Skip to main content

பிரபல ரவுடி 8- வது முறையாக குண்டாசில் கைது!

Published on 29/01/2022 | Edited on 29/01/2022

 

Rowdy of AIADMK arrested for 8th time in goondas

 

சேலத்தில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த ரவுடி வளர்த்தி குமார் உள்ளிட்ட இருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். 

 

சேலம் தாதகாப்பட்டி தர்மலிங்கம் தெருவைச் சேர்ந்தவர் பால்ராஜ். ஜன. 13- ஆம் தேதி, அன்னதானப்பட்டி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ரவுடி குமார் என்கிற வளர்த்தி குமார், அவரை வழிமறித்து கத்தி முனையில் மிரட்டி, அவர் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலி பறித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தார். 

 

இதுகுறித்த புகாரின்பேரில் வளர்த்தி குமாரை அன்னதானப்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் கைது செய்தனர். இவர் மீது 2019- ஆம் ஆண்டு அன்னதானப்பட்டி, கிச்சிப்பாளையம் ஆகிய காவல்நிலையங்களில் வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது. 

 

ரவுடி வளர்த்தி குமார், கொலை, ஆள் கடத்தல், ரேஷன் அரிசி கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஏற்கனவே பலமுறை கைது செய்யப்பட்டு, சிறை தண்டனை பெற்றுள்ளார். கடந்த 20 ஆண்டுகளில் 40- க்கும் மேற்பட்ட வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டு உள்ளன. 

 

தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததோடு, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் செயல்பட்டு வந்ததால் குமார் என்கிற வளர்த்தி குமாரை, குண்டர் சட்டத்தில் கைது செய்ய சேலம் மாநகர ஆணையர் நஜ்மல் ஹோடா உத்தரவிட்டார். 

 

இதையடுத்து காவல்துறையினர் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள வளர்த்தி குமாரிடம் ஜன. 27- ஆம் தேதி, குண்டர் சட்ட கைது ஆணை வழங்கப்பட்டது. 

 

வளர்த்தி குமார் ஆரம்பத்தில் தி.மு.க.வில் இணைந்து செயல்பட்டு வந்தார். கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது அக்கட்சியில் இணைந்தார். ஆனாலும் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தார். ஏற்கனவே இவர் 7 முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு இருந்த நிலையில், தற்போது 8- வது முறையாக இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு ரவுடிக்கும் குண்டாஸ்: 

கடந்த 2020- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், சேலம் கிச்சிப்பாளையத்தில் ரவுடி செல்லத்துரை அரிவாளால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த இளையா என்கிற இளையராஜா என்ற ரவுடியை காவல்துறையினர் கைது செய்தனர். 

 

இந்த வழக்கில் அவர், ஜாமினில் சிறையில் இருந்து வெளியே வந்தார். செல்லத்துரை கொலை வழக்கில் ரியாஸ் மாலிக்ஜான் என்பவர் முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட்டு உள்ளார். அவரை சாட்சி சொல்ல நீதிமன்றத்திற்கு வரக்கூடாது என கடந்த ஆண்டு டிசம்பர் 12- ஆம் தேதி அவரை மிரட்டியுள்ளார். 

 

இதுகுறித்து ரியாஸ் மாலிக்ஜான் அளித்த புகாரின்பேரில் ரவுடி இளையா என்கிற இளையராஜாவை கிச்சிப்பாளையம் காவல்நிலைய காவல்துறையினர் கைது செய்தனர். 

 

தொடர் குற்றத்தில் ஈடுபட்ட இளையராஜாவையும் ஆணையர் உத்தரவின்பேரில், காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரிடம் கைது ஆணை சார்வு செய்யப்பட்டது. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'இனியாவது ரிப்பன் வெட்டுங்கள் ஏனென்றால் ஆட்சி சீக்கிரம் போகப் போகிறது'-எடப்பாடி பழனிசாமி பேச்சு

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று  வருகிறது. இந்நிலையில் சேலத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ''பிரம்மாண்டமான கட்டிடத்தை கட்டி கொடுத்திருக்கிறோம். கட்டி 3 வருடம் ஆகிறது. 1200 கோடியில் கட்டிக் கொடுத்திருக்கிறோம். ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா என பல கட்டிடங்களை கட்டி வைத்திருக்கிறோம். ஆனால் ஒற்றைச் செங்கலை தூக்கிக்கொண்டு ஊர் ஊராக போகிறீர்களே உதயநிதி ஸ்டாலின் பல லட்சம் செங்கலில் கட்டி இருக்கிறோம் ஏன் அதை திறக்க மாட்டேன் என்கிறீர்கள்.

அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட கட்டிடம் என்று இன்றுவரை ரிப்பன் வெட்டுவதற்கு உங்களால் முடியவில்லை. மூன்று வருடம் ஆகிறது. இனியாவது ரிப்பன் வெட்டுங்கள் ஏனென்றால் ஆட்சி சீக்கிரம் போகப் போகிறது. என்ன கொடுமை பாருங்கள் நிறைவேற திட்டத்தை செங்கல்லை தூக்கிக்கொண்டு விளம்பரம் செய்கிறார்கள். ஆனால் கட்டிமுடித்த திட்டத்தை திறக்க முடியாத ஒரே அரசு திமுக அரசு. இந்த திட்டம் கொண்டுவரக் கூடாது என்று பார்க்கிறார்கள்.

இது ஆசியாவிலேயே மிகப்பெரிய திட்டம். கால்நடை பூங்கா திட்டம் முழுக்க முழுக்க விவசாயிகளுக்காக கொண்டுவரப்பட்ட திட்டம். அமெரிக்கா செல்லும் பொழுது அங்கு ஒரு பால் பண்ணைக்கு சென்றேன். அங்கு ஒரு பசு ஒரு நாளைக்கு 65 லிட்டர் பால் கறக்கிறது. அந்த பசு போல நம்முடைய மாநில சீதோசன நிலைக்குத் தக்கவாறு கலப்பின பசுக்களை உருவாக்கி விவசாயிகள் கொடுக்க வேண்டும். 40 லிட்டர் பாலை ஒரு நாளைக்கு கறந்து அவர்கள் வருமான பெருக வேண்டும் என்பதற்காக இந்த அற்புதமான திட்டத்தை கொண்டு வந்தேன். அதில் கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் உள்ளது . அதன் மூலமாக கண்டுபிடிக்கப்பட்டு கிடைக்கும் கால்நடைகளை விவசாயிகளுக்கு கொடுத்து இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் இந்த திட்டத்தின் குறிக்கோள். இன்று நாம் ஒரு ஆடு வளர்த்தால் 20 கிலோ தான் கிடைக்கும். ஆனால் கலப்பின ஆடு வளர்த்தால் 40 கிலோ கிடைக்கும். இந்த திட்டத்தை முடக்கி வைத்த அரசாங்கம் திமுக அரசாங்கம். கால்நடை பூங்கா வந்திருந்தால் இந்தப் பகுதி பெரிய வளர்ச்சி அடைந்திருக்கும். உலக அளவில் நம்முடைய சேலம் கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி பிரசித்தி பெற்றிருக்கும்'' என்றார்.

Next Story

குடிநீரில் கலந்த கழிவுநீர்; 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்ப்பு

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
sewage mixed with drinking water; More than 50 people were hospitalized

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே குடிநீர் குழாய் உடைந்து கழிவுநீர் கலந்த நிலையில் கழிவுநீர் கலந்த நீரை குடித்த 50க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் என உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த முத்தம்பட்டி, ஏத்தாப்பூர், பெத்தநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலந்துள்ளதாக தெரிகிறது. இதில் 50க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குடிநீர் குழாயில் ஏற்பட்ட திடீர் உடைப்பு காரணமாக அதில் கழிவுநீர் கலந்ததும் அந்த நீரை பயன்படுத்தியதால் பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.