Skip to main content

‘உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும்’ - ஊழியர்கள் கோரிக்கை

Published on 06/05/2024 | Edited on 06/05/2024
Salary demand for employees in Annamalai University

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் பணியாற்றி வந்தனர். பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக தமிழக அரசு பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் 5 ஆயிரத்திற்கும்  மேற்பட்டவர்கள் தமிழக அரசின் உயர்கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், தொழிற்கல்வி நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு பணி நிறவல் செய்துள்ளனர்.

இந்த நிலையில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உள்ள ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாத முதல் தேதி அல்லது அதற்கு முதல் நாளே ஊதியம் வழங்கப்பட்டு வந்தது.  இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்திற்கான ஊதியம் மே 6 ஆம் தேதி கடந்தும் வழங்கவில்லை எனவும் உடனடியாக ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அனைத்து  ஊழியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் இது குறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் அண்ணாமலைப் பல்கலைக்கழக கிளையின் இணைப் பொதுச் செயலாளர் காந்தி பல்கலைக்கழக பதிவாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் ஊழியர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு ஏப்ரல் மாத ஊதியத்தை விரைவாக வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.

இது குறித்து பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அலுவலர் சம்பத்திடம் கேட்டபோது தலைமை செயலகத்தில் ஊதியம் வழங்குவதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் விரைவில் ஊதியம் வழங்கப்படும் என்றார்.

சார்ந்த செய்திகள்