திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியைச் சேர்ந்த வாசுகி என்ற பெண்மணி தன்னுடைய உறவினரைப் பார்த்துவிட்டு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் நேற்று (23.05.2021) இரவு வந்துள்ளார். அவர் ஓட்டி வந்த வாகனத்தில் பாம்பு ஒன்று நுழைந்ததைக் கண்டு உடனடியாக தன்னுடைய ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளார். ஆனால், அவர்கள் வருவதற்குள் இந்தப் பாம்பு ஸ்கூட்டியின் இன்ஜின் அமைந்துள்ள அந்தப் பகுதிக்குள் நுழைந்துவிட்டது. தீயணைப்புப் படையினர் வந்த பின்னர் சுமார் ஒன்றரை மணி நேரம் போக்குக் காட்டிய ஒன்றரை அடி பாம்பைப் பிடித்துப் பார்த்ததில் அது கண்ணாடி விரியன் பாம்பு என்பதை அறிந்த வீரர்கள் அதைப் பாதுகாப்பாக பிடித்ததோடு, அந்தப் பெண்மணியைப் பத்திரமாக அனுப்பி வைத்தனர்.