Skip to main content

15 ஆண்டுகளாக இயற்கை விவசாயத்தில் சாதனை படைத்துவரும் விவசாயி சச்சிதானந்தம்..!

Published on 14/12/2020 | Edited on 14/12/2020

 

Sachchidanandam, a farmer from Karaipakkam, has been making achievements in organic farming for 15 years

 

அரியலூர் மாவட்டம், டெல்டா பகுதியான திருமானூர் அருகே உள்ள காரைப்பாக்கம் கிராமத்தில் 15 ஆண்டுகளாக பல்வேறு பாரம்பரிய நெல் ரகங்களைச் சாகுபடி செய்து அவற்றை மீட்டெடுத்து, பொதுமக்களுக்கு இயற்கை விவசாயத்தில் விளைந்த தானியங்கள், காய்கறிகள், கரும்பு, வெல்லம் போன்றவற்றை வழங்கி, விவசாயிகளுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி இயற்கை விவசாயத்தை மீட்டெடுக்கும் அரிய பணியில் சாதனை படைத்துவருகிறார் இயற்கை விவசாயி சச்சிதானந்தம். 

 

இது குறித்து இயற்கை விவசாயி சச்சிதானந்தம் கூறுகையில், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களுடைய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததாகவும், அதன்பின்னர் மாப்பிள்ளை சம்பா நெல் வகைகளைத் தனது வயலில் பயிரிட்டு இரசாயனமில்லா விவசாய முறைக்கு மாறியதாகவும் கூறினார். 

 

பின்னர் மாப்பிள்ளை சம்பா அவல் பயன்படுத்தி அடுப்பில்லாத சமையல் மூலம் கார உணவு, இனிப்பு, பொங்கல், தேங்காய்ப் பால், எலுமிச்சை சாறு கலந்த இயற்கை தயிர் தயாரித்துப் பயன்படுத்திட உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதோடு தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் எடை 20 கிலோ குறைந்து சுறுசுறுப்பாக இருப்பதாகவும் கூறினார். 

 

அதன் பின்னர் படிப்படியாக பல்வேறு பாரம்பரிய நெல் வகைகளை இயற்கை முறையில் விளைவிக்க எண்ணி, இந்திய அளவில் பல்வேறு மாநிலங்களுக்கு சுற்றுப் பயணம் செய்து தொடர்ந்து தனது வயல்களில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருந்துள்ளார். இயற்கை விவசாயத்தில் முன்னோடியாய் விளங்கும் நம்மாழ்வார், இயற்கை விவசாய முறை சுபாஷ் பாலேக்கர் முறை, நாகரெத்தின நாயுடு முறை எனப் பலவகைகளில் இயற்கை விவசாய முறைகளைப் பின்பற்றி விவசாயம் செய்து வருகிறார். ஒரு ஏக்கர் நடவு செய்ய அதிகபட்சமாக 2 கிலோ நெல் போதும் என்கிறார். 

 

Sachchidanandam, a farmer from Karaipakkam, has been making achievements in organic farming for 15 years

 

பத்து நாட்கள் கடந்த நாற்றினைப் பிடுங்கி சமப்படுத்தப்பட்ட வயலில் அதிக நீர் தேங்காமல் சேற்றில் ஊன்றி விட்டாலே பயிர் முளைத்துச் செழிக்க ஆரம்பித்துவிடும் என்றார். அதிகப்பட்சமாக ஒரு ஏக்கருக்கு நடவு செலவு ரூ.1,200 முதல் ரூ.1,600 ஆகும் என்கிறார். மேலும் இயற்கை விவசாயம் செய்வதன் மூலம் செலவில்லாத இரசாயனமில்லாத விளைபொருட்கள் சுதேசி அதாவது தற்சார்பு வாழ்க்கை வாழ முடியும். 

 

நோய் என்பதும் வராது. குறிப்பாக புத்தர் சாப்பிட்ட தற்போது வரை புத்தகயாவில் புத்தபிட்சுகள் சாப்பிட்டு வரும் காலாநமக் என்ற பாரம்பரிய நெல் ரகங்களைப் பயிரிட்டுள்ளார். விஞ்ஞான ரீதியாக மனித உடல் இயங்குவதற்கு 80 வகையான தாது சத்துக்கள் தேவைப்படுகிறது. அதில் காலாநமக் என்ற பாரம்பரிய நெல் ரகத்தில் மட்டுமே 40 வகையான தாது சத்துக்கள் நிறைந்திருப்பிருப்பதாக விஞ்ஞானிகள் ஆராய்ந்து கூறுகிறார்கள். 

 

இந்த நெல் வளர்ந்தவுடன் அரிசி பச்சை நிறத்தில் இருக்கும் என்று தெரிவித்தார். மேலும் அரசர்கள் மட்டுமே உண்டு வந்த கருப்புக் கவுனி அரிசியைத் தனது வயலில் பயிரிட்டுள்ளோம் என்றும் கேன்சர் போன்ற கொடிய நோயையும் வெல்லும் தன்மை கொண்ட ரகம் என்றும் கூறினார். இது போன்று தனது வயல்களைச் சுற்றி அத்தி மரம், இலந்தை மரம், வேம்பு, புளியமரம், அரச மரம், இலுப்பை மரம், வாழை, தென்னை போன்ற மரபு வகை மரங்களைப் பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு உதவிடும் வகையில் உருவாக்கி உள்ளார். கத்தரி, தக்காளி, வெண்டை, கொத்தவரங்காய், பூசனி, பரங்கிக்காய், சின்னவெங்காயம் எனப் பல வகையிலும் இயற்கை விவசாயம் செய்து வருவதாகக் கூறுகிறார். 

 

பறவைகளும் பட்டாம் பூச்சிகளும் தட்டானும் பல்வகை நன்மை செய்யும் பூச்சிகளும் நண்டும் ஓடும் வயலாகவும் இருக்கும் தனது வயலில் மண்புழுக்கள் பல்கிப்பெருகி மண்ணை கிளறியும் நெளிந்தும் தினந்தோறும் மண்ணை வளமாக்கும் அரிய நிகழ்வைக் காண கண்கோடி வேண்டும் என்கிறார். இயற்கை விவசாயத்தை குடும்பத்தோடு செய்து வருகிறோம் இதுவே எங்களுக்கு அலாதியான மனநிறைவைத் தருகிறது. மனிதன் மட்டுமல்ல ஒட்டுமொத்த ஜீவராசிகளும் உண்ணும் உணவில் இரசாயனமில்லை என்ற ஆத்ம திருப்தி போதும் என்றும் எல்லோரும் இயற்கை விவசாயத்திற்கு திரும்பி ஆரோக்கியமாக வாழலாம் என்றும் முடித்தார்.

 

இவருக்கு வயது 57. பல்வேறு விமர்சனங்களைத் தாண்டி இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வரும் இவர், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வடுகபாளையம் ஊராட்சிக்குட்பட்ட குமாரமங்கலம் அரசு ஆரம்பப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணி செய்து வருகிறார். இவரது மனைவி சசி, பொறியியல் பட்டதாரியான மகன் என அனைவரும் இயற்கை விவசாயத்தை ஈடுபாட்டுடன் செய்து வருகின்றனர். சாண எரிவாயு அடுப்பு, மழைநீர் சேகரிப்பு, நாட்டுவகை மாடு வளர்ப்பு என அசத்தி வருகிறார். 0 பட்ஜெட்ல விவசாயம் செய்யலாம் கடன் வேண்டாம் நிம்மதியா விவசாயம் செய்ய முடியும் என்பதனை அனுபவப்பூர்வமாகச் செய்து காண்பித்து வருகிறார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

மாவட்டம் விட்டு மாவட்டம் தாவும் சிறுத்தை; இரவு பகலாகத் தேடும் வனத்துறை - மிரட்சியில் மக்கள்

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
People are afraid because of movement of leopards in Ariyalur

கடந்த சில நாட்களாக மயிலாடுதுறை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வந்த செய்தியால் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பும் அச்சமும் ஏற்பட்டது. இதனையடுத்து, தற்போது அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதை பொதுமக்கள் நேரில் பார்த்துள்ளனர். இதனால் செந்துரையைச் சுற்றிலும் உள்ள கிராம மக்கள் பயத்திலும் அதிர்ச்சியிலும் தூக்கம் இன்றி தவிக்கின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம்(11.4.2024) இரவு செந்துறை அரசு மருத்துவமனை பகுதியில் சிறுத்தை புகுந்ததை பூங்கோதை என்ற பெண்மணி உட்பட சிலர் நேரில் பார்த்துள்ளனர். பயந்து மிரண்டு போன அவர்கள் உடனடியாக செந்துறை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். உடனடியாக காவல்துறை தீயணைப்புத்துறை பொதுமக்களும் அங்கு திரண்டனர். காவல்துறையினர் மருத்துவமனை பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் மருத்துவமனை சாலையில் குறுக்கே சிறுத்தை கடந்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனையடுத்து உடனடியாக தீயணைப்பு துறையினர் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் இணைந்து சிறுத்தையைத் தேட தொடங்கினர்.

People are afraid because of movement of leopards in Ariyalur

அப்போது ஒரு வெல்டிங் பட்டறை அருகே சிறுத்தை பதுங்கி இருந்ததை இளைஞர்கள் கண்டனர். அவர்கள் சிறுத்தையை விரட்ட சிறுத்தை அங்கிருந்து ஏந்தல் என்ற ஏரிக்குள் பாய்ந்து சென்று மறைந்துள்ளது. பின்னர் இதுகுறித்து தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தகவலின் பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் ட்ரோன் கேமரா மூலம் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்தனர். ஆனால் விடிய விடிய தேடியும் சிறுத்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதற்கிடையில், அந்தச் சிறுத்தை செந்துறை அருகில் உள்ள உஞ்சினி, பொன்பரப்பி, சிதலவாடி, பகுதிகளில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான முந்திரி காடுகளுக்குள் புகுந்து பதுங்கி இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் கோவை மாவட்டம் வால்பாறை மலை காடுகளில் இருந்து 30க்கும் மேற்பட்ட வனத்துறையினரை செந்துறை வரவழைத்தனர். அவர்கள் சிறுத்தை நடமாட்டத்தை கண்டறிவதில் நிபுணர்கள் என்று கூறப்படுகிறது.

People are afraid because of movement of leopards in Ariyalur

இதையடுத்து அரியலூர் மாவட்ட வன அலுவலர் இளங்கோவன் தலைமையில் வனத்துறையினர் ட்ரோன் கேமரா மூலமும் அப்பகுதியில் உள்ள ஓடை பகுதியில்  கண்காணித்ததோடு, சில இடங்களில் கூண்டு வைத்து அந்தக் கூண்டுக்குள் ஆடுகளை விட்டு சிறுத்தையை வரவழைத்து பிடிப்பதற்கு கடும் முயற்சி செய்து வருகின்றனர். இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும் போது செந்துறைப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதியாகியுள்ளது. நின்னையூர், பகுதியில் சிறுத்தையின் காலடித்தடம் பதிந்துள்ளது.

மேலும் செந்துறை பகுதியில் கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதியாகி உள்ளது. மயிலாடுதுறை பகுதியில் நடமாடிய சிறுத்தை அங்கிருந்து காடுகள் அதை ஒட்டி உள்ள ஓடை பகுதிகள் வழியாக செந்துறை பகுதிக்கு வந்திருக்கலாம் என்றும், மேலும் அது அங்கிருந்து காடுகள் மற்றும் ஓடை வழியாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பச்சை மலைக்கு செல்வதற்கான வாய்ப்பு உண்டு. அந்தச் சிறுத்தை இதுவரை விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகளையோ நாய்களையோ அடித்து உணவாக சாப்பிட்டதாக தகவல் இல்லை. அதன் வழிப்போக்கில் கிடைக்கின்ற உணவை சாப்பிட்டு சென்று கொண்டிருக்கிறது.

சிறுத்தையை பிடிக்கும் பணியில் தஞ்சாவூர் ,கடலூர், பெரம்பலூர், அரியலூர், ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட வன அலுவலர்கள் கால்நடை மருத்துவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 24 மணி நேரமும் சிறுத்தை நடமாட்டத்தைக் கண்காணித்து வருகிறோம் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்தச் சிறுத்தை நடமாட்ட அச்சத்தினால் செந்துறைப்பதியில் உள்ள அரசு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

People are afraid because of movement of leopards in Ariyalur

சிறுத்தை பிடிபடுமா? தப்பி செல்லுமா? என்று மக்கள் பதைபதைப்புடன் கிராமப்புறங்களில் பேசிக் கொள்கிறார்கள். இதனால் இரவு நேரங்களில் அரியலூர் மாவட்ட கிராமங்களில் மக்கள் நடமாட்டம் இரவு நேரங்களில் குறைந்து காணப்படுகிறது. பாராளுமன்றத் தேர்தல் பரபரப்பு ஒரு பக்கம், சிறுத்தை நடமாட்டத்தினால் ஏற்பட்ட பரபரப்பு மறுபக்கம் என மக்கள் மிரண்டு போய் கிடக்கிறார்கள்.

Next Story

'இரவில் வெளியே வர வேண்டாம்'-அரியலூர் மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
 'Don't come out at night'-Admonition to people of Ariyalur

கோடைக் காலம் தொடங்கிவிட்ட நிலையில் வனவிலங்குகள் கிராமங்களை நோக்கி படையெடுக்கும் நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. மயிலாடுதுறையில் அண்மையில் தென்பட்ட சிறுத்தையைப் பிடிக்கும் பணியானது கடந்த ஏழு நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது.

கடந்த ஒன்பதாம் தேதிக்கு பிறகு மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டத்திற்கான அறிகுறிகள் இல்லாததால் சிறுத்தை இடம்பெயர்ந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனைத் தொடர்ந்து குத்தாலம் அருகே உள்ள காஞ்சிவாய் எனும் கிராமப் பகுதியில் சிறுத்தை சுற்றித் திரிவதாக தகவல்கள் வெளியானது. அந்தப் பகுதியிலும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று அரியலூர் மாவட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் இருந்தது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியானது.

அரியலூரில் சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்ட நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிராம மக்கள் இரவு நேரங்களில் தனியாக செல்வதைத் தவிர்க்க வேண்டும். கால்நடைகளைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். மேலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ரஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து வனத்துறை மருத்துவர் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலில், அரியலூர் மாவட்டத்தில் நடமாடும் சிறுத்தை, எலி, தவளை, நத்தை, மான், மயில் உள்ளிட்ட பறவைகளை  உண்ணக்கூடியது. இந்த நடமாடும் சிறுத்தைக்கு மற்ற உயிரினங்களைத் தாக்கும் எண்ணம் இல்லை. வளர்ப்பு பிராணிகளைச் சீண்டாத சிறுத்தை மனிதர்களிடம் பயந்த சுபாவம் கொண்டிருக்கும். அரியலூரில் நடமாடும் சிறுத்தை ஏலகிரி மலைக்கோ அல்லது அருகில் உள்ள பச்சை மலைக்கோ செல்வதற்கான வாய்ப்பு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.