கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாக துருகம் அருகே பாவந்தூர் கிராமத்தில் அமைந்துள்ளது தியாக துருகம் வனச்சரக அலுவலகம். இந்த அலுவலகத்தில் பணியாற்றி வரும் வனவர் செந்தில்குமார் என்பவர் குத்தகைதாரர்களிடம் லஞ்சம் கேட்பதாக கள்ளக்குறிச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை காவல் கண்காணிப்பாளர் சத்யராஜுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதனையடுத்து மாலை 6 மணி அளவில் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி சத்யராஜ் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் வனச்சரக அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் வனவர் செந்தில்குமாரின் அறையில் கணக்கில் வராத 3 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணம் இருந்துள்ளது. இதனை அடுத்து அவரிடம் விசாரணை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.