Skip to main content

“சீரழிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அண்ணாமலை பல்கலைக்கழகம்..” - முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்

Published on 27/07/2021 | Edited on 27/07/2021

 

"The ruined university is Annamalai University ..." - Former Minister CV Shanmugam

 

விழுப்புரத்தில் ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் அமைத்தே தீரவேண்டும் என போர்க்கொடி தூக்குகிறார் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம். முடியவே முடியாது என்கிறார் இந்நாள் அமைச்சர் பொன்முடி. 

 

கடந்த ஆட்சியில், முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் முயற்சியில் விழுப்புரத்தில் ஜெயலலிதா பல்கலைக்கழகம் துவக்கப்பட்டது. ஆனால், தற்போதைய உயர்கல்வி அமைச்சர் பொன்முடியோ, “பல்கலைக்கழகத்தின் பெயரை மட்டும் தான் அறிவித்தார்கள். எந்த நிதியும் ஒதுக்கவில்லை. அதனால் ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் கிடையாது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைத்து கூட்டு பல்கலைக்கழகமாகச் செயல்படும்” என்று அறிவித்துள்ளார். 

 

“இதை ஏற்றுக்கொள்ள முடியாது; எங்கள் ஆட்சியில் உருவாக்கப்பட்ட ஜெயலலிதா பல்கலைக்கழகம், செயல்பட வேண்டும்” என்று தமிழக அரசுக்கு எதிராக முன்னாள் அமைச்சரும் அதிமுக மாவட்டச் செயலாளருமான சி.வி. சண்முகம், தலைமையில் விழுப்புரத்தில் நேற்று மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய சி.வி. சண்முகம், “விழுப்புரத்தில் ஜெயலலிதா பெயரில் துவக்கப்பட்ட பல்கலைக்கழகம் மூடப்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம். கல்வியில் பின்தங்கிய விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பட்டப்படிப்பு படிக்கும் மாணவ மாணவிகளின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு விழுப்புரத்தில் ஜெயலலிதா பல்கலைக்கழகம் துவங்கப்பட்டது. 

 

இதற்கான அறிவிப்பு சட்டசபையில் வெளியிடப்பட்டுக் கடந்த பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி கவர்னரிடம் ஒப்புதல் பெறப்பட்டது. 26ஆம் தேதி பல்கலைக்கழகத்திற்கான துணைவேந்தர் நியமிக்கப்பட்டு 100 கோடி ரூபாய் அதற்காக நிதியும் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிகள் காரணத்தினால் மேற்கொண்டு பணிகளைச் செய்ய முடியவில்லை. 

 

பல்கலைக்கழகம் உருவாக்கம் அறிவிக்கப்பட்டபோது தற்போதைய பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் அப்போது, ‘என் தொகுதியில் உள்ள திருவள்ளூர் பல்கலைக்கழகத்தை எப்படி இரண்டாகப் பிரிக்கலாம்’ என்று கூறினார். திமுகவில் தலைவர்கள் ஊருக்கு ஒரு பேச்சு எனப் பேசி வருகின்றனர். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஜெயலலிதா பல்கலைக் கழகத்தை முடக்க நினைக்கின்றனர். அதற்கு அமைச்சர் பொன்முடி, நிதி இல்லை எனக் கூறி மக்களைத் திசை திருப்பி ஏமாற்றுகிறார். 

 

ஜெயலலிதா பல்கலைக்கழகம் நடத்த முடியாதவர்கள் தமிழகத்தில் புதியதாகப் பல கலைக் கல்லூரிகள் உருவாக்கப் போவதாகத் தேர்தல் வாக்குறுதியில் கொடுத்துள்ளனர். அது மட்டும் எப்படி சாத்தியம்? ஜெயலலிதா பல்கலைக்கழகம் செயல்படுவதால் பொன்முடிக்கு என்ன நஷ்டம்? இதற்காக இந்த தொகுதி எம்.எல்.ஏ.கூட எந்த குரலும் கொடுக்கவில்லை. நூறு கோடி ரூபாய் ஒதுக்கி, பல்கலைக்கழகம் நடத்த ஒப்புதல் அளித்தும் அதைச் செயல்படுத்தாத இவர்கள் மதுரையில் 200 கோடி ரூபாயில் கலைஞரின் பெயரில் நூலகம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கி உள்ளனர். இது எப்படி சாத்தியம்? 

 

ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை மூடிவிட்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இணைப்பதாகக் கூறுகின்றனர். இந்தியாவிலேயே மிகவும் மோசமான சீரழிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அண்ணாமலை பல்கலைக்கழகம் என்ற நிலை உள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்திற்கு தமிழக அரசு ஆண்டிற்கு 300 கோடி ரூபாய் கூடுதலாக நிதி வழங்கி வருகிறது. ஆனால், ஒரு முறை 100 கோடி ரூபாய் ஒதுக்கி புதிய பல்கலைக்கழகத்தை உருவாக்கி நடத்த முடியாது என்பது கேலிக்குரியதாக உள்ளது. ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் அமைவதை ஏற்றுக்கொள்ள பொன்முடி போன்றவர்களுக்கு மனமில்லை. காரணம் அவர் இந்தப் பகுதியில் பள்ளி, கல்லூரிகள் வைத்து நடத்தி வருகிறார். தனியாக ஒரு பல்கலைக்கழகத்தைத் துவங்க, அவர் நினைத்திருக்கலாம். அதன் காரணமாகக்கூட ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் அமையக் கூடாது என்ற எண்ணம் இருக்கலாம். 

 

எனவே தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி ஆகியோர் இந்த தவறான முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் இருப்பது அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், அந்தப் பல்கலைக்கழகத்துக்கு அம்பேத்கர் பெயரைச் சூட்டிக் கொள்ளுங்கள். எங்களுக்கு பெயர் முக்கியமில்லை; நல்ல பல்கலைக்கழகம் செயல்பட வேண்டும். விழுப்புரத்தில் சுற்றியுள்ள மாவட்ட மாணவர்கள் சிரமமின்றி பல்கலைக்கழகத்தை அணுக வேண்டும். அதுவே போதும்” இவ்வாறு சி.வி. சண்முகம் பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டம், தடையை மீறி நடத்தப்பட்டதால் சி.வி. சண்முகம் உட்பட பல அதிமுகவினர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.