Skip to main content

ரயில்வே டிக்கெட் கவுன்டர் கொள்ளை: வெளிச்சத்திற்கு வந்த ஊழியரின் நாடகம்

Published on 04/01/2022 | Edited on 04/01/2022

 

railway

 

 

சென்னை திருவான்மியூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுன்டரில் ரூ.1.32 லட்சம் கொள்ளையடித்துவிட்டு நாடகமாடிய ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசார் விசாரணையில் தனது மனைவியுடன் சேர்ந்து டிக்கெட் கவுன்டரில் திருடிவிட்டு ஊழியர் கொள்ளை நாடகமாடியது அம்பலமாகியுள்ளது.

 

திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுன்டரில் பணிபுரிந்து வரும் டீக்காராம் என்பவரை கட்டிப் போட்டுவிட்டு ரூ.1.32 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக ரயில்வே ஊழியர்களிடம் முதற்கட்ட விசாரணை நடைபெற்றது. விசாரணையில், துப்பாக்கி முனையில் சில நபர்கள் தன்னை கட்டிப் போட்டுவிட்டு கவுன்டரில் வைக்கப்பட்டிருந்த ரூ.1.32 லட்சம் ரூபாயைக் கொள்ளையடித்துச் சென்றதாக டீக்காராம் தெரிவித்திருந்தார். அந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

 

railway

 

குறிப்பிட்ட ரயில் நிலையத்தில் எந்த ஒரு சிசிடிவி கேமராக்களும் இல்லாத நிலையில், ரயில் நிலையத்தின் அருகில் இருக்கக்கூடிய சிசிடிவி கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்யக்கூடிய பணியில் ரயில்வே காவல்துறையினர் ஈடுபட்டனர். அப்போது குறிப்பிட்ட நேரத்தில் கொள்ளையடிக்கப்பட்ட இடத்திற்கு சந்தேகத்திற்கு விதமான நிலையில் பெண் ஒருவர் ரயில் நிலையத்திற்கு வந்து சென்றது பதிவாகியுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் ரயில்வே ஊழியர் டீக்காராமின் மனைவி என்பது தெரியவந்தது.

 

அவரது வீட்டிற்குச் சென்று அவரது மனைவி சரஸ்வதியைப் பிடித்து விசாரித்த பொழுது, டிக்கெட் கவுன்டரிலிருந்த பணத்தைக் கொள்ளையடித்துவிட்டு திருடர்கள் பணத்தைத் திருடிச் சென்றதாக நாடகமாடியது அம்பலமானது. திட்டம்போட்டு திருடிவிட்டு நாடகமாடிய தம்பதிகளிடம் இருந்து ஒரு லட்சத்து 52 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இருவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

விசாரணையில், சம்பவத்தன்று பணத்தை டீக்காராமே கொள்ளையடித்துவிட்டு தனது மனைவி சரஸ்வதியை வரவழைத்து கையையும், வாயையும் கட்டிபோட்டுவிட்டு கவுன்டர் அறையை வெளிப்பக்கமாக மூடியது தெரியவந்தது. மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் பெறும் டீக்காராம் ஆன்லைன் சூதாட்டத்தில் தொடர்ந்து பணத்தை இழந்துவந்த நிலையில், தொடர்ந்து கடன் வாங்கி ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் வசூலான டிக்கெட் பணத்தை மனைவியுடன் சேர்ந்து கொள்ளையடிக்கத் திட்டமிட்டு இறுதியில் வசமாகச் சிக்கிய சம்பவம் ரயில்வே வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.