Skip to main content

தொடரும் சம்பவங்கள்; மருத்துவரின் வீட்டில் கொள்ளை

Published on 19/12/2023 | Edited on 19/12/2023
Robbery at doctor house near Thiruvannamalai

திருவண்ணாமலை நகரத்தை அடுத்த அவலூர்பேட்டை சாலையில் உள்ள சேரியங்கள் பகுதியில் வசிப்பவர் பாபு. அருணை மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் பணியாற்றி வருகிறார். கடந்த வாரம் சனிக்கிழமை தனது குடும்பத்துடன் சொந்த ஊரான திருவண்ணாமலை அடுத்த விழுப்புரம் மாவட்டம் மலையனூர் அடுத்த தாயனூர் கிராமத்திற்கு சென்றிருந்தார்.

சொந்த ஊரில் இருந்து திங்கட்கிழமை காலை தனது வீட்டுக்கு வந்த நிலையில் வீட்டின் வாயிற்படி கதவு திறந்திருந்த நிலையில் அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் அறை கதவுகள் உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டின் பூட்டப்பட்டிருந்த அலமாரியில் வைத்திருந்த 40 சவரன் தங்க நகை, எல்இடி டிவி, லட்ச ரூபாய் அளவில் பணம் போன்றவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளது பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

உடனே இதுகுறித்து மருத்துவர் பாபு, காவல்துறையினருக்கு தகவல் அளித்ததின் பெயரில் கிழக்கு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். காவல்துறையினரின் கைரேகை நிபுணர்கள் அங்கிருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். புகார் எழுதி வாங்கி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள், திருவண்ணாமலை நகரத்தை சுற்றியுள்ள நகரின் விரிவுபடுத்தப்பட்ட குடியிருப்பு பகுதிகளில் அடிக்கடி இப்படி திருட்டு சம்பவங்கள் நடைபெறுகின்றன. அதுமட்டுமல்லாமல் இரவு நேரத்தில் திருவண்ணாமலை சுற்றியுள்ள பைப்பாஸ் சாலைகளில் இறங்கி வீட்டுக்கு செல்லும் பொதுமக்களிடமும் வழிப்பறி, பாலியல் சீண்டல்  உள்ளிட்ட குற்றங்கள் நடைபெறுகின்றன. இதுபோன்ற புகார்களை கொடுக்க சென்றாலும், காவல்துறையை அணுக முடியாத நிலையே உள்ளது.  

காவலர்கள் இரவு நேரங்களில் தங்களுக்கான ஏரியாக்களில் பாதுகாப்புக்கு இரவு ரோந்து வரவேண்டும். ஆனால் தினமும் இன்று இரவு பணி, ரோந்து டூட்டி கண்காணிப்பு அதிகாரி என பட்டியலை சோசியல் மீடியாவில் மாவட்ட காவல்துறையின் சோசியல் மீடியா விங் வெளியிடுகிறதே தவிர அப்படி இரவு ரோந்து செல்கிறார்களா என கண்காணிப்பதில்லை. பெரும்பாலான போலீஸார் இரவு ரோந்து, விடியற்காலை நேர ரோந்து செல்வதில்லை. கொள்ளையர்கள் சிசிடிவி கேமரா இல்லாத பகுதி எது?, போலீஸார் கண்டுக்கொள்ளாத பகுதி எது என்பதை அறிந்து கொண்டு சுலபமாக வீட்டை உடைத்து கொள்ளையடித்துச் செல்கிறார்கள் என்கின்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.