Skip to main content

அதிகாரிகள் ஊழலுக்கு ஆளுங்கட்சியினரின் துணையே காரணம்...! - கொ.ம.தே.க.ஈஸ்வரன் குற்றச்சாட்டு!

Published on 09/09/2020 | Edited on 09/09/2020

 

The ruling party is responsible for the corruption of officials ...! - eswaran


"பிரதமரின் கிசான் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு அந்த முறைகேட்டில் ஈடுபட அழுத்தம் கொடுத்த அரசியல் பிரமுகர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் E.R.ஈஸ்வரன் கூறியுள்ளார்.

 

இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆளும் கட்சியினரின் ஊழல் வகைகளையும் பட்டியலிட்டுள்ளார். அதில், "விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கும் பிரதமரின் கிசான் திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. விவசாயி அல்லாதோருக்கு உதவித்தொகை வழங்கி அரசின் திட்டத்தை கேலிக்கூத்தாக மாற்றியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. மத்தியிலும், மாநிலத்திலும் ஆள்கின்ற கட்சியைச் சார்ந்தவர்கள் இந்தத் திட்டத்தில் பயன்பெறக் கூடிய பயனாளிகளின் பட்டியலை தயார் செய்து கொண்டிருந்தது எல்லோருக்கும் தெரியும். அதை வைத்துகொண்டு அரசியல் ஆதாயம் தேடியதும் உண்மை. 


இது அரசினுடைய திட்டம் என்ற நிலையில் நிற்காமல் ஆளுங்கட்சியினுடைய திட்டம் போல பிரச்சாரம் செய்ததையும் அறிவோம். அரசியல் பிரமுகர்களுடைய அழுத்தத்தின் காரணமாகவே போலி பயனாளிகள் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். அதன்மூலம் லாபமடைந்த அரசு அதிகார மையங்களையும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் திட்டங்கள் அனைத்தும் கடைநிலை வரை சென்று சேருவதற்கு முக்கிய பங்காற்றுவது அரசு அதிகாரிகள்தான். அப்படிப்பட்ட அரசு அதிகாரிகள் தவறு செய்யும்போது அது மிகப்பெரிய பாதிப்புகளை உருவாக்கும். பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்து தங்களின் வாழ்வாதாரத்திற்காக போராடும் விவசாயிகளின் திட்டத்தில் இப்படியொரு மோசடி நடந்திருப்பது வேதனையளிக்கிறது.

 

இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம். ஆனால் அந்த முதுகெலும்பையே அதிகாரம் படைத்தவர்கள் தங்கள் பதவியைப் பயன்படுத்தி முறித்திருக்கிறார்கள். இதை ஒருபோதும் மன்னிக்க முடியாது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்திட்டத்தில் மட்டுமல்லாமல் அரசு அறிவிக்கின்ற அனைத்துத்திட்டங்களிலுமே ஆளுங்கட்சியினரின் முறைகேடு தவிர்க்க முடியாததாக இருக்கிறது.

 

Ad


1.ஆடு வழங்கும் திட்டத்தில் ஆளுங்கட்சி பிரமுகர்கள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே வழங்குவது.


2.பசுமை வீடு திட்டத்தில் ஆளுங்கட்சியினர் லஞ்சம் பெற்றுக்கொண்டுதான் ஒதுக்குகிறார்கள்.


3.ஒப்பந்தங்கள் ஆளுங்கட்சியினர் பெறவேண்டியதை பெற்றுக்கொண்டுதான் ஒதுக்குகிறார்கள். இ-டெண்டர் மூலம் நேர்மையாக நடைபெறுகிறது என்பதெல்லாம் வேஷம்.


4.தமிழகம் முழுவதும் உள்ள இலட்சக்கணக்கான தூய்மைப்பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுகிறார்கள். இதில் 75 சதவீதம் போலி. இதன் மூலம் வரும் சம்பளப்பணம் ஆளுங்கட்சி பிரமுகர்களுக்கு கைமாறுகிறது. வங்கிக் கணக்குகளும், விலாசங்களும் ஆய்வு செய்யப்பட்டால் 1,000 கோடிக்கு மேல் போலிகள் வெளிவரும். இதேபோலத்தான் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திலும் நடக்கிறது.


5.கூட்டுறவு சங்கத்தில் கொடுக்கப்படும் பயிர்க்கடன் மற்றும் சொட்டுநீர் பாசன திட்டத்திலும் இதேபோன்ற முறைகேடுகள்.


6.வயதானவர்களுக்கு கொடுக்கும் ஓய்வூதியத்திலும் முறைகேடுகள் அரங்கேறுகின்றன.


7.குடிசை மாற்று வாரிய பயனாளிகளை தேர்ந்தெடுப்பதிலும் உழவர் உதவித்திட்டம் போலத்தான். அந்த வீடுகள் வாடகைக்கு விடப்படுவதற்கான காரணங்களும் அதுதான்.


8.பேருந்து நிலையங்கள் போன்று பொது இடங்களில் கடைகள் ஒதுக்கப்படுவதும் இப்படித்தான்.

 

Nakkheeran

 

மொத்தத்தில் அரசின் திட்டங்களில் மோசடிகளும், ஊழல்களும் நிறைந்ததாக மாறியிருக்கிறது. எந்தவொரு திட்டமாக இருந்தாலும் 50 சதவீத பயனாளிகளுக்கு கூட சென்றுசேர்வது கிடையாது. எனவே அரசின் திட்டங்கள் அனைத்தும் சரியானவர்களுக்குச் சென்று சேர்கிறதா என்பதை மத்திய, மாநில அரசுகள் குழு அமைத்து ஆய்வு செய்து உறுதிப்படுத்தினால் மட்டுமே இதுபோன்ற மோசடிகளையும், ஊழல்களையும் தடுக்க முடியும்." எனக் கூறியுள்ளார்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"பஞ்சு ஏற்றுமதியை நிறுத்தினால் மட்டும்தான் ஜவுளித்துறையை காப்பாற்ற முடியும்"- ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. கோரிக்கை! 

Published on 16/05/2022 | Edited on 16/05/2022

 

"Only by stopping cotton exports can the textile sector be saved" - ER Eswaran MLA Request!

 

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ஈ.ஆர்.ஈஸ்வரன் இன்று (16/05/2022) வெளியிட்டுள்ள அறிக்கையில், "நூல் விலை உயர்வால் தமிழகத்தில் ஜவுளித் துறையை சார்ந்த அனைவரும் செய்வதறியாமல் தடுமாறி கொண்டிருக்கிறார்கள். லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயத்தை தமிழகம் எதிர்கொண்டு இருக்கிறது. ஆறு மாதங்களுக்கு மேலாக, இதே சூழ்நிலை நீடிக்கின்ற நிலையிலும் ஒன்றிய அரசு இதைப் பற்றி சிறிதும் கவலைப்படவில்லை. 

 

உடனடியாக பஞ்சு ஏற்றுமதியை நிறுத்தினால் மட்டும்தான் ஜவுளித்துறையை காப்பாற்ற முடியும். பாதிப்பின் தீவிரத்தை உணராமல் ஒன்றிய அரசு அமைதி காப்பது வேதனையை அதிகப்படுத்துகிறது. குஜராத், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பெருமளவில் பஞ்சு பதுக்கப்பட்டிருக்கின்ற காரணத்தினால் பயன்பாட்டுக்கு வராமல் நூல் விலை உயர்வுக்கு காரணமாக இருக்கிறது. அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து பஞ்சு எடுக்கப்பட்டது தான் இந்த கொடுமைக்கு காரணமாக இருக்கிறது. இந்த சூழ்நிலையில் அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக மேலும் தங்களை தாங்களே நஷ்டப்படுத்தி கொண்டு திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் இறங்கி இருக்கிறார்கள். 

 

தமிழக முதலமைச்சரும் தொடர்ந்து மத்திய அரசுக்கும், பிரதமருக்கும் தொடர்ந்து கடிதங்களை எழுதிக் கொண்டிருக்கிறார். தொழில் துறையை சார்ந்தவர்கள் ஒன்றிய அமைச்சரை சந்தித்து முறையீடுகளை செய்து கொண்டிருக்கிறார்கள். இவ்வளவுக்கு அப்புறமும் ஒன்றிய அரசு கண்டு கொள்வதாக இல்லை. தமிழகத்தினுடைய பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் தமிழக ஜவுளி துறையின் உண்மை நிலையை ஒன்றிய அரசுக்கு எடுத்து செல்ல வேண்டும். இது இன்றியமையாத ஆக்கப்பூர்வமான தமிழகத்தின் தேவை. நூல் விலை விஷயத்தில் கருத்துக்களை கூறாமல் அமைதி காப்பதும் ஏற்புடையதல்ல. உடனடியாக உங்கள் முயற்சிகளை தொடங்க வேண்டுமென்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்". இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

Next Story

“முதலமைச்சருக்கும் துணை முதலமைச்சருக்குமான உறவு சுமூகமாக இல்லை என்பதை காட்டுகிறது” - ஈஸ்வரன்

Published on 23/02/2021 | Edited on 23/02/2021

 

It shows that the relationship between the Chief Minister and the Deputy Chief Minister is not smooth says Eeswaran

 

"வெறும் சம்பிரதாயத்திற்கு வாசிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையாக இடைக்கால நிதிநிலை அறிக்கை இருக்கிறது" என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில், "2011-ஆம் ஆண்டிலே 1 லட்சம் கோடியாக இருந்த தமிழக கடனை 5 லட்சத்து 70 ஆயிரம் கோடியாக உயர்த்தி தமிழக மக்களைக் கடனாளிகளாக மாற்றியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அடுத்த நிதிநிலை ஆண்டில் கடன் வாங்க தேவை இருக்காது என்று அறிவித்திருப்பது அமைய இருக்கின்ற புதிய ஆட்சியின் மீதுள்ள நம்பிக்கையா? 


தமிழகத்தின் வருமானம் 18 சதவீதம் குறையும் என்று அறிவித்துவிட்டு அரசினுடைய விளம்பரங்களுக்காக நூற்றுக்கணக்கான கோடியை தேர்தலை குறிவைத்துச் செலவு செய்திருப்பது ஏற்புடையதல்ல. பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பதற்காக தமிழக அரசின் மதிப்புக்கூட்டு வரி குறைக்கப்படும் என்ற மக்களின் நம்பிக்கையைப் பொய்யாக்கி இருக்கிறார்கள். பெட்ரோல், டீசல் மீதான வரி வருங்காலத்தில் உயரும் என்று சொல்லியிருப்பது வேதனையிலும் வேதனை.

 

காலாவதியாகப் போகிற அரசு போகிற போக்கில் 6,600 கோடியில் கோவையில் மெட்ரோ ரயில் என்று அறிவித்திருப்பது தேர்தலை குறிவைத்து நடத்தியிருக்கின்ற நாடகம். கவலையும் கஷ்டமும் வேதனையும் தவிர தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் மிஞ்சி இருப்பது எதுவுமில்லை. பலவிதமான சலுகைகள் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்திருந்த நிலையில், இடைக்கால நிதிநிலை அறிக்கையில் எதுவுமே இல்லாதது முதலமைச்சருக்கும் துணை முதலமைச்சருக்குமான உறவு சுமூகமாக இல்லை என்பதைக் காட்டுகிறது. எதிர்பார்த்த சலுகை அறிவிப்புகள் எல்லாம் 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவிப்பதற்காகக் காத்திருக்கிறதா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.