திருச்சி வட்டார போக்குவரத்து அலுவலர் தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் நாமக்கல்லில் சோகத்தையும், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நாமக்கல் மாவட்டம் தில்லைபுரத்தை சேர்ந்தவர் சுப்ரமணியன் (வயது 56). இவர் திருச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலராக பணிபுரிந்து வந்துள்ளார். இவரது மனைவி பிரமிளா (வயது 51). இவர் ஆண்டாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவர்கள்  இருவரும் இன்று (06.07.2025) வகுரம்பட்டி பகுதியில் சரக்கு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து  தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடல்களை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கான  காரணம் குறித்து போலீசார்  தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில்,இந்த தம்பதியரின் மகள் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வந்த நிலையில், அவரது மகள் வேறு சமூகத்தைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்ய முடிவு எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் மனதளவில் விரக்தி அடைந்த இருவரும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.