Skip to main content

மாமூல் கேட்டு ரவுடிகள் மிரட்டல்; ஆட்டோ ஓட்டுநர்கள் 6 பேர் கூட்டாக தீக்குளிக்க முயற்சி! 

Published on 30/04/2022 | Edited on 30/04/2022

 

rowdies money auto drivers police salem district

 

சேலத்தில், மாமூல் கேட்டு மிரட்டும் ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ஆட்டோ ஓட்டுநர்கள் 6 பேர், ஒரே நேரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் ஆட்டோ ஓட்டுநர் சங்கம் சார்பில் ஆட்டோ ஓட்டி வரும் அசோக், நாராயணன், பிரபு, வேல்முருகன், இளங்கோவன், மணிகண்டன் ஆகிய ஆறு பேர், வெள்ளிக்கிழமை (ஏப். 29) காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வந்தனர். 

 

அவர்கள் திடீரென்று தங்கள் தலையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தனர். இதை சற்றும் எதிர்பாராத, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த  காவல்துறையினர் அவர்களை பிடித்து, அவர்களிடம் இருந்த மண்ணெண்ணெய் பாட்டில்களை பிடுங்கி வீசி எறிந்தனர். உடலில் தண்ணீர் ஊற்றி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

 

அவர்களை ஆசுவாசப்படுத்திய காவல்துறையினர், விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கூறியது, ''சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே நாங்கள் 25 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வருகிறோம். அப்பகுதியைச் சேர்ந்த சுந்தரம், அர்த்தநாரி, விஜய் உள்ளிட்ட நான்கு ரவுடிகள் இந்த பகுதியில் ஆட்டோ ஓட்ட வேண்டும் என்றால் மாதந்தோறும் ஆட்டோ ஒன்றுக்கு 10 ஆயிரம் ரூபாய் மாமூல் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் ஆட்டோ ஓட்ட அனுமதிக்க முடியாது என மிரட்டி வருகின்றனர். 

 

ஆட்டோவில் ஏறும் பயணிகளையும் மிரட்டி, கட்டாயப்படுத்தி இறக்கி விடுகின்றனர். இதனால் எங்களால் ஆட்டோ ஓட்ட முடியாமல் வாழ்வாதாரம் பாதிக்கிறது. இதுபற்றி பள்ளப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த மன வேதனையில் இருப்பதை விட சாவதே மேல் என நினைத்து தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றோம்,'' என்றனர். 

 

மேலும் அவர்கள், பணம் கேட்டு மிரட்டுவதோடு கொலை மிரட்டலும் விடுத்துள்ள மூன்று ரவுடிகள் மீது காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினர். 

 

இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆட்டோ ஓட்டுநர்கள் 6 பேர் ஒரே நேரத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

சாமானியர்கள் அளிக்கும் புகார்கள் மீது காவல்துறையினர் உடனடியாக விசாரணை மேற்கொள்ளாததால் தான், ஆட்சியர் அலுவலகம் முன்பு இதுபோன்ற தற்கொலை முயற்சி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. பெரும் அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு, மெத்தனமாக செயல்படும் காவல்துறையினர் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.