Skip to main content

பெண் கொலை வழக்கு; ரவுடி ரகுவின் கூட்டாளிகளை காவலில் எடுத்து விசாரணை!

Published on 06/07/2023 | Edited on 06/07/2023

 

Rowdy Raghu accomplices investigation woman passed away case

 

சேலம் அருகே, பெண் கொடூரமாக குத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் ரவுடி ரகுவின் கூட்டாளிகள் மூன்று பேரை காவலில் எடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.    

 

சேலம் மாவட்டம் சின்ன சீரகாபாடி சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் லட்சுமி (42). இவருடைய கணவர் ரகு. மேட்டூரைச் சேர்ந்த ரகு மீது கொலை, ஆள் கடத்தல், அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் லட்சுமி, கடந்த ஜூன் மாதம் 19ம் தேதி வீட்டில் தலைமுடி அறுக்கப்பட்டும், உடல் முழுக்க கத்திக்குத்து காயங்களுடனும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுக் கிடந்தார்.    

 

லட்சுமி முதலில் ஒருவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து விட்டார். இரண்டாவதாக ஒருவரை திருமணம் செய்தார். அவர் திடீரென்று இறந்துவிட்டார். அதையடுத்து மேட்டூர் ரவுடி ரகுவுடன் பழக்கம் ஏற்பட்டு, அவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சமத்துவபுரத்தில் ஒரு இளைஞருடன் லட்சுமி நெருங்கிப் பழகியதாகவும், அதை ரகு கண்டித்ததாகவும் சொல்லப்படுகிறது. மேலும், கட்டப்பஞ்சாயத்து, ஆள்கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தின் மூலம் லட்சுமி பெயரில் ரகு பல்வேறு சொத்துகளை வாங்கியதாகவும், அந்த சொத்துகளை மீண்டும் தன் பெயருக்கு மாற்றி எழுதித் தரக் கேட்டபோது ஏற்பட்ட தகராறில் அவரை ரகு கூட்டாளிகளுடன் சேர்ந்து  கொலை செய்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.    

 

அதன்பேரில் ரகு, அவருடைய கூட்டாளிகள் ஷேக் மைதீன் (29), ஜோசப் என்கிற பாலாஜி (19), ஆனந்த் (28) ஆகியோரை ஆட்டையாம்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் தேடி வந்தனர். இதற்கிடையே, கோபிசெட்டிப்பாளையம் நீதிமன்றத்தில் ரகு சரணடைந்தார். அவரை காவல்துறையினர் கடந்த ஜூன் 26ம் தேதி காவலில்  எடுத்து விசாரித்தனர். அவரைத் தொடர்ந்து பவானி நீதிமன்றத்தில் ரகுவின் கூட்டாளிகள் மூவரும் சரணடைந்தனர். இதையடுத்து கூட்டாளிகள் ஷேக் மைதீன், ஜோசப் என்கிற பாலாஜி, ஆனந்த் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க சேலம் நான்காவது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் காவல்துறையினர் மனுத்தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம், மூன்று பேரையும் இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டது. அதன்படி ரகுவின் கூட்டாளிகளை காவலில் எடுத்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.