Skip to main content

     காவலர் தேர்வில் கள்ளத்தனம்!   பெண் தலைமுடிக்குள் காகித அட்டை! -தேர்வுமுறையில் மாற்றம் தேவை!

Published on 08/09/2018 | Edited on 08/09/2018
po

 

தமிழக காவல் துறையில் இரண்டாம் நிலை காவலர் பணிக்கு 6140 பேரை தேர்வு செய்வதற்கு,  கடந்த மார்ச் 11-ஆம் தேதி நடைபெற்ற எழுத்துத் தேர்வில் 2.88 லட்சம் பேர் கலந்து கொண்டனர். இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சென்னை, திருச்சி, மதுரை, சேலம், கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தற்போது உடல் திறன் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.

 

உடல் திறன் தேர்வைப் பொறுத்தமட்டிலும்,   1500 மீட்டர் ஓட்டத்தை  7 நிமிடத்திற்குள் ஆண்கள் கட்டாயம் முடிக்க வேண்டும். ஆண்,  உயரம் குறைந்தபட்சம் 170 செ.மீ. என்றும் பெண்,  உயரம் 159 செ.மீ. என்றும் பட்டியல் இனத்தை சேர்ந்த ஆண்,  குறைந்த பட்சம் 167 செ.மீ. என்றும் பெண் 157 செ.மீ.  என்றும் இருக்க வேண்டும்.

 

சென்னையில் இன்று நடைபெற்ற உடல் திறன் தேர்வில் பங்கேற்ற ஒரு பெண், தனது உயரத்தை அதிகரித்துக் காட்டுவதற்காக தலைமுடியை ஒரு பக்கமாக வகிடு எடுத்து, நடுவே காகித அட்டையை மறைத்து வந்துள்ளார். உயரத்தை அளவிடும்போது, தலைமுடி வித்தியாசமாக இருப்பதை உணர்ந்த தேர்வுக் குழுவினர், அவரை அங்கேயே நிறுத்தி,  தகுதி இழப்பு செய்து அனுப்பிவிட்டனர். 

 

po p[

 

இதுகுறித்து நாம் விசாரித்தபோது, “இன்றைய தேர்வில் பங்கேற்ற பலரும் போலீஸ் வேலைக்கு ஏற்ற உடல்வாகு இல்லாதவர்கள். அதாவது,  காவலர் தேர்வு என்றதும் விண்ணப்பித்து,  தேர்வு எழுதி அதில் தேர்வாகி வருகின்றனர்.  ஆனால், மார்பு சாதாரண நிலையில் குறைந்தபட்சம் 81 செ.மீ.,  விரியும் நிலையில் 85 செ.மீ. இருக்க வேண்டும் என்பது விதி. அதுபோல்,  உயரமும் நிர்ணயிக்கப்பட்ட அளவு இருக்க வேண்டும். இதுதெரியாமல் பலர், இன்றைய தேர்வுக்கு வந்திருக்கின்றனர்.  ஒரு சிலர் மைதானம் பக்கமே போகாதவர்கள்.  அவர்களால், சென்னையில் அடிக்கிற வெயிலில் ஓட முடியவில்லை.  மிகவும் சிரமப்பட்டனர்.” என்றார் தேர்வுக் குழுவில் இடம்பெற்ற ஒரு அதிகாரி. 

 

மேலும் அவர்,   “10 ஆண்டுகளுக்கு முன்பு, முதலில் உடல் திறன் தேர்வு நடைபெற்றது.  அதில் தேர்வானவர்கள்தான்,  எழுத்துத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.  உடல்திறன் தேர்வின்போதே,  வாட்ட சாட்டமாக,  நல்ல உடன் திறன் கொண்டவர்களை பொறுக்கி எடுத்து தேர்வு எழுத வைப்போம். இப்போதுள்ள நடைமுறையே வேறு.  முதலில் எழுத்துத் தேர்வு நடக்கிறது.  

இதில் தேர்வானவர்கள்தான்,  ஓடச் சொல்லும் போது ஓடமுடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். தற்போது,  1:5 என்ற விகிதத்தில் உடல்திறன் தேர்வுக்கு அழைத்திருக்கிறோம். வந்தவர்களில் சிலரை இப்போதே ‘அன்ஃபிட்’ என்று கூறி அனுப்பிவிட்டோம். இனிவரும் காலத்திலாவது,  முதலில் உடல்திறன் தேர்வு  நடத்தி, அதில் தகுதியானவர்களைத் தேர்வு செய்து, அவர்களுடைய புத்திக் கூர்மையை பரிசோதிக்கும் விதத்தில்,  எழுத்து தேர்வு நடத்த வேண்டும். அப்போது தான், கம்பீரமான, கட்டுமஸ்தான போலீஸ் படையை உருவாக்க முடியும்.” என்றார். 

 

தகுதி உள்ளவர்களே தமிழகத்தில் காவலர்கள் ஆகவேண்டும்!


 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.