
தமிழ்நாட்டில் திருச்சி, புதுக்கோட்டை, கோவை, தஞ்சாவூர், தேனி உள்பட பல மாவட்டங்களில் கொலை, கொலை மிரட்டல், கொள்ளை, வழிப்பறி என சுமார் 57 வழக்குகளில் சம்மந்தப்பட்டிருந்த திருச்சி வண்ணாரப்பேட்டை துரை (எ) துரைசாமி கூலிப்படையாக செயல்படும் ரவுடிகளுக்கு அடைக்கலம் கொடுத்து காப்பாற்றி வந்துள்ளார். சமீபத்தில் தீபக் ராஜா கொலை வழக்கில் போலீசார் தேடி வந்த நவீனுக்கு அடைக்கலம் கொடுத்து தங்க வைத்துள்ளார். சிறையில் இருக்கும் கைதிகள் முதல் அரசியல்வாதிகள், போலீசார் என பலருக்கு தங்க நகைகளை அள்ளிக் கொடுத்திருக்கிறார்.
இந்நிலையில் கடந்த 11 ந் தேதி கோவையில் ஒரு வழக்கிற்காக கையெழுத்துப் போட தனது அக்கா மகன் வெள்ளைச்சாமியுடன் சென்றவர் மாலை புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் - வம்பன் இடையில் உள்ள தைலமரக்காட்டில் ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தையாவால் எண்கவுன்டர் செய்யப்பட்டார்.
காட்டில் மர்ம நபர்கள் நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலையடுத்து ஆய்வுக்குச் சென்றபோது மறைந்திருந்த ரவுடி துரை நாட்டுத் துப்பாக்கியால் ஒரு முறை சுட்டுவிட்டு ஒதுங்கியதும் எஸ்.ஐ மகாலிங்கத்தை அரிவாளால் வெட்டியவர். அரிவாளால் வெட்ட முயன்ற போது தற்காப்பிற்காக சுட்டதில் உயிரிழந்ததாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருந்தது.
சம்பவம் நடந்தவுடன் அந்தப் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்திருந்தனர்.தொடர்ந்து தடய அறிவியல் சோதனைகள் நடந்தது. மேலும் ரவுடி துரை பயன்படுத்திய நாட்டுத்துப்பாக்கி மற்றும் அரிவாளை கைப்பற்றிய போலீசார் கடந்த 22 ஆலங்குடி நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். ஆனால் மனித உரிமை ஆணையம் சம்பவ இடத்தை ஆய்வு செய்ய வருவார்கள் என்பதால் சம்பவம் நடந்த பகுதிக்கு அந்நியர்கள் செல்லாமல் ஒரு சப் இன்ஸ்பெக்டர் தலைமையில் 10 போலீசார் இரவு பகலாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் 25 ந் தேதி இரவு சம்பவ இடத்தில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றப்பட்டு போலீஸ் பாதுகாப்புகளும் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு குறைந்துள்ளது.