Skip to main content

பயிர் நிவாரணத்திற்கு விவசாயிகளிடம் ரூ.200 லஞ்சம்... வீடியோவில் சிக்கிய பெண் அதிகாரி!

Published on 20/01/2021 | Edited on 21/01/2021

 

Rs 200 from farmers for crop relief ... Female officer caught in video!

 

தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதமாக பருவம் தவறிப் பெய்த தொடர் மழையால் அறுவடைக்கு தயாரான நெல் பயிர்கள் சுமார் 15 லட்சம் ஏக்கர்களுக்கு மேலாக தண்ணீரில் மூழ்கி நாசமாகின. அதேபோல மிளகாய், கடலை, உளுந்து செடிகளும் நாசமாகியுள்ளது. பருவம் தவறிப் பெய்த மழையால் ஏற்பட்ட இழப்பிற்கு பேரிடராக அறிவித்து ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை கேட்டு விவசாயிகள் ஆங்காங்கே மறியல் போராட்டங்ளில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இந்நிலையில் பயிர் சேதங்களை வருவாய் மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் மூலம் கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கியுள்ளதாக அரசும், ஆட்சியர்களும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஒவ்வொரு விவசாயியும் சேதமான தன் வயலில் நின்று படம் எடுத்து அத்துடன் சிட்டா, பாஸ்புக், ஆதார் நகல் என ரூ.200 வரை செலவளித்து கிராம நிர்வாக அலுவலகங்களில் விண்ணப்பம் கொடுத்து வருகின்றனர். இப்படி எல்லாவற்றையும் இழந்து நிவாரணத்திற்காக விண்ணப்பிக்க அரசு சொன்ன ஆவணங்களுடன் செல்லும் விவசாயிகளிடம் வருவாய்துறை அதிகாரிகள் ரூ.200 லஞ்சமாக பெற்று வருகின்றனர். இது "வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவதாக" உள்ளதாக கூறுகிறார்கள் விவசாயிகள் வேதனையாக.

 

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகாவில் உள்ள பல கிராமங்களில் இதுபோல பணம் வசூல் நடப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டிய நிலையில், கொடிவயல் கிராமத்தில் அந்த கிராம நிர்வாக அலுவலர் வேம்பரசியே விவசாயிகளிடம் ரூ.200 வாங்குவதும், இது டைப் படி வாங்குவதாக காரணமும் சொல்லிக் கொள்கிறார். இவை அனைத்தையும் வீடியோ பதிவு செய்த இளைஞர்கள் சமூகவலைதளங்களில் பரப்பி வருகின்றனர். ஆனால் அதே தாலுகாவில் உள்ள சில கிராம நிர்வாக அலுவலர்களிடம் கேட்டால், அப்படி யாரிடமும் பணம் வசூல் செய்யக் கூடாது. டைப் செய்ய தாலுகா அலுவலகத்தில் அதற்கான பணியாளர்கள் உள்ளனர் என்கிறார்கள்.

 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளோம். விரைவில் நடவடிக்கையை எதிர்பார்க்கலாம்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பூச்சிக்கொல்லி மருந்தா? பயிர்க்கொல்லி மருந்தா? - போராடும் விவசாயிகள்! நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அதிகாரிகள்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Farmers struggle at Pudukkottai District Collectorate

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சேர்பட்டி அருகே மறவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் 10 ஏக்கரில் நெல் பயிர் நடவு செய்துள்ளார். கதிர் வரும் நிலையில் இலைசுருட்டுப்புழு காணப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் பூச்சிக்கொல்லி மருந்துக் கடையில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கிச் சென்று 8.5 ஏக்கருக்கு தெளித்துள்ளார்.

பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து சில நாட்களில் பயிர்கள் கருகத் தொடங்கி ஒரு வாரத்தில் முழுமையாக கருகியது. சம்பந்தப்பட்ட மருந்துக் கடையில் கேட்டதற்கு சரியான பதில் இல்லாததால் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் விவசாயி செந்தில்குமார். இதனையடுத்து வயலுக்கே வந்து ஆய்வு செய்த வேளாண்துறை அதிகாரிகள் பூச்சிக்கொல்லி மருந்தால் தான் பயிர்கள் கருகிவிட்டதாக சான்றளித்தனர்.

இதனையடுத்து விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக்கடை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வியாழக்கிழமை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் துணைச் செயலாளர் சேகர் முன்னிலையில் ஏராளமான விவசாயிகள் கருகிய பயிர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர்.

கருகிய பயிர்களுடன் வந்த விவசாயிகளை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்காததால் நுழைவாயிலிலேயே கருகிய பயிர்களை கொட்டியும் கையில் வைத்துக் கொண்டும் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு வந்த போலீசாரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய பிறகு ஆட்சியர் அலுவலக நுழைவாயில் போராட்டத்தை விவசாயிகள் முடித்துக் கொண்டனர்.

ஆனால் வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பிச்சத்தான்பட்டியில் திருச்சி மாவட்ட விவசாயிகள் இருவர் செல்போன் கோபுரத்தில் ஏறிவிட்டனர். அதேபோல மற்றொரு குழு விவசாயிகள் விராலிமலை வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்ற விவசாயிகள் அலுவலகத்திற்குள் நுழைந்து நடவடிக்கை எடுக்கும் வரை போகமாட்டோம்  என்று அங்கேயே படுத்துவிட்டனர்.

அதன் பிறகே சம்பந்தப்பட்ட விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக் கடையை அதிகாரிகள் மூடினர். பூச்சிக்கொல்லி மருந்து கேட்டால் பயிர்க்கொல்லி மருந்து கொடுத்து 8.5 ஏக்கர் நெல் பயிர்களைக் கொன்ற பூச்சி மருந்துக்கடை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கீரமங்கலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை புதிய லேபிள் ஒட்டி புதிய மருந்தாக விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1500 மருந்துப் பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இப்போது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன் என்ற கேள்வி எழுப்புகின்றனர்.

Next Story

நில உட்பிரிவு மாற்ற லஞ்சம்; நில அளவையாளர் கைது

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
3000 bribe to change land subdivision; Land surveyor arrested

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா வட்டம் அலுவலகத்தில் நில அளவையாளராக பணியாற்றி வருபவர் 26 வயதான இளைஞர் அரவிந்த். அரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் மகன் சுதாகர் (43) வாலாஜா வட்டத்திற்குட்பட்ட செங்காடு கிராமத்தில் வீட்டு மனை வாங்கி கடந்த 9.2.2024 ஆம் தேதி பத்திரப்பதிவு செய்துள்ளார். அந்த வீட்டுமனையை உட்பிரிவு செய்வதற்காக நில அளவையாளர் அரவிந்தை அணுகியுள்ளார். அப்பொழுது அரவிந்த் வீட்டு மனையை உட்பிரிவு செய்து மாற்ற ஐந்தாயிரம் கேட்டதாகத் தெரிகிறது. அதன் பின் 3 ஆயிரம் கொடுப்பதாக ஜெயராமன் ஒத்துக் கொண்டு வந்துள்ளார்.

வீட்டு மனை பத்திரப்பதிவு செய்யும்போதே உட்பிரிவு செய்வதற்கான கட்டணத்தை அரசுக்கு செலுத்தியுள்ளனர். அப்படியிருந்தும் தனக்கு 5 ஆயிரம் லஞ்சம் வேண்டும் எனக் கேட்டுள்ளார். பணம் தந்தால்தான் அளவீடு செய்து பெயர் மாற்றித் தருவேன் என்றுள்ளார். வயது வித்தியாசம் பார்க்காமல் தன்னை அலுவல் ரீதியாக சந்திக்க வரும் பொதுமக்களை ஒருமையில் பேசியதாகவும் கூறப்படுகிறது. சுதாகரையும் அப்படி பேசியதால் கடுப்பாகியுள்ளார்.

இதனால் மார்ச் 25 ஆம் தேதி, லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு நேரடியாக சென்று புகார் தந்துள்ளார். புகாரைப் பதிவு செய்துகொண்டு 3 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய பணத்தை தந்து அனுப்பியுள்ளனர். அந்த பணத்தை அவரும் கொண்டு சென்று வழங்கியுள்ளார். அதை வாங்கி அவர் தனது பாக்கெட்டில் வைத்ததை உறுதி செய்து கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கணேசன் தலைமையிலான போலீசார் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.