Skip to main content

செய்யாத வேலைக்கு சம்பளம்..! வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் சுரண்டப்படும் அரசு பணம்..!!

Published on 27/08/2018 | Edited on 27/08/2018
100 Days


கிராமப் புறத்தை சேர்ந்த ஏழை, எளிய மக்களுக்கு குறைந்தபட்சம் நூறு நாட்களாவது வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை முந்தைய காங்கிரஸ் அரசு கொண்டு வந்தது. தமிழகத்தில் கடந்த 02-02-2006-ல் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த திட்டம், படிப்படியாக சென்னை தவிர்த்து அனைத்து மாவட்டங்களிலும் இப்போது செயல்பாட்டில் உள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் என்ற பெயர் மாற்றத்தோடு செயல்படுத்தப்படும் இந்த திட்டத்திற்கு, மத்திய அரசு 90 விழுக்காடும், மாநில அரசு 10 விழுக்காடும் நிதி ஒதுக்குகிறது.

ஒரு கிராமத்தில் உள்ள ஏரி, குளம், கண்மாய், ஊரணி போன்ற நீராதரங்களை சீரமைத்தல், கிணறு மற்றும் பண்ணைக் குட்டைகள் அமைத்தல், தரிசு நிலங்களை சீரமைத்து, மரக்கன்றுகள் நடுதல், சாலை வசதி இல்லாத ஊரக பகுதிகளில் இணைப்பு சாலை ஏற்படுத்துதல் போன்ற பணிகளை இந்த திட்டத்தின் மூலம் மேற்கொள்ளலாம். 01-04-2018 முதல் இந்த திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.224 தினக்கூலியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சில கிராமங்களில் செய்த பணியின் அளவை பொறுத்து கூலி மாறுபடலாம். ஒரு பயனாளிக்கு ஆண்டுக்கு நூறு நாட்கள் மட்டுமே வேலை. அதேபோல், பயனாளிகளுக்கு அவர்களது வங்கி கணக்கில் ஊதியம் வரவு வைக்கப்படும். இதன் மூலம் முறைகேடுகளை தவிர்க்கலாம் என்பது அரசின் எண்ணம்.

ஆனால், தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருகிறது. எல்லா கிராமத்திலும் ஊராட்சி தலைவர் மற்றும் செயலாளர்களே இந்த திட்டத்தை மேற்பார்வை செய்வர். அவர்கள் தான் அதிகாரிகளை கைக்குள் போட்டுக் கொண்டு, நூதன முறையில் முறைகேடு செய்கின்றனர். குறிப்பாக புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட நாகலாபுரம் கிராமத்தில், செய்யாத பணிகளுக்கு சம்பளம் வழங்கப்பட்டு, பின்னர் சுரண்டப்படுகிறது. அதாவது, இந்த திட்டத்தில் மனிதர்களின் உடல் உழைப்பை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது விதி. ஆனால், மணிக்கு ரூ.600-க்கு ஜேசிபிகளை வாடகைக்கு எடுத்து, ஏரி மற்றும் ஓடைக்கரையை தூர்வாரிவிடுவார்கள். அதனை ஆய்வு செய்யும் வட்டார வளர்ச்சி அலுவலர், பணிகள் நடந்துவிட்டதாக அறிக்கை தாக்கல் செய்துவிடுவார். இதனால், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட பயனாளிகளின் வங்கி கணக்கில் சம்பளப் பணம் வரவு வைக்கப்படும். ஆனால், அந்த பணத்தை வேலையாட்கள் எடுக்க முடியாது. முன் கூட்டியே வங்கி பாஸ் புத்தங்களை வாங்கி வைத்திருக்கும் ஊராட்சி செயலர், பயனாளிகளின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்துக் கொள்வார். பயனாளிகளும் இதை கண்டுகொள்வதில்லை. எதிர்த்து கேட்டால், அடுத்த மாதம் வேலை தரமாட்டார்கள் என்ற பயம் அவர்களுக்கு. இதேபோல், பல ஊராட்சிகளில் லட்சக் கணக்கில் பணம் கையாடல் செய்யப்படுகிறது. இதை தணிக்கை செய்ய வேண்டிய அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை என புலம்பினார் நமக்கு தெரிந்த சமூக ஆர்வலர் ஒருவர்.

சுதந்திர போராட்ட காலத்தில் மகாத்மா காந்தி நடைபயணம் மேற்கொண்டார். அப்போது, அவர்களோடு வழிநடையாக சென்றவர்கள் எந்த பெட்டிக்கடையிலோ, டீக்கடையிலோ பொருட்கள் வாங்கினாலும், கடை உரிமையாளர்கள் காசு வாங்க மாட்டார்கள். ஏனெனில் சுதந்திரத்திற்காக போராடும் மக்களுக்கு தம்மால் சிறிய உதவி என்ற மனப்பாங்கு. காந்தியோடு சென்றவர்களும் கடைகளில் சாப்பிட்டுவிட்டு, காந்தி மகான் கணக்கு என்று சொல்லிவிட்டு, சென்று விடுவார்கள். இதைத்தான் காந்தி கணக்கு என்பார்கள். இன்று அதே காந்தி பெயரில் செயல்படுத்தப்படும் அரசு திட்டத்தில், அரசாங்கப் பணத்தை சுரண்டுகிறார்கள். தடுக்க வேண்டிய அதிகாரிகளும், அதில் பங்கு போடுகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

இறந்தவர்கள் பெயர்களில் கையாடல்; 100 நாள் வேலைத் திட்டத்தில் முறைகேடு

Published on 26/06/2023 | Edited on 26/06/2023

 

Malpractice in Kallakurichi 100 days job scheme

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலூர் கிராம ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதியளிப்பு திட்டம் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தில் கடந்த 2021 - 2022, 2022 - 2023 ஆகிய நிதியாண்டில் 100 நாள் வேலையில் பல முறைகேடுகள் நடைபெற்றதாகப் பல்வேறு புகார்கள் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்பட்டதன் அடிப்படையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

 

அந்த ஆய்வில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணியாற்றி வருபவர்கள் மற்றும் இறந்து போனவர்கள் பெயர்களில் பணி செய்ததாக ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு அவர்கள் பெயரில் பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த முறைகேட்டில் சுமார் 4 லட்சம் ரூபாய் கையாடல் நடந்திருப்பதாக அதிகாரிகள் ஆய்வு செய்து மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளதாகத் தெரிகிறது.

 

இது குறித்து அந்த கிராம பொதுமக்கள், “தங்கள் ஊராட்சியில் 100 நாள் வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் தொடர்ந்து முறைகேடுகள் நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார் அனுப்பினோம். அந்தப் புகாரின் மீது அதிகாரிகள் ஆய்வு செய்து முறைகேடுகள் நடந்திருப்பதை உறுதி செய்துள்ளனர். எனவே இது குறித்து மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கையாடல் செய்த பணத்தை சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து ரெக்கவரி செய்ய வேண்டும்” என்று கூறுகின்றனர். 

 

 

Next Story

100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களின் வித்தியாசமான திடீர் போராட்டம் 

Published on 17/05/2020 | Edited on 17/05/2020
100 days workers



கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்ப்பேட்டை அருகே உள்ளது தொப்பையான்குளம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை திட்ட பணி நடைபெற்று வருகிறது. அதன்படி வெள்ளிக்கிழமை அந்த ஊரில் உள்ள குளத்தை சீர் திருத்தம் செய்யும் பணியை அந்த ஊரைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து வேலை செய்து கொண்டிருந்தார்கள்.
 

அந்தப் பணியின் போது மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமையில் அந்த இயக்கத்தை சேர்ந்த ஒன்றிய நிர்வாகிகள் ஏழுமலை, கந்தசாமி, கலியமூர்த்தி ஆகியோர் தொழிலாளர்களுடன் இணைந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 

அப்போது தொழிலாளர்கள் தங்கள் கைகளில் பதாகைகளை ஏந்தி கோஷமிட்டனர். இந்த பதாகைகளில் ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு நிவாரண உதவித் தொகையாக மத்திய மாநில அரசு 10 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்க வேண்டும், 100 நாள் வேலைத் திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவரையும் நலவாரியத்தில் பதிவு செய்யப்படவேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
 

வேலை செய்துகொண்டே இடையில் தங்கள் கோரிக்கை கோரிக்கைகளை முன்வைத்து தொழிலாளர்கள் திடீர் போராட்டம் நடத்தினர். போராட்டம் என்றால் வேலைகளை விட்டுவிட்டு சம்பந்தப்பட்ட அலுவலக கங்களுக்கு ஆட்களை திரட்டி சென்று போராட்டம் நடத்துவதை தான் பார்த்திருக்கிறோம். ஆனால் வேலை செய்துகொண்டே தங்கள் கோரிக்கைளை வலியுறுத்தி போராட்டம் நடத்தியது வித்தியாசமாக இருந்தது. மத்திய மாநில அரசுகள் கிராம தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முன் முன்வரவேண்டும் என்கிறார்கள் கிராமங்களில் ஒரு நாள் வேலை பணியில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள்.