Skip to main content

பிச்சைக்காரரிடம் கொள்ளையடிக்கப்பட்ட ரூ. 2 இலட்சம்..! காவல்துறை மீட்டது எப்படி..?

Published on 06/08/2021 | Edited on 06/08/2021

 

Rs 2 lakh looted from beggar How did the police recover ..?

 

தென்காசி மாவட்டத்தின் சங்கரன்கோவில் நகரை ஒட்டியுள்ள நொச்சிகுளம் கிராமத்தைச் சேர்ந்த 63 வயதானவர் சண்முகையா. உறவுகள் இருந்தும் கவனிப்பாரின்றிப் புறக்கணிக்கப்பட்டவர். இவரது முதல் மனைவி இவரைவிட்டு பிரிந்து சென்றுவிட்டார். இரண்டாவது மனைவியோ உடல்நலம் சரியில்லாத நிலையில் இவரைவிட்டு ஒதுங்கியிருக்கிறார். முற்றிலுமாக வாழ்வாதாரத்தை இழந்து புறக்கணிக்கப்பட்ட சண்முகையா, அருகிலுள்ள சங்கரன்கோவில் நகரின் வீதிகளில் பிச்சை எடுத்து தனது ஜீவனத்தை நடத்திவந்திருக்கிறார். 

 

ஒரு கால் உடைந்த நிலையில் அவரால் சரியாக உட்காரவும் முடியாத நிலை. இதனால், சாப்பிடுவது, டீ குடிப்பது உள்ளிட்டவற்றை நின்றுகொண்டே செய்ய வேண்டிய கஷ்ட நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். அன்றாடம் பஜார் வீதிகள், கோவில் பகுதிகளில் பிச்சை எடுக்கும் சண்முகையா, தனக்கான உணவுச் செலவுபோக மீதமுள்ளவற்றைத் தன்னுடைய மூட்டையில் பாதுகாப்பாக வைத்திருப்பார். 

 

Rs 2 lakh looted from beggar How did the police recover ..?
                                                       சண்முகையா

 

எங்கு சென்றாலும் அந்த மூட்டையை எடுத்துக்கொண்டே செல்வார். அதைவிட்டுப் பிரியமாட்டார். டீ குடிக்கும்போதும், உணவு சாப்பிடும்போதும் கூட அவர் தன் தலையில் உள்ள மூட்டையை கீழே இறக்கி வைத்தது கிடையாது. இதில் மிகவும் கவனமாகவும் செயல்பட்டுவந்திருக்கிறார். கசங்கிப் போன கந்தலான ஆடை, பரட்டைத் தலை என மிகவும் பரிதாபமாகக் காட்சியளிக்கும் இந்த ஜீவனைக் கண்டு இரக்கப்பட்ட பலர், இயன்றளவு பிச்சை போட்டுள்ளனர். பேருந்து நிலையம், கோவிலின் மாட வீதிகளில் இரவு பொழுதைக் கழிக்கும் சண்முகையா, அதுசமயம் கூட தன்னுடைய மூட்டையைக் கவனமாக வைத்திருப்பதுண்டாம்.

 

இப்படி கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக தினசரி வீதிகளில் பிச்சை எடுத்துப் பிழைப்பை ஓட்டும் சண்முகையா, தனக்கான அன்றாடச் செலவு போக மீதமுள்ளவற்றறைப் பத்திரமாக தனது மூட்டைக்குள் வைத்துப் பாதுகாத்துவந்திருக்கிறார். பிச்சை சரிவரக் கிடைக்காத நிலையில் அன்றைய தினம் தனக்கான உணவுச் செலவுகளுக்கு இந்த சேமிப்பு உதவும் என்ற நம்பிக்கையில் அவ்வாறு சிறுகச் சிறுக சேமித்திருக்கிறார்.

 

இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் இரண்டாம் தேதியன்று பஜார் வீதியிலிருக்கும் டீ கடை ஒன்றில் டீ குடிப்பதற்காகப் போயிருக்கிறார். அப்போது அந்தக் கடையில் கூட்டம் அதிகமாக இருந்ததால், தன் தலையில் இருந்த மூட்டையைச் சண்முகையா ஒரு ஓரத்தில் வைத்துவிட்டு டீ வாங்கிக் குடித்திருக்கிறார். திரும்பி வந்து பார்க்கும்போது தனது அழுக்கேறிப் போன மூட்டை திருடு போனது தெரியவர, பதறிப்போனவர் அருகிலுள்ள போலீஸ் அவுட்போஸ்ட்டிலிருந்த போலீசாரிடம் படபடப்பாக நடந்ததைத் தெரிவித்திருக்கிறார்.

 

Rs 2 lakh looted from beggar How did the police recover ..?
                                                   கொள்ளையர்கள் 

 


“ஐயா, இத்தனை வருட காலம் நான் பிச்சை எடுத்து செலவு பண்ணுனது போக 2 லட்சத்துக்கும் மேல மூட்டையில சேமிச்சு வச்சிருந்தேம்யா. அது திருடு போயிருச்சுய்யா” என்று கண்ணீரும் கம்பலையுமாகக் கதறியிருக்கிறார் சண்முகையா. இந்தத் தகவலறிந்த சங்கரன்கோவில் டவுண் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார், விசாரணையில் இறங்கியிருக்கிறார்கள். அந்தப் பகுதியிலுள்ள சி.சி.டி.வி. காட்சிகளை அவர்கள் ஆராய்ந்தபோது, லுங்கி கட்டிய ஒருவர் சண்முகையாவின் மூட்டையைத் திருடிக்கொண்டு போவது தெரியவந்திருக்கிறது. 

 

அவரை அடையாளம் கண்ட போலீசார், அவரைக் கஸ்டடிக்குக் கொண்டுவந்திருக்கிறார்கள். அவரிடம் முறையாக விசாரணையை மேற்கொண்டபோதுதான், அவர் சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த குமார் என்பது தெரியவந்தது. அடுத்த அவரது கூட்டாளியான ஸ்ரீனிவாசன், உலகநாதன், ராஜபாளையத்தைச் சேர்ந்த முருகன் உள்ளிட்ட நான்கு பேரைக் கைது செய்து அவர்களிடமிருந்த பணத்தை மீட்டிருக்கிறார்கள். மேலும் விசாரணையில், சொகுசான வாழ்க்கை வாழ்வதற்காக இந்தப் பணத்தைத் திருடியதாக அந்த நான்கு பேரும் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். 

 

இதுகுறித்து நாம் இன்ஸ்பெக்டர் ராஜாவிடம் பேசியபோது, “இது ரொம்பவும் பரிதாபமான சம்பவம். பாவப்பட்ட பிச்சைக்காரரிடமே திருடியது ரொம்பக் கொடுமை. இதில் சம்பந்தப்பட்டக் குற்றவாளிகளை ஒரே நாளில் பிடித்தாக வேண்டும் என்ற வைராக்கியத்தில்தான், அன்றைய தினம் இரவு விடிய விடிய பல இடங்களுக்கு அலைந்து, ஐந்து குற்றவாளிகளையும் தூக்கியுள்ளோம். அவர்களிடமிருந்த மிச்சமுள்ள 49,320 ரூபாயை ரெக்கவரி செய்யப்பட்டிருக்கு. பாவம் அந்தப் பிச்சைக்காரரின் கால் உடைந்துபோனதால் அவரால் நின்றுகொண்டுதான் சாப்பிட முடிகிறது. 

 

பிடிபட்டவர்களில் ராஜபாளையம் முருகன் என்பவன், தண்ணி அடிச்சிட்டு பஸ் ஸ்டாண்டில் படுத்துக்கிடப்பவன். அப்போதுதான் அவனுக்கு சண்முகையாவிடம் பணம் இருப்பது தெரியவந்திருக்கிறது. அப்போதே அதை அடிக்க வேண்டுமென்று திட்டம் போட்டிருக்கிறான். அதனால்தான் அன்றைய தினம் திட்டமிட்டு சண்முகையாவை முருகன், டீ குடிப்பதற்கு கூட்டிச் சென்றபோது வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்ட அவனது கூட்டாளிகள், மூட்டையைத் திருடிக்கொண்டு போயிருக்கிறார்கள். இதில் முருகன் என்பவன் 20,000 ரூபாய்க்கு அடமானத்திலிருந்த தனது வீட்டு நகையை, திருடிய பணம் மூலமாகத் திருப்பியிருக்கிறான். ஒருத்தன் 5000, இன்னொருத்தன் 2,500 பங்கு வாங்கிட்டுத் தேனிக்கு ஓடிட்டான். திருடிவிட்டு வேறு எங்கும் போகாமல் இங்கேயே இருந்திருக்கிறார்கள். ஜாலியாக செலவு செய்துவிட்டு, குமாரும் இன்னொருத்தனும் விடிய விடிய 3,000 ரூபாய்க்கு மேல குடிச்சிருக்காங்க. இதுல ஒருத்தன் பூக்கடையில் உள்ள சில்லரைப் பணத்தையும் திருடிச் செலவழிச்சவன். இவங்க ஐந்து பேரையும் உள்ள தள்ளியிருக்கிறோம். பாவம் 10 வருசத்துக்கு மேல பிச்சை எடுத்து சேமித்த சண்முகையா, தன்னுடைய சிறிய வீடு ஒன்றின் பராமரிப்புச் செலவுக்காக ஒன்றரை லட்சம் கொடுத்திருக்கிறார். ஒருவனுடைய மனமும் உடலும் இயங்காதபோதுதான் அவன் பிச்சை எடுக்கும் நிலைமைக்குத் தள்ளப்படுகிறான். அந்தப் பரிதாபப் பிச்சைக்காரனிடமே திருடுவது கொடுமையிலும் கொடுமை. பஞ்சமா பாதகம்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.