திருச்சி மாநகரில் கடந்த சில நாட்களில் நடைபெற்ற முன்விரோத கொலை சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் இருந்துள்ளனர். இதனை ஈடுசெய்யும் விதமாக திருச்சியில் உள்ள முக்கிய ரவுடிகள், கொலையாளிகள் என கடந்த நான்கு நாட்களில் சுமார் 116 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், திருச்சி மாநகரத்தில் காந்தி மார்க்கெட், பொன்மலைப்பட்டி ஆகிய இடங்களில் கடந்த வாரங்களில் அடுத்தடுத்து இரண்டு கொலை சம்பவங்கள் நடைபெற்றன. இந்தச் சம்பவங்களின் எதிரொலியாக, மாநகரில் வழிப்பறி, கட்டப்பஞ்சாயத்து, கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகளில் கைதாகி தற்போது ஜாமீனில் சுற்றித்திரியும் ரவுடிகள் சிறப்புப் பதிவேடு குற்றவாளிகளைக் கைது செய்ய மாநகரக் காவல்துறை ஆணையர் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
இதனைத் தொடர்ந்து, மாநகரம் முழுவதும் கடந்த சில நாட்களாக அதிரடி வேட்டை நடந்துவருகிறது. முதல் நாளில் இரு ரவுடிகளும், இரண்டாவது நாளில் 42 ரவுடிகளும் கைது செய்யப்பட்டனர். மேலும், சரித்திர பதிவேட்டில் உள்ள குற்றவாளிகள் 31 பேரும், பல்வேறு திருட்டு சம்பவங்களில் தலைமறைவாக இருந்த 38 பேரும் கைது செய்யப்பட்டனர். இதுவரை சுமார் 116 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான ரவுடிகள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொண்ட பிறகு திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்கு எடுக்கப்பட்ட கரோனா பரிசோதனையில் யாருக்கும் கரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பிறகு திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட உள்ளனர்.
இந்நிலையில், தப்பிச்சென்ற ரவுடிகள் மற்றும் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைக் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துவருகின்றனர். அந்தவகையில், நேற்று (21.09.2021) ஒரே நாளில் வழிப்பறி மற்றும் திருடர்கள் என 17 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், திருச்சி உடையான்பட்டி பகுதியைச் சேர்ந்த சரத், ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன், திருச்சி கருமண்டபம் பகுதியைச் சேர்ந்த அண்ணன் தம்பியான பிரபாகரன் மற்றும் கங்காதரன், தீரன் நகர் பகுதியைச் சேர்ந்த பாரதி, கே.கே. நகர் பகுதியைச் சேர்ந்த ராகேஷ் உள்ளிட்ட 17 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.