Skip to main content

காவி உடை சர்ச்சை; திருவள்ளுவருக்கு ஆளுநர் ஆர்.என். ரவி மரியாதை! 

Published on 24/05/2024 | Edited on 24/05/2024
Saffron Dress Controversy; Thiruvalluvar Governor R.N. Courtesy of Ravi

தமிழக ஆளுநர் மாளிகை சார்பில் இன்று (24.05.2024) மாலை 5 மணிக்கு திருவள்ளுவர் திருநாள் விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக அச்சிடப்பட்ட திருவள்ளுவர் திருநாள் விழா அழைப்பிதழ் ஒன்று வெளியாகி இருந்தது. அதன் முகப்பு பக்கத்தில் காவி உடையில் திருவள்ளுவர் உள்ளது போன்று அச்சிடப்பட்டிருந்ந்தது. ஆளுநரின் செயலாளர் கிர்லோஷ்குமார் பெயரில் இந்த அழைப்பிதல் வெளியிடப்பட்டது. இதனால் சர்ச்சை ஏற்பட்டது.

காவி உடையுடன் கூடிய திருவள்ளுவர் படத்தை வெளியிட்டதைக் கண்டித்து தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளன எனத் தகவல் வெளியாகி இருந்தது. திருவள்ளுவர் திருநாள் விழா எனக் காவி உடையில் திருவள்ளுவர் படத்துடன் ஆளுநர் மாளிகை வெளியிட்ட அழைப்பிதழில் மக்கள் மத்தியில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து சென்னை கிண்டியில் உள்ள தமிழக ஆளுநர் மாளிகைக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருவள்ளுவர் காவி உடை சர்ச்சை எழுந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆளுநர் மாளிகைக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

Saffron Dress Controversy; Thiruvalluvar Governor R.N. Courtesy of Ravi

இந்நிலையில் காவி உடையுடன் இருக்கும் திருவள்ளுவர் படத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று (24.05.2024) மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார். இது குறித்து ஆளுநர் மாளிகையின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “திருவள்ளுவர் திருநாள் (வைகாசி அனுஷம் வள்ளுவர் திருநாள்) எனும் புனிதமான தருணத்தில், ஆளுநர் ஆர்.என். ரவி மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயிலில் திருவள்ளுவரை தரிசனம் செய்தார். பின்னர், ஆளுநர் மாளிகையில் தெய்வப் புலவர் திருவள்ளுவருக்கு ஆளுநர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த ஜனவரி மாதம் 16 தேதி (16.01.2024) திருவள்ளுவர் காவி உடை அணிந்தபடி இருக்கும் புகைப்படத்தை எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டு திருவள்ளுவர் தினத்துக்கு வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார். அதில், “திருவள்ளுவர் தினத்தில், ஆன்மிக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த பெரும் புலவரும், சிறந்த தத்துவ ஞானியும் பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான மரியாதையை செலுத்துகிறேன்.

அவரது ஞானம் நமது தேசத்தின் சிந்தனை மற்றும் அடையாளத்தை வடிவமைத்து, வளப்படுத்தி ஒட்டுமொத்த மனித குலத்துக்கு வழிகாட்டியாகவும் உத்வேகத்தின் ஆதாரமாகவும் நீடிக்கிறது. இந்தப் புனிதமான நாளில் அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்