காஞ்சிபுரம் புதுப்பட்டினம், உய்யாலிகுப்பத்தில் ரூபாய் 16.80 கோடி மதிப்பில் மீன் இறங்குதளங்கள் அமைக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'காஞ்சிபுரம் மாவட்டம், புதுப்பட்டினம் மற்றும் உய்யாலிகுப்பம் மீனவ கிராமங்கள் தொடர்ந்து கடலரிப்பினால் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருவதால், கடல் அரிப்பினைத் தடுக்க நேர்கல் சுவர்களுடன் கூடிய மீன் இறங்குதளங்கள் அமைத்து தர இப்பகுதி மீனவர்கள் கோரியதைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் 2020-21 நிதியாண்டில் விதி எண் 110-ன் கீழ் காஞ்சிபுரம் மாவட்டம், புதுப்பட்டினம் மற்றும் உய்யாலிகுப்பம் கிராமத்தில் ரூபாய் 16.80 கோடி மதிப்பீட்டில் நேர்கல் சுவர்களுடன் மீன் இறங்குதளங்கள் அமைக்கப்படும் என அறிவித்தார்கள். தற்போது, தமிழக அரசால் இப்பணிகளுக்கான நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டு பணிகள் விரைவில் துவங்கும் நிலையிலுள்ளன.
இப்பணிகள் நிறைவேற்றப்படுவதால் புதுப்பட்டினம் மற்றும் உய்யாலிகுப்பம் கிராமப் பகுதியில் கடல் அரிப்பு தடுக்கப்படுவதோடு மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பாக நிறுத்திடவும் இயலும்.' இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.