Skip to main content

மது குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்த ரவுடி; வெட்டிக்கொன்ற கூட்டாளி!  

Published on 15/12/2023 | Edited on 15/12/2023
rowdy passes away in salem

சேலத்தில், மது குடிக்கப் பணம் கேட்டு தொந்தரவு செய்த ரவுடியை, மற்றொரு ரவுடி கத்தியால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சேலம் ஜான்சன்பேட்டை, குடிசைமாற்று குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த நடராஜ் மகன் பரசுராமன் (27). ரவுடியான இவர் மீது திருட்டு, வழிப்பறி, கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளன. இவருடைய மனைவி மலர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, வழிப்பறி வழக்கில் அஸ்தம்பட்டி காவல்துறையினர் பரசுராமனை கைது செய்தனர். சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அவர், கடந்த 20 நாட்களுக்கு முன்புதான்  பிணையில் வெளியே வந்தார். 

பரசுராமனும், ஜான்சன்பேட்டை 2வது கிழக்குத்தெருவைச் சேர்ந்த சின்னத்தம்பி என்கிற உதயகுமாரும் (40) கூட்டாளிகள். இவர் மீதும் கொலை, வழிப்பறி, சாராய விற்பனை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. பரசுராமனும், சின்னத்தம்பியும் அடிக்கடி ஒன்றாக அமர்ந்து மது குடிப்பது வழக்கம். டிச. 13ம் தேதி காலையிலேயே அவர்கள் இருவரும் போதை தலைக்கேறிய நிலையில், ஒன்றாக சுற்றித்திரிந்தனர். மதியம் ஆக ஆக பரசுரமானுக்கு கொஞ்சம் கொஞ்சமாக போதை தெளிந்துள்ளது. 

இதையடுத்து அவர் மீண்டும் மது குடிப்பதற்காக சின்னத்தம்பியிடம் பணம் கேட்டுள்ளார். அவர் பணம் தர மறுத்ததோடு, ஆபாச வார்த்தைகளால் திட்டிவிட்டு தனது வீட்டுக்குச் சென்று விட்டார். ஆனாலும் அவரை பின்தொடர்ந்து வீட்டுக்கே சென்ற பரசுராமன் பணம் கேட்டுள்ளார். குடிக்கப் பணம் தராவிட்டால் உன்னுடைய மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்று விடுவேன் என்றும் கூறியிருக்கிறார். இதனால் மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த சின்னத்தம்பி, கீழே கிடந்த செங்கல்லை எடுத்து பரசுராமனை தாக்கியுள்ளார். இதில் நிலை தடுமாறி அவர் கீழே விழுந்தார். 

அப்போதும் ஆத்திரம் தீராத சின்னத்தம்பி, வீட்டுக்குள் சென்று கத்தியை எடுத்து வந்து, அவரை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் பரசுராமனின் தலை, கழுத்து, முகம், கை ஆகிய இடங்களில் பலத்த வெட்டு விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் பரசுராமன் ரத்த வெள்ளத்தில் நிகழ்விடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். 

பிற்பகல் 3.15 மணியளவில், பலர் முன்னிலையில் நடந்த இந்த சம்பவம் ஜான்சன்பேட்டை பகுதியில் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியது. தகவல் அறிந்த அஸ்தம்பட்டி காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்தனர். அவர்கள் சடலத்தை மீட்டு, கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

கூட்டாளியை கொடூரமாக வெட்டிக்கொலை செய்துவிட்டு, அதே பகுதியில் சுற்றித்திரிந்த சின்னத்தம்பியை காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. அசம்பாவிதங்களைத் தவிர்க்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜான்சன்பேட்டை பகுதியில் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்