Skip to main content

கூட்டுறவு சங்கத் தேர்தலில் ஆளும் கட்சியினர் அராஜகம் - மார்க்சிஸ்ட் கண்டனம்

Published on 26/03/2018 | Edited on 26/03/2018
co-op

 

கூட்டுறவு சங்கத்தேர்தலில் ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


’’கூட்டுறவு அமைப்புகளுக்கு முதற்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று துவங்கியுள்ளது. மாநிலத்தின் பல பகுதிகளில் கூட்டுறவு சங்கங்களில் வேட்புமனு தாக்கல் செய்திட சென்றபோது, ஆளுங்கட்சியைச் சார்ந்தவர்களைத் தவிர வேறு யாரையும் வேட்பு மனு தாக்கல் செய்திட அனுமதிக்காமல் ஆளுங்கட்சியினர் அராஜகம் செய்து வருகின்றனர். 

 

காவல்துறையினரும் ஆளுங்கட்சியினருக்கு ஆதரவாகவே செயல்படுகின்றனர். 


உதாரணமாக, கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பகுதி அழகியபாண்டியபுரம் உள்ளுர் மீனவர் கூட்டுறவு சங்கத்தில் வேட்புமனு தாக்கல் செய்திட சிஐடியு சங்கத்தை சார்ந்தவர்கள் சென்றபோது, ஆளும் கட்சியினர் கூட்டமாக நின்று தடுத்துவிட்டனர். அங்கிருந்த காவல்துறையினரிடம் புகார் கொடுத்தபோது அவர்கள் கண்டுகொள்ளவில்லை. இதைப்போலவே, திருச்சி மாவட்டத்தில் தொட்டியம், தாத்தையங்கார்பேட்டை பகுதிகளிலும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் குத்தாலம் பகுதியிலும் இதர சில மாவட்டங்களிலும் ஜனநாயக விரோதமாக கூட்டுறவு சங்கங்களை கைப்பற்றிட ஆளுங்கட்சியினர் அராஜகம் செய்து வருகின்றனர். வேறு யாரையும் வேட்புமனு தாக்கல் செய்ய விடாமல் தடுத்து ஆளுங்கட்சியினரை மட்டும் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிப்பதும், போட்டியின்றி ஆளுங்கட்சியினர் வெற்றிபெற்றதாக அறிவிப்பதும் ஜனநாயக விரோத நடைமுறையாகும். ஆளுங்கட்சியினரின் இந்த அராஜக, வன்முறை செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. 


ஆளுங்கட்சியினர் தவிர வேறு யாரிடமும் வேட்பு மனு பெறாமல் ஒருதலைப்பட்சமாக ஆளுங்கட்சியினர் போட்டியின்றி வெற்றிபெற்றதாக அறிவிப்பதை தடுத்து நிறுத்தி, இத்தகைய கூட்டுறவு சங்கங்களில் அனைத்து தரப்பைச் சார்ந்தவர்களிடமும் வேட்பு மனுக்களைப் பெற்று ஜனநாயகப்பூர்வமாக தேர்தல் நடத்திட வேண்டுமென கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையரையும், தமிழக அரசையும் மாரக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.


’’

சார்ந்த செய்திகள்

Next Story

"தலைமைக்கு ஒரு கட்சி வந்துவிட்டால் சலாம் போட முடியாது" - கமல்ஹாசன்

Published on 13/06/2022 | Edited on 13/06/2022

 

kamalhaasan talks about vikram song and ruling party

 

உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக கமல்ஸ் ப்ளட் கமியூனி என்ற பெயரில் புதிய திட்டம் ஒன்று  தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உதவி தேவைப்படுபவர்களுக்கு விரைந்து ரத்தம் வழங்கப்படவுள்ளது. 

 

சென்னை ஆழ்வார்பேட்டையில் இத்திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய கமல்ஹாசன், "நான் விக்ரம் படத்தின் பாடலில் நடக்காத ஒன்றையும் எழுதவில்லை. உண்மையைத் தான் எழுதியிருக்கிறேன். ஏரி, குளம்  எல்லாத்தையும் பிளாட் போட்டு வித்திங்கண்ணா என் மக்கள் எல்லாம் செத்துடுவாங்கய்யா என்பதைத்தான் ஞாபகப்படுத்தியிருக்கிறேன். ஒன்றியம் என்றால் நான் ஏதோ ஒரு அரசியல் கட்சியைத் தான் சொல்கிறேன் என்று கோவித்துக் கொள்கிறார்கள். நான் எல்லா ஒன்றியத்தைத் தான் சொல்கிறேன். தலைமைக்கு ஒரு கட்சி வந்துவிட்டால் சலாம் போட இது ஒன்னும் அரசாட்சி கிடையாது, மக்களாட்சி. அதில் கேள்விகள் கேட்கப்படும்.

 

இப்போது பிள்ளைகளே தங்களது அப்பாக்களிடம் கேள்வி கேட்கிறார்கள். எனக்கு ஏன் இந்த பெயர்? நான் அதை ஏன் செய்ய வேண்டும்? ஏன் என் பெயருக்கு பின்னால் சாதி போட வேண்டும்? என்று கேட்கும் பிள்ளைகளுக்கு அப்பன் பதில் சொல்லியாக வேண்டும். அப்படி என் பிள்ளை கேட்டு விடக்கூடாது என்பதற்காகவே எனது இரு மகள்கள் பிறந்த போதே பிறப்பு சான்றிதழில் இருந்து சாதி பெயரை நீக்கி விட்டேன். என்னால் முடிந்தது அவர்கள் நடமாடும் பாதையை குப்பைகள் இல்லாமல் செய்வதுதான். நான் செய்துவிட்டேன் எல்லாரும் செய்யணும்.

இந்த மாதிரியான விஷயங்கள் ரத்தம் கொடுக்கும் போது மறைந்து விடும். நீ எந்த சாதி நான் எந்த சாதி, நீ எந்த கடவுளை வணக்குற, நான் எந்த கடவுளை வணங்குறேன் என்ற அனைத்து விஷயங்களும் மறந்திடும். அண்ணன், தம்பி என்ற உறவு வலுப்பெறும்" என்றார்.

 

 

 

Next Story

திமுகவின் தொழிற்சங்கம் முதன்மைச் சங்கமாக தேர்வு!

Published on 13/03/2021 | Edited on 13/03/2021

 

DMK's trade union elected primary union

 

தென்னிந்தியாவின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிறுவனமாக என்.எல்.சி இந்தியா நிறுவனம் உள்ளது. இந்நிறுவனத்தில், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அலுவலர்கள், 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிரந்தர ஊழியர்கள், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இதில், நிரந்தர ஊழிய தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து என்.எல்.சி. நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது, பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது போன்றவற்றிற்காக தொழிற்சங்கங்களுக்கான அங்கீகாரத் தேர்தல் 4 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும்.

 

கடந்த, பிப்ரவரி மாதம் 25-ஆம் தேதி தொழிற்சங்கங்களுக்கான அங்கீகாரத் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் 7,086 வாக்குகள் பதிவான நிலையில், வாக்குகள் நேற்றிரவு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில், தி.மு.கவின் தொழிற்சங்கமான தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் 2,352 வாக்குகள் பெற்று முதன்மைச் சங்கமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம், தொழிற்சங்க அங்கீகாரத்திற்காக 51% வாக்குகள் பெறவேண்டியது அவசியம். இந்நிலையில், அதற்குக் குறைவான வாக்குகள் (33.19%) தொ.மு.ச பெற்றிருப்பதால் அதற்கு அடுத்தபடியாக இரண்டாம் நிலையில் 23.95% (1697) வாக்குகள் பெற்றுள்ள அ.தி.மு.கவின் அண்ணா தொழிற்சங்கமும் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கமாக தேர்வு பெற்றுள்ளது. 

 

அதே சமயம், கடந்த காலங்களில் இரண்டாம் நிலையில் உற்சாகமாக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சி.ஐ.டி.யு தொழிற்சங்கம், 1,203 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சியின் தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தலில், மத்திய அரசை ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தொழிற்சங்கமான பாரதிய மஸ்தூர் சங்கம் 208 வாக்குகளையே பெற்றுள்ளது. இந்த தேர்தல் முடிவையடுத்து இனிவரும் காலங்களில் தொழிலாளர்களுக்கான பிரச்சனைகள், கோரிக்கைகள் குறித்த பேச்சுவார்த்தையில் தி.மு.கவின் தொழிலாளர் முன்னேற்றச் சங்கமும், அ.தி.மு.கவின் அண்ணா தொழிற்சங்கமும் இணைந்து பங்கேற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.