Skip to main content

சேலம் - பூசாரி கழுத்து அறுத்து படுகொலை! போலீசார் விசாரணை!!

Published on 20/02/2019 | Edited on 20/02/2019

 

சேலம் அருகே, கோயில் பூசாரியை மர்ம நபர்கள் கழுத்து அறுத்து படுகொலை செய்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


சேலத்தை அடுத்த வலசையூர் சுந்தர்ராஜன் காலனியைச் சேர்ந்தவர் பாஸ்கரன் (56). நெசவுத்தொழிலாளி. இவருடைய மனைவி பத்மா. இவர்களுக்கு ஒரே மகள். அவரும் திருமணமாகி கோவையில் குடும்பத்துடன் வசிக்கிறார்.


பாஸ்கரன், தனது வீட்டின் அருகில் சிறிய அளவில் காளியம்மன் கோயில் கட்டியுள்ளார். அந்தக் கோயிலின் பூசாரியாகவும் இருந்து வந்தார். 

 

salam


கடந்த 17.2.2019ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு, வீட்டில் இருந்து வெளியே சென்ற பாஸ்கரன் அதன்பின் வீடு திரும்பவில்லை. பவுர்ணமி நாள்களில் எங்காவது வெளியூர்களில் உள்ள கோயில்களுக்குச் சென்றுவிட்டு இரண்டு நாள்கள் கழித்துதான் பாஸ்கரன் வீடு திரும்புவாராம். இதனால் அவர் எங்காவது கோயில்களுக்குச் சென்றிருக்கலாம் என்று கருதிய அவருடைய மனைவி, அவரை எங்கேயும் தேடவில்லை.


இந்நிலையில், அரூர் பிரதான சாலையில் ஒரு தனியார் பள்ளி அருகே உள்ள காலி நிலத்தில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பாஸ்கரன் சடலமாகக் கிடந்தார். செவ்வாய்க்கிழமை காலையில் அந்த வழியாகச் சென்றவர்கள் சடலத்தைப் பார்த்து, வீராணம் காவல்நிலையத்துக்குக் தகவல் அளித்தனர். 


உதவி ஆணையர் தினகரன், அம்மாபேட்டை காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் காவலர்கள் நிகழ்விடம் விரைந்து சென்றனர். சடலத்தைப் பார்த்து அவருடைய மனைவி பத்மா மற்றும் நெருங்கிய உறவினர்கள் கதறி அழுதனர். காவல்துறையினர், சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


சடலம் லேசாக அழுகிப்போய் இருந்தது. பாஸ்கரன், வீட்டில் இருந்து காணாமல் போன அன்றே கொல்லப்பட்டிருக்கலாம் என காவல்துறை கருதுகிறது. கழுத்தில் உள்ள காயம், கண்ணாடி சில்லுகளால் அறுக்கப்பட்டதுபோல் தெரிந்தது. 


காவல்துறை மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அந்த நாய் மோப்பம் பிடித்துக்கொண்டே சடலம் கிடந்த இடத்திற்கு அருகே உள்ள ஒரு வாழைத் தோட்டத்தில் சென்று நின்று கொண்டது. கொலையாளிகள் அந்த வாழைத்தோட்டத்தில் நின்று சென்றிருக்கலாம் எனவும் காவல்துறையினர் கருதுகின்றனர்.


கொல்லப்பட்ட பாஸ்கரன், ஏலச்சீட்டு நடத்தி வந்தார். அதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டுதான் காளியம்மன் கோயில் விழாக்களை நடத்தி வந்துள்ளார். பொதுமக்களிடம் நன்கொடைகூட வசூலிப்பது கிடையாது என்கிறார்கள். மேலும், எந்தக் கெட்டப்பழக்கமும் இல்லாதவர் என்றும் அக்கம்பக்கத்தினர் கூறுகின்றனர்.


பொதுமக்கள் இவ்வாறு கூறினாலும், சடலம் கிடந்த இடத்திற்கு பாஸ்கரன் வருவதற்கு என்ன காரணம்? ஒருவேளை மர்ம நபர்கள் அவரை கொலை செய்துவிட்டு  சடலத்தை அந்த இடத்தில் போட்டுவிட்டுச் சென்றார்களா? அல்லது பெண்கள் விவகாரம், கொடுக்கல் வாங்கல் தகராறில் ஏதும் அவர் கொல்லப்பட்டாரா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.