவிட்டதோடு, இப்போது சாக்லெட் பார்சலை செல்போன் என்று கூறி ஏமாற்றப் பார்க்கிறீர்களா? உடனடியாக 50 ஆயிரம் ரூபாய் கொடுத்தால்தான் இங்கிருந்து நீங்கள் ஊருக்குப் போக முடியும் என்றும் மிரட்டியுள்ளனர்.


சக்திவேல், பிரபாகரன் ஆகியோரிடம் இருந்த ஏடிஎம் கார்டை பறித்துக்கொண்ட அந்த கும்பல், ஏடிஎம் மெஷினில் செலுத்தி பார்த்தபோது, அவர்கள் வங்கிக் கணக்கில் பணம் இல்லாமல் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த கும்பல், அவர்களின் பெற்றோர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, 'உங்கள் மகனை கடத்தி வைத்திருக்கிறோம். உடனடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் 50 ஆயிரம் ரூபாய் செலுத்தினால்தான் விடுவிப்போம்,' என்றும்  தெரிவித்துள்ளனர். 


பயந்துபோன பெற்றோர்கள் அவர்களின் வங்கிக் கணக்கில் 43 ஆயிரம் ரூபாய் செலுத்தினர். அதை எடுத்துக்கொண்ட கடத்தல் கும்பல், சக்திவேல் மற்றும் பிரபாகரனை விடுவித்தனர்.


இதுகுறித்து சக்திவேல் கொண்டலாம்பட்டி போலீசில் புகார் அளித்தார். விசாரணையில், சேலம் நெத்திமேட்டைச் சேர்ந்த கரண் (28) என்பவர் தலைமையிலான ஏழு பேர் கும்பல்தான் தன்னையும், நண்பரையும் கடத்திச்சென்று, மிரட்டிப் பணம் பறித்தது என்பது தெரிய வந்தது.


கரணிடம் புதிய கேமரா வாங்கிக் கொடுப்பதாக பூபதி 2 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார். கேமரா வாங்கித்தராததோடு, பணத்தையும் திருப்பித் தராமல் இழுத்தடித்து வந்துள்ளார். இந்த நிலையில்தான் செல்போனுக்காக கொடுத்த பணத்தை சக்திவேல் திரும்பித் தருமாறு கேட்டு பூபதிக்கு குடைச்சல் கொடுத்து வந்துள்ளார்.


சக்திவேலையும், கரணையும் மோதவிட்டு குளிர்காய திட்டம் போட்டார் பூபதி. இதையடுத்துதான் சக்திவேலிடம் விலையுயர்ந்த 9 செல்போன்கள் கொண்ட பார்சலை கொடுத்து அனுப்பி இருப்பதாகவும், தான் கொடுக்க வேண்டிய பணத்துக்கு ஈடாக அதை வைத்துக்கொள்ளுமாறும் கரணுக்கு தகவல் அளித்துள்ளார். அப்போதுதான் பார்சலில் வெறும் சாக்லெட்டுகளும், கற்களும் இருந்ததைக் கண்டு ஏமாற்றமும் அதிர்ச்சியும் அடைந்த கரண், தன் கூட்டாளிகளுடன் சக்திவேலையும், அவருடைய நண்பரையும் கடத்தியுள்ளார். செல்போன் பார்சலுடன் வந்த இருவருமே பூபதியின் ஆள்கள்தான் என்றும் கரண்  கருதியதும் அவர்களைக் கடத்த முக்கிய காரணமாக இருந்திருப்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.


இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக கரண் மட்டுமின்றி அவருடைய கூட்டாளிகளான சேலம் கோட்டையைச் சேர்ந்த முகமது பாஷா (30), அக்தர் அலி (39), ஆசிப் (28), அப்துல் லத்தீப் (36), மேட்டுத்தெருவைச் சேர்ந்த இம்ரான் (36), நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த சரவணன் (38) ஆகிய 7 பேரையும் கைது செய்தனர்.


இந்த கும்பல் சக்திவேலையும், பிரபாகரனையும் கடத்திச்சென்று அடைத்து வைத்திருந்த குடோனுக்கு அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் சிறப்பு எஸ்ஐ சுப்ரமணி சீருடையில் சென்றுள்ளார். அவரும் கடத்தல் கும்பலுடன் சேர்ந்து பணம் கேட்டு மிரட்டியுள்ளார். கிடைத்த பணத்தில் எஸ்எஸ்ஐக்கு பத்தாயிரம் ரூபாயை அந்த கும்பல் கொடுத்திருப்பதும், அதனால் கடத்தல் பற்றிய விவரங்களை எஸ்எஸ்ஐ சுப்ரமணி காவல்துறையில் சொல்லாமல் மறைத்து இருப்பதும் தெரிய வந்துள்ளது. 


இதையடுத்து, கடத்தல் குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக சிறப்பு எஸ்ஐ சுப்ரமணியையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் சிறப்பு எஸ்ஐ உள்பட மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும், நீதிமன்ற உத்தரவின்பேரில் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 


மேலும், மோசடியில் ஈடுபட்ட பூபதியை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

வாச்சாத்தி வன்கொடுமை; குற்றவாளிகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

Published on 13/10/2023 | Edited on 13/10/2023

 

Accused in Vachathi case appeal in Supreme Court

 

தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தி மலைக் கிராமத்தில் சந்தன மரங்கள் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறி கடந்த 1992 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் வருவாய்த்துறை, வனத்துறை மற்றும் காவல்துறையினர் இணைந்து அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது வாச்சாத்தி மலைக் கிராமத்தில் உள்ள 18 இளம்பெண்களை அரசு அதிகாரிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்தது. அதனைத் தொடர்ந்து இந்த குற்றச்சாட்டு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு 4 இந்திய வனப் பணியைச் (IFS) சேர்ந்த அதிகாரிகள் உட்பட 269 பேர் மீது பல பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

 

19 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில் விசாரணை நடந்த காலகட்டத்திலேயே வழக்கில் சம்பந்தப்பட்ட 54 பேர் இறந்தனர். மீதமுள்ள 215 பேருக்கு ஓராண்டு முதல் 10 ஆண்டுகள் வரை விசாரணை நீதிமன்றம் 2011 ஆம் ஆண்டு தண்டனை வழங்கி இருந்தது. இதில் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு நிரூபணம் செய்யப்பட்டது. தண்டனை பெற்றவர்கள், தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

 

இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி. வேல்முருகன், கடந்த மார்ச் 4 ஆம் தேதி வாச்சாத்தி மலைக் கிராமத்திற்கு நேரில் சென்றும் விசாரணை செய்திருந்தார். இதையடுத்து இந்த வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் முடிவடைந்த கடந்த மாதம் 29 ஆம் தேதி (29.09.2023) சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை நீதிமன்றம் கொடுத்த தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது. மேலும் நீதிபதி வேல்முருகன், வாச்சாத்தியில் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் அவர்களின் குடும்பத்துக்கு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் அல்லது தனியார், சுய வேலைவாய்ப்புக்கு வழிவகை செய்ய வேண்டும். வாச்சாத்தி நிகழ்வின் போது அப்போதைய எஸ்.பி, ஆட்சியர், வனத்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றம் புரிந்தவர்களிடம் இருந்து தலா 5 லட்சம் ரூபாய் வசூலிக்க வேண்டும்' என உத்தரவிட்டார்.

 

இந்த நிலையில் இந்த வழக்கில் குற்றவாளிகள் 19 பேர் தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளனர். ஏற்கனவே வழக்கின் முதன்மை குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட வனப்பணி அதிகாரி நாதன் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வரவுள்ள நிலையில், தற்போது சிதம்பரம் உள்ளிட்ட 19 பேர் தங்களது தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.

 

 

Next Story

போலீசார் அந்தப்பக்கம் திரும்பியிருக்க இந்தப்பக்கம் குற்றவாளிக்கு கஞ்சா சப்ளை; தீயாய் பரவும் வீடியோ

Published on 23/11/2022 | Edited on 23/11/2022

 

 This side supplies ganja to the criminal while the police turn away; A viral video

 

மதுரையில் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டவரிடம் காவல்துறையினர் இருக்கும்போதே இளைஞர் ஒருவர் கஞ்சாவை வழங்கிய நிகழ்வு நடந்துள்ளது.

 

மதுரை சம்மட்டிபுரத்தை சேர்ந்தவர் முத்தமிழ். இவர் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டவர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் முன் பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு காவல்நிலையத்தில் இருந்து காவலர்கள் முத்தமிழை அழைத்துச் சென்றனர். 

 

மருத்துவமனையில் கஞ்சா கொண்டு வந்த நபர் போன் பேசுவது போல் அங்கும் இங்கும் நடந்து காவலர்களுடன் இருந்த முத்தமிழிடம் காவலர்களுக்கே தெரியாமல் கஞ்சாவினை கொடுத்துள்ளார். வேறொரு நபரால் தனது செல்போனில் பதிவான இந்த காட்சிகள் சமூகவலைதளத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. 

 

முத்தமிழை அழைத்துச் சென்ற காவலர் கவனக்குறைவாக இருந்ததால் இது போன்று நடந்துள்ளது என்று குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் கவனக்குறைவாக இருந்த காவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை காவல் ஆணையர் விளக்கமளித்துள்ளார். 

 

மேலும், மருத்துவமனையில் பரிசோதனைக்கு வந்த குற்றவாளியிடம் கஞ்சா வழங்கப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் பொருட்கள் வழங்கப்பட்டதா என்று காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.