Skip to main content

காலாவதி தேதி இல்லாமல் தீபாவளி இனிப்புகள் விற்பனை; சேலத்தில் அதிரடி சோதனை!

Published on 06/11/2021 | Edited on 06/11/2021

 

Sale of Diwali sweets without expiration date
                                                      மாதிரி படம்

 

சேலத்தில் பிரபல இனிப்பக நிறுவனம் ஒன்று உணவகம் மற்றும் அவுட்டோர் கேட்டரிங் சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனம், தீபாவளி பண்டிகையின்போது வழக்கத்தைவிட கூடுதலாக இனிப்பு பண்டங்கள், பால் பொருட்களை தயாரித்து சிறப்பு விற்பனையிலும் ஈடுபட்டு வருகிறது. 

 

இந்நிலையில், நடப்பு தீபாவளி விழாவையொட்டி அந்நிறுவனம் பல்வேறு வகையான இனிப்புகள் அடங்கிய (அசார்ட்டடு) கிப்ட் பாக்ஸ்களில் காலாவதி தேதி, பேக்கிங் செய்யப்பட்ட நாள், விற்பனை விலை, பேட்ச் எண் உள்ளிட்ட அடிப்படையான விவரங்கள் இல்லாமல் விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

 

கிப்ட் பாக்ஸ்களை ஒரு மக்கக்கூடிய பையில் போட்டுத் தருகிறது. அந்தப் பையின் மீது, பால் பொருள்களை வாங்கிய அன்றே பயன்படுத்தி விடுங்கள் என்று ஆங்கிலத்தில் எச்சரிக்கை வாசகம் அச்சிட்டு இருந்தது. இதனால் குழம்பிப்போன வாடிக்கையாளர்கள், இவை கெட்டுப்போன பால் பொருள்களாக இருக்குமோ என்று சந்தேகம் அடைந்தனர். மேலும், ஒரே நாளில் எப்படி அனைத்தையும் உண்பது என்றும் குழம்பினர்.

 

இதுகுறித்து வாடிக்கையாளர்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் மற்றும் உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். அதையடுத்து உணவுப்பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் கதிரவன் தலைமையிலான அலுவலர்கள், அந்நிறுவனத்துக்குச் சொந்தமான சேலம் நான்கு சாலை, செவ்வாய்பேட்டை, சூரமங்கலம் சாலை, சாரதா கல்லூரி சாலை, அருணாச்சல ஆசாரி தெரு ஆகிய இடங்களில் உள்ள கிளைகளில் நேரில் ஆய்வு செய்தனர். 

 

இனிப்புகள், பால் பொருள்கள் தயாரிக்கும் கூடமான சீலநாயக்கன்பட்டி கிளையிலும் சோதனை நடத்தினர். பேக்கிங் மற்றும் காலாவதி தேதி விவரங்கள் இல்லாமல் ஒரு கிப்ட் பாக்ஸ் கூட விற்பனை செய்யக்கூடாது என அந்நிறுவனத்தின் அனைத்து கிளைகளுக்கும் எச்சரித்தனர். 

 

இதையடுத்து, அந்நிறுவனம் அடுத்த சில மணி நேரங்களில் அனைத்து விதமான இனிப்புகளின் கிப்ட் பாக்ஸ்களிலும் பேக்கிங் தேதி, காலாவதி தேதி, விற்பனை விலை, எடை அளவு, பேட்ச் எண் ஆகிய அடிப்படை விவரங்களை அச்சிட்ட வில்லையை ஒட்டியது. அதன்பிறகே விற்பனைக்கு அனுமதித்தது உணவுப்பாதுகாப்புத்துறை. 

 

இதுகுறித்து உணவுப்பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் கதிரவன் கூறுகையில், ''புகார் வரப்பெற்றதை அடுத்து அந்நிறுவனத்தின் அனைத்து கிளைகளிலும் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினோம். பால் பொருள்கள் கொண்ட கிப்ட் பாக்ஸ்களில் மட்டும் காலாவதி தேதி, பேக்கிங் விவரங்கள் இருந்தன. மற்ற பண்டங்களின் பாக்ஸ்களில் அந்த விவரங்கள் இல்லை. எச்சரிக்கை செய்ததை அடுத்து, அனைத்து அடிப்படை விவரங்கள் அடங்கிய வில்லைகளை ஒட்டினர். அதன் பிறகுதான் விற்பனை செய்ய அனுமதித்தோம்'' என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.

Next Story

இறுதிக்கட்ட பரப்புரை; சேலத்தில் எடப்பாடி 'ரோட் ஷோ'

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
 Final campaign; Edappadi 'Road Show' in Salem

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. இதற்கிடையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தஙளது வேட்பாளர்களை அறிவித்து தீவிரப் பிரச்சாரங்கஙளை நடத்தி வருகின்றனர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. இன்னும் ஒரு மணி நேரத்தில் தேர்தல் பரப்புரை முடிவடைய இருக்கின்ற நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர பரப்புரையில் இறங்கியுள்ளது. இந்நிலையில் சேலத்தில் எடப்பாடி பழனிசாமி 'ரோட் ஷோ' என்னும் வாகன பேரணியைத் தொடங்கியுள்ளார். சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் தொடங்கி சேலம் டவுன் வரை இந்த ரோட் ஷோ நடைபெறுகிறது. திறந்தவெளி வாகனத்தில் கை அசைத்தபடி வேட்பாளருடன் எடப்பாடி பழனிசாமி வாகன பேரணி நடத்தி வருகிறார். அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் இருந்து வின்சென்ட், திருவள்ளுவர் சிலை, முதல் அக்ரகாரம், சின்ன கடைவீதி, கடைவீதி உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் சென்று இறுதியாகக் கோட்டை மாரியம்மன் கோவில் பகுதியில் பிரச்சாரத்தை நிறைவு செய்ய இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.