Skip to main content

கொலை உள்ளிட்ட 30 வழக்குகளில் தொடர்புடைய ரவுடி வசூர் ராஜா மீது குண்டர் சட்டம் பாய்ந்தது! 

Published on 22/07/2021 | Edited on 22/07/2021

 

Rowdy Vasoor Raja, who is involved in 30 cases including murder, has been charged with thuggery
                                                                         வசூர் ராஜா

 

கொலை, கொள்ளை உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடி வசூர் ராஜா மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. வேலூர் மாவட்டம் அலமேலுமங்காபுரம் அருகே உள்ள புது வசூர் பகுதியைச் சேர்ந்த வசூர் ராஜா என்கிற துளசி கோவிந்தராஜன் (35). ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இந்நிலையில், சேலம் கிச்சிப்பாளையத்தில் கடந்த ஆண்டு டிச. 22ஆம் தேதி ரவுடி செல்லத்துரை என்பவரைக் கூலிப்படையை வைத்து தீர்த்துக்கட்டிய வழக்கிலும் கும்பல் தலைவனாக செயல்பட்டார்.

 

சில மாதங்களாக தலைமறைவாக இருந்த அவரை தனிப்படை காவல்துறையினர் கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவின்பேரில், திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். செல்லத்துரை கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில், ஏற்கனவே 14 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. ரவுடி வசூர் ராஜா மீது வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் போக்கிரித்தாள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் வேலூர், கடலூர், சேலம் மாவட்டங்களில் மட்டுமின்றி, கர்நாடகா மாநிலம் பரப்பன அக்ரஹாரம் காவல் நிலையத்திலும் கொலை, கொள்ளை, கஞ்சா விற்பனை, பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் உள்பட 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. 

 

இந்நிலையில் வசூர் ராஜா, பிணையில் வெளியே வந்தால் அவர் மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளதால், அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய சேலம் தெற்கு சரக காவல்துறை உதவி ஆணையர் மோகன்ராஜ், சேலம் மாநகர ஆணையர் நஜ்முல் ஹோதாவிற்கு பரிந்துரை செய்தார். அவருடைய பரிந்துரையின்பேரில் ரவுடி வசூர் ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய காவல்துறை ஆணையர் ஜூலை 20ஆம் தேதி உத்தரவிட்டார். இதற்கான கைது ஆணை, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள வசூர் ராஜாவிடம் புதன்கிழமை (ஜூலை 21) சார்வு செய்யப்பட்டது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 20 லட்சம் வரை சொத்து சேர்த்த பஞ்சாயத்து கிளார்க்; லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anti-corruption department raids panchayat clerk house

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவர் காட்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் தற்போது பொன்னை அடுத்த பாலேகுப்பத்தில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியில் உள்ளார்.

2011 - 2017 ஆகிய இடைப்பட்ட காலகட்டத்தில் பணியின் போது வருமானத்திற்கு அதிகமாக சுமார் 20 லட்சம் வரை சொத்து சேர்த்ததாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் பிரபு மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை அடுத்து இன்று வேலூர் லஞ்ச ஒழிப்புத் துறையினர் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியில் உள்ள பஞ்சாயத்து கிளார்க் பிரபு என்பவரின் வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சோதனையில் வங்கி பரிவர்த்தனை மற்றும் சொத்து தொடர்பான ஆவணங்கள், பிரபுவின் வருமானம் தொடர்பான ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

வேட்பாளரை வசைபாடும் நிர்வாகிகள்; அடுத்தடுத்து வெளியாகும் ஆடியோவால் பரபரப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Argument to party officials with Vellore candidate AC Shanmugam

தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. வாக்குப்பதிவு நடந்து முடிந்த பின் சில இடங்களில் உட்கட்சி மோதல் உச்சத்துக்குச் சென்றுள்ளது. வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜகவின் தாமரை சின்னத்தில் புதிய நீதி கட்சியின் நிறுவனர் ஏசி சண்முகம் போட்டியிட்டார். தமிழ்நாட்டில் பணமழை பொழிந்த சிலதொகுதிகளில் மிக முக்கியமானது வேலூர் நாடாளுமன்ற தொகுதி. வாக்காளர்களுக்கு தலா 500 ரூபாய், ஒரு பூத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் என சுமார் 100 கோடிக்கு மேல் தேர்தல் களத்தில் செலவு செய்துள்ளாராம் ஏசி சண்முகம்.

பாஜக நிர்வாகிகள், பாமக நிர்வாகிகள் மாவட்டம் ஒன்றியம் நகர கிளை வரை லட்சங்களில் தேர்தல் பணிக்காக ஏ.சி.சண்முகத்திடம் பணம் வாங்கி உள்ளனர். இப்படி பணம் வாங்கியவர்கள் வாக்குப்பதிவு முடிவுக்கு பின்னர் பங்கு பிரிப்பதில் அடித்துக்கொண்டு இருக்கின்றனர். தேர்தலுக்கு முன்பே ஏ.சி.சண்முகத்திடம் பணம் வாங்குவதில் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்து சில ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. வாக்குப்பதிவு முடிவுக்கு பின்னர் இப்பொழுது ஏ.சி. சண்முகத்தை கடுமையான முறையில் விமர்சிக்கும் ஆடியோக்கள் வெளியாகி உள்ளன. அதன் தொடர்ச்சியாக தினமும் சண்டையும் அடித்துக் கொண்டும் சாலை மறியலிலும் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஏ-கஸ்பா பகுதியில் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்ததும் பணம் பங்கு பிரிப்பதில் பாஜகவினர் இடையே மோதல் ஏற்பட்டு கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் பாஜக வழக்கறிஞர் கோகுல் தரப்பினரை மற்றொரு தரப்பினர் தாக்கியதில் காயம் அடைந்த கோகுலை காவல்துறையினர் மீட்டு அழைத்து வந்த போது காவல்துறையினர் முன்னிலையில் மீண்டும் சரமாரியாக தாக்கினர். இதனைத் தொடர்ந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் கோகுல், கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ், மற்றும் ஸ்ரீ வர்ஷன் ஆகிய மூன்று பேரை போலீஸார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பேரணாம்பட்டு ஒன்றியத்தில் பாஜக நிர்வாகிகள் பணம் பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் புதிய நீதிக் கட்சி நிர்வாகிகளை தொடர்பு கொண்டு ஏ.சி. சண்முகத்தை ஆபாசமான வார்த்தைகளில் கொச்சையாகத் திட்டி பேசி உள்ளனர். இந்த ஆடியோ தற்போது வெளியாகி, பாஜக தரப்பை நெருக்கடிக்கு உள்ளாக்கியது. இதனால் வேலூர் மாவட்ட பாஜக தலைவர் மனோகரன்,  பேரணாம்பட்டு ஒன்றியத்தை மொத்தமாக களைத்து விட்டார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் யாரும் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என அறிக்கை வெளியிட்டுள்ளார். இப்படி தேர்தல் முடிந்த பின்னரும் தினம் தினம் வேலூர் மாவட்ட பாஜகவில் அடிதடியும் சண்டையும் நடந்து வருகின்றது.

புதிய நீதிக் கட்சியின் குடியாத்தம் பகுதி நிர்வாகிகளும், வேலூர் மாவட்ட நிர்வாகிகள் சிலரும் கட்சியிலிருந்து நீக்குவதற்கான பணியில் ஏ.சி. சண்முகம் ஈடுபட்டுள்ளார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்