திருச்சி மாநகரம், கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரவுடிகள் சங்கர் 36 மற்றும் முகில்குமார் 26. இவர்கள் இருவரும் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டுள்ளதால், அவர்கள் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவதை தடுப்பதற்காக கோட்டை காவல்நிலைய ஆய்வாளரின் அறிக்கையின்படி நிர்வாக செயல்துறை நடுவர் நீதிமன்றம் முன்பு கடந்த 03.11.21 தேதியன்று ஆஜர் செய்ததின் பேரில், ஒரு வருட காலத்திற்கு பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கமாட்டேன், குற்றச்செயல்களில் ஈடுபடமாட்டேன் என்ற நன்னடத்தை உறுதிமொழி பிரமாண பத்திரத்தை சங்கர் மற்றும் முகில்குமார் தாக்கல் செய்துள்ளார்கள்.
இந்நிலையில், அவர்கள் மீண்டும் கத்தியைக் காட்டி வழிப்பறியில் ஈடுபடுதல் மற்றும் பொது சொத்திற்கு பங்கம் விளைவித்தல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டிருக்கின்றனர். இதனால், அவர்கள் மீது கடந்த 1ஆம் தேதி கோட்டை காவல்நிலையத்தில் புகார்கள் பதிவாகின. அதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் 8ஆம் தேதி கைது செய்யப்பட்டு, மீண்டும் நிர்வாக செயல்துறை நடுவர் நீதிமன்றம் முன்பு ஆஜர் படுத்தப்பட்டனர்.
அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சங்கர் மற்றும் முகில்குமார் ஆகியோர் தாக்கல் செய்த நன்னடத்தை பிரமாண பத்திரத்தில், குற்றசெயல்கள் புரியாமல் நன்னடத்தையில் இருந்த காலத்தை தவிர மீதியுள்ள 268 நாட்கள் சிறையில் கழிக்க உத்தரவு பிறப்பித்தது. அதனைத் தொடர்ந்து சங்கர் மற்றும் முகில்குமார் ஆகியோர் உடனடியாக திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள்.