ADVERTISEMENT

கொலை,கொள்ளை,வெடிகுண்டு வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகள் கைது

12:23 PM Aug 13, 2019 | kalaimohan

சிதம்பரம் அண்ணாமலைநகர் பகுதியில் வழிப்பறி, கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டதாக 4 ரவுடிகளை காவல்துறையினர் கைதுசெய்தனர்.

சிதம்பரம் அண்ணாமலைநகர் பகுதியில் பிரபல ரவுடிகளான கோவிந்தசாமி நகரைச் சேர்ந்த முத்துசாமி மகன் சுரேந்தர் (35), அவரது கூட்டாளி மேலகுண்டலபாடியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் முக்கூட்டு முருகன் (43) ஆகியோர் ஒரு பகுதியாகவும், மேலும், சிலர் மற்றொரு பகுதியாகவும் கட்டப் பஞ்சாயத்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ம.ஸ்ரீ அபிநவ்-க்கு தகவல் கிடைத்தது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இதையடுத்து, அவரது உத்தரவின்பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாண்டியன் மேற்பார்வையில், சிதம்பரம் டிஎஸ்பி கார்த்திகேயன், சிதம்பரம் நகர காவல் நிலைய ஆய்வாளர் சி.முருகேசன், புதுச்சத்திரம் காவல் ஆய்வாளர் சி.அமுதா, அண்ணாமலைநகர் காவல் ஆய்வாளர் சி.பரணிதரன், உதவி ஆய்வாளர் சுரேஷ் முருகேசன் மற்றும் போலீஸார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு ரௌடி கும்பலை தேடிவந்தனர்.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி பேருந்து நிறுத்தம் அருகே நந்திமங்கலத்தைச் சேர்ந்த வினோத்குமார் (28) என்பவரை கத்தியால் தாக்கி ஒரு பவுன் நகையை பறித்துச் சென்ற வழக்கு தொடர்பாக சுரேந்தர், அவரது கூட்டாளி பெராம்பட்டு ரங்கநாதன் மகன் சுபாஷ் (44) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதேபோல, அண்ணாமலைநகர் ராஜேந்திரன் சிலை அருகே ஞாயிற்றுக்கிழமை மண்ரோடு பகுதியைச் சேர்ந்த பார்தீபன் (22) என்பவரிடம் ரூ.6 ஆயிரம் பணம் பறித்த வழக்கில் முக்கூட்டு முருகன், ஆனந்தன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து அண்ணாமலைநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சுரேந்தர் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து காவல்துறையினர் தெரிவித்ததாவது, கைதான 4 பேரும் கட்டப் பஞ்சாயத்து உள்ளிட்ட சட்ட விரோதச் செயல்களில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளதால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இவர்கள் மீது கொலை, கொள்ளை, வெடிகுண்டு வழக்குகள் உள்ளது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT