Skip to main content

டி.ஐ.ஜி. வீட்டில் கொள்ளை! இளைஞர் கைது! 

Published on 13/08/2022 | Edited on 13/08/2022

 

 Robbery at D.I.G. home! Youth arrested!

 

 

சி.பி.ஐ.யில் டி.ஐ.ஜியாக இருப்பவர் சோனல் சந்திரா. இவருக்குத் தாம்பரம் காவல் ஆணையரகம், கேளம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கோமான் நகர், ஐஜி தோட்டம் பகுதியில் வீடு மற்றும் தோட்டம் உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் (11.08.22) காலை சுமார் 10.30 மணி அளவில் சோனல் சந்திரா வீட்டைப் பராமரிக்கும் மதன் என்பவர் வீட்டிற்கு வந்து பராமரிப்பு வேலையைச் செய்து கொண்டிருந்தார். 

 

அப்போது ஏதோ சத்தம் கேட்டுள்ளது. அதனைத் தொடர்ந்த மதன் ஓடிப்போய் பார்த்திருக்கிறார். அப்பொழுது வீட்டின் மாடியிலிருந்து யாரோ ஒரு மர்ம நபர் குதித்து ஓடியுள்ளார். அதனைத் தொடர்ந்து மதன், ராஜசேகர் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார். அங்கு ஜன்னல் கதவு உடைக்கப்பட்டு, வீட்டினில் இருந்த பொருட்கள் திருடப்பட்டு கட்டி வைக்கப்பட்டிருந்தது.

 

அதனைக் கண்ட மதன், சோனல் சந்திராவின் கணவர் ராஜசேகருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், கேளம்பாக்கம் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளார். அதன்பின் ராஜசேகர் கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் கேளம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்துவந்தனர். 

 

மேலும், வீட்டில் திருட வந்த பொழுது விட்டுச்சென்ற மூன்று சக்கர வண்டியை போலீஸார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், கேளம்பாக்கம் பகுதியில், செங்கண்மால் அருகே தர்மா என்பவர் நடத்திவரும் பழைய பொருள் விற்பனை கடையில் வேலை செய்துவரும் அப்துல் ரசாக்(21) என்பவர்தான் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது என்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அப்துல் ரசாக் கைது செய்யப்பட்டார்.

 

கைது செய்யப்பட்ட அப்துல் ரசாக், கடந்த எட்டு வருடங்களாகப் பெங்களூரில் வாழ்ந்து வந்த பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்தவர். இவர், கடந்த 25 நாட்களுக்கு முன்புதான் செங்கண்மாலுக்கு வந்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது