Skip to main content

சின்னத்தைப் பிரபலப்படுத்த அரசுப் பணத்தை ஆளும்கட்சி செலவிடுவதும் ஊழலே! – நிரந்தரச் சின்னம் ஒதுக்குவதற்கு எதிராக வழக்கு!

Published on 26/12/2020 | Edited on 26/12/2020

 

The ruling party spending government money to popularize the symbol is also corrupt! - Case against permanent logo allotment!

 

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு நிரந்தரச் சின்னம் ஒதுக்க வகை செய்யும், தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீட்டு உத்தரவு பிரிவுகளை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

 

தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் சட்டப்பிரிவு செயலாளர் பிரபாகரன் தாக்கல் செய்த மனுவில், ‘நாடு சுதந்திரம் அடைந்தபோது, கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை 12 சதவீதமாக இருந்ததால், தேர்தல்களில் சின்னம் ஒதுக்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டது. தற்போது 84 சதவீதம் கல்வியறிவு பெற்றவர்கள் உள்ள நிலையிலும், சின்னங்கள் ஒதுக்குவது தேவையற்றது. பல நாடுகளில், தேர்தல்களின்போது வாக்குச் சீட்டுகளில் வேட்பாளர் மற்றும் கட்சியின் பெயர் மட்டும் இடம்பெறுகிறது. இந்தியாவில் சின்னங்கள் வழங்குவதற்கு எந்த நியாயமான காரணமும் இல்லை.  

 

தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீட்டு உத்தரவின் அடிப்படையில், தேர்தல் ஆணையம், அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கு நிரந்தரச் சின்னங்களை ஒதுக்குகிறது. ஆனால், தேர்தல் நடத்தை விதிகள், இதுபோல் நிரந்தரச் சின்னங்கள் ஒதுக்க வகை செய்யவில்லை. மாறாக, சின்னங்கள் பட்டியலை வெளியிட்டு, அவற்றை ஒதுக்குவதற்கான விதிமுறைகளை வகுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால், அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு,  நிரந்தரச் சின்னங்கள் ஒதுக்க வகை  செய்யும் தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீட்டு உத்தரவை, அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என அறிவிக்க வேண்டும். தமிழக சட்டமன்றத்துக்கு நடைபெற உள்ள தேர்தலில், தங்கள் கட்சிக்குப் பொதுச் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.’ எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

மேலும், தங்கள் சின்னத்தைப் பிரபலப்படுத்த ஆளும்கட்சி, அரசு பணத்தைச் செலவிடுவது என்பது, ஊழல் நடவடிக்கை என, அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

 

 

சார்ந்த செய்திகள்