கன்னியாகுமரி எல்லைப் பகுதியில் காவல்துறையினர் நடத்திய வாகனச் சோதனையில் ஒரு பேருந்து பயணிடமிருந்து ரூபாய் 70 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழ்நாடு- கேரளா எல்லையான படந்தாலுமூடு பகுதியில் இரு மாநில மதுவிலக்கு காவல்துறையினர் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் சென்ற கேரள மாநில அரசுப் பேருந்தை சோதனை செய்தனர். சோதனையின் போது பேருந்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் பையுடன் இருந்த நபரை சோதனை செய்ததில், அவரது பையில் கட்டுக்கட்டாக பணம் கண்டுபிடிக்கப்பட்டது.
காகிதத்தில் சுற்றப்பட்டக் கட்டுகளில் 70 லட்சம் ரூபாய் பணம் இருந்தது. உரிய ஆவணங்களின்றிப் பணம் கொண்டு செல்லப்பட்டதால், அதை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், அந்த நபரை களியக்காவிளை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு தமிழ்நாடு மற்றும் கேரளா எல்லைப் பகுதிகளில் வரும் நாட்களிலும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உள்ளதாக, இருமாநில காவல்துறையினரும் தெரிவித்துள்ளனர்.