தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சியினர் பரபரப்பாகப் பிரச்சார வேலைகளைச் செய்து வருகிறார்கள். திமுக தரப்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மாநில அமைச்சர்கள் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதிமுக தரப்பில் எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் என முக்கிய தலைவர்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
போட்டியிடும் வேட்பாளர்கள் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் தீவிர பிரச்சார வழிமுறைகளை கையாளத் தொடங்கி இருக்கிறார்கள். தேர்தல் ஆணையம் பணப்பட்டுவாடா உள்ளிட்ட புகார் எழுந்த இடங்களில் தீவிர சோதனை நடத்தி வருகிறது. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 5 மணியோடு நிறைவடைய இருக்கிறது. இதனால் இறுதி கட்ட பிரச்சாரத்தில் வேட்பாளர்கள் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் கோவையில் ருமேனிய நாட்டை சேர்ந்த இளைஞர் ஸ்டெபுன் திமுகவுக்கு வாக்கு கேட்டு பேருந்து, பைக்கில் பிரச்சாரம் செய்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம் என்னை மிகவும் கவர்ந்துள்ளது. உலகில் இதை எங்கும் காண முடியாது. ஆகையால் நான் தனிப்பட்ட முறையில் திமுகவுக்கு ஆதரவு திரட்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.