Skip to main content

சக்தி வாய்ந்த இரிடியம் உலோகம் இருப்பதாக தொழில் அதிபர்களிடம் 55 லட்சம் ரூபாய் சுருட்டல்; நான்கு பேர் கைது!

Published on 26/06/2019 | Edited on 26/06/2019

 

சேலத்தைச் சேர்ந்த தொழில் அதிபர்களிடம், சக்தி வாய்ந்த இரிடியம் உலோகம் இருப்பதாகக்கூறி 55 லட்சம் ரூபாய் சுருட்டிய நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


சேலம் பொன்னம்மாபேட்டையைச் சேர்ந்தவர் ஸ்டாலின் மற்றும் பிரவீன். தொழில் அதிபர்கள். இவர்களை கடந்த சில வாரங்களுக்கு முன், சென்னையைச் சேர்ந்த ஒரு கும்பல் அணுகியது. 

i


அந்த கும்பல், தங்களிடம் அரிதான 250 கோடி ரூபாய் மதிப்புள்ள இரிடியம் உலோகம் இருப்பதாகவும், அதை வாங்கி வீட்டில் வைத்தால் செல்வம் கொழிக்கும் என்றும் கூறியுள்ளனர். அதை 55 லட்சம் ரூபாய்க்கு விற்பனைக்குக் கொடுப்பதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதை நம்பிய தொழிலதிபர்கள் இருவரும், அவர்களிடம் 55 லட்சம் ரூபாயைக் கொடுத்துள்ளனர்.


பதிலுக்கு அவர்களும் கண்ணாடி பெட்டி ஒன்றை காண்பித்து, அதற்குள் இரிடியம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் அந்த கும்பல், வெட்டவெளியில் வைத்து அந்த பெட்டியைத் திறக்க முடியாது என்றும், அதைத் திறப்பதற்கு முன், அதற்கென பிரத்யேக பாதுகாப்பு கவச உடைகளை அணிந்து கொள்ள வேண்டும் என்றும், வெளிநாட்டில் இருந்து அந்த உடைகளை வரவழைக்க மேலும் சில லட்ச ரூபாய் செலவாகும் என்றும் கூறியுள்ளனர்.


இதனால் சந்தேகம் அடைந்த ஸ்டாலினும், பிரவீனும் இரிடியம் கும்பல் மீது சேலம் மாநகர காவல்துறை ஆணையர் சங்கரிடம் புகார் அளித்தனர். 


இந்நிலையில், ஜூன் 24ம் தேதி மாலை, காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்குப் பின்னால் கருப்பு நிறத்தில் ஒரு மர்மப் பெட்டி கிடப்பது தெரிய வந்தது. வெடிகுண்டு தடுப்புப்பிரிவினர் உதவியுடன் அந்தப் பெட்டியைத் திறந்து பார்த்தபோது, அதற்குள் சென்னை கும்பல் தெரிவித்த இரிடியம் உலோகம் கொண்ட கண்ணாடி பெட்டி இருப்பது தெரிய வந்தது. 


அந்த பெட்டியை உடைக்க முயற்சித்தபோது அதற்குள் இருந்து அமிலங்களின் நெடி பரவியது. இதையடுத்து முழுவதுமாக அந்த பெட்டியை தொடர் ஆய்வுக்காக காவல்துறையினர் எடுத்துச் சென்றனர். 


இந்த விவகாரத்தில் சேலம், சென்னை, ஆந்திரா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 6 பேர் கும்பல் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்தது. 


இந்த வழக்கு தொடர்பாக ஆந்திரா மாநிலம் ராஜமுந்திரியைச் சேர்ந்த அங்கம் தாதாஜி (39), சேலம் அம்மாபேட்டையைச் சேர்ந்த சரவணன் (45), சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த தினேஷ்குமார் (25), சென்னை சிவக்குமார் (42) ஆகிய நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். சேலத்தைச் சேர்ந்த ஒருவர் உள்பட இருவரை தேடி வருகின்றனர்.


இந்த கும்பல், தமிழகத்தில் வேறு சில இடங்களிலும் இதேபோல் இரிடியம் மோசடியில் ஈடுபட்டு கோடிக்கணக்கில் சுருட்டியிருப்பது தெரிய வந்துள்ளது. சேலத்திலேயே மேலும் 6 தொழில் அதிபர்கள் இந்த கும்பலிடம் லட்சக்கணக்கில் பறிகொடுத்துள்ளனர். 


இந்த சம்பவத்தின் பின்னணியில் மேலும் யார் யாருக்கு தொடர்பு இருக்கிறது என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.

Next Story

இறுதிக்கட்ட பரப்புரை; சேலத்தில் எடப்பாடி 'ரோட் ஷோ'

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
 Final campaign; Edappadi 'Road Show' in Salem

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. இதற்கிடையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தஙளது வேட்பாளர்களை அறிவித்து தீவிரப் பிரச்சாரங்கஙளை நடத்தி வருகின்றனர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. இன்னும் ஒரு மணி நேரத்தில் தேர்தல் பரப்புரை முடிவடைய இருக்கின்ற நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர பரப்புரையில் இறங்கியுள்ளது. இந்நிலையில் சேலத்தில் எடப்பாடி பழனிசாமி 'ரோட் ஷோ' என்னும் வாகன பேரணியைத் தொடங்கியுள்ளார். சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் தொடங்கி சேலம் டவுன் வரை இந்த ரோட் ஷோ நடைபெறுகிறது. திறந்தவெளி வாகனத்தில் கை அசைத்தபடி வேட்பாளருடன் எடப்பாடி பழனிசாமி வாகன பேரணி நடத்தி வருகிறார். அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் இருந்து வின்சென்ட், திருவள்ளுவர் சிலை, முதல் அக்ரகாரம், சின்ன கடைவீதி, கடைவீதி உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் சென்று இறுதியாகக் கோட்டை மாரியம்மன் கோவில் பகுதியில் பிரச்சாரத்தை நிறைவு செய்ய இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.