Sale of substandard, adulterated foodstuff; A fine of 2.30 lakh rupees was collected!

Advertisment

சேலம் மாவட்டத்தில் தரமற்ற,கலப்பட உணவுப்பொருள்களை விற்பனை செய்ததாக 29 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதோடு, சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து 2.30 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

சேலம் மாவட்டத்தில் கலப்படம் மற்றும் தரமற்ற உணவுப்பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவுப்பாதுகாப்புத் துறை அலுவலர்களுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து, மாவட்ட நியமன அலுவலர் கதிரவன் தலைமையில் உணவுப்பாதுகாப்பு அலுவலர்கள் ஆத்தூர், சங்ககிரி, இடைப்பாடி, மேட்டூர், ஓமலூர், சேலம் மாநகர் உள்ளிட்ட பகுதிகளில் சோதனைகளை மேற்கொண்டனர்.

இந்தசோதனையில் போலியானது, உண்ணத்தகாதது மற்றும் கேடு தரக்கூடிய உணவுப்பொருள்கள் விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தரமற்ற உணவுப் பொருள்களை விற்பனை செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சேலம் வருவாய் நீதிமன்றத்தில் சிவில் பிரிவில் நிலுவையில் இருந்த 29 வழக்குகளில் 2.30 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து வருவாய் அலுவலர் உத்தரவிட்டார்.

Advertisment

அதன்படி, பல்வேறு வகையான நொறுக்குத்தீனிகள், தரமற்ற, உடல் உபாதைகளை ஏற்படுத்தும் எனக் கண்டறியப்பட்ட 13 வழக்குகளில் 63 ஆயிரம் ரூபாய், கலப்படம் மற்றும் ஜவ்வரிசி தொடர்பான வழக்குகளில் 81 ஆயிரம் ரூபாய் அபராதம், சமையலுக்கு ஒவ்வாத பொருள்களை விற்றது தொடர்பான 3 வழக்குகளில் 16 ஆயிரம் ரூபாய், தரமற்ற சமையல் எண்ணெய் தொடர்பான 2 வழக்குகளில் 29 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

''கலப்படம் மற்றும் தரமற்ற உணவுப்பொருள்களை விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக உணவுப்பொருள் விற்பனை கடைகள், தயாரிக்கும் இடங்களில் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம்,'' என்கிறார்கள் உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர்கள்.