Skip to main content

பேருந்தில் உலா வரும் கொள்ளையர்கள்... போலீசாரின் திடீர் சோதனை!

Published on 15/11/2019 | Edited on 15/11/2019

தொடர்ந்து துணிகர சம்பவமாக ஈரோட்டில் கொள்ளை நடந்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
 

ஈரோட்டையடுத்த மொடக்குறிச்சி செல்லும் வழியில் உள்ளது சின்னியம்பாளையம். இங்கு வசிக்கும் செல்வி என்பவருக்கு 2 மகன்கள் உள்ளனர். செல்வியின் வீடு சின்னியம்பாளையம் பேருந்து நிறுத்தத்தையொட்டியே உள்ளது. வீட்டில் முன்பு சொந்தமாக டீ கடை நடத்தி வருகிறார் செல்வி. இந்நிலையில் சென்ற செவ்வாய்க்கிழமை தனது குடும்பத்தினருடன் திண்டுக்கல்லில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றிருக்கிறார்கள். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மீண்டும் நேற்று காலை வீட்டிற்கு வந்தனர்.

 

 Robbery on the bus ...


அப்போது வீட்டின் பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறிக்கிடந்தன. பின்னர் பீரோ இருக்கும் அறையில் சென்று பார்த்தபோது பீரோ பூட்டு உடைக்கப்பட்டு அதில் இருந்த 19 பவுன் நகை மற்றும் ரூ 56 ஆயிரம் பணம் கொள்ளைபோய் இருந்தது தெரியவந்தது. அதேபோல் பீரேவில் இருந்த அரை கிலோ வெள்ளியும் மர்ம நபர்கள் அள்ளிச் சென்றுள்ளனர். வீட்டில் ஆள் இல்லாததை தெரிந்து கொண்ட கொள்ளை கும்பல் அதை நோட்டமிட்டு இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டுள்ளது. இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது. குறிப்பாக தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து செயின் பறிப்பு சம்பவங்கள்,  பூட்டி இருக்கும் வீட்டின் கதவை உடைத்து கொள்ளை அடித்தல் போன்ற குற்றச் செயல்கள் நடக்கிறது. இதனையடுத்து குற்றச் செயலில் ஈடுபடும் கொள்ளையர்களை பிடிக்க ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

இந்த தொடர் திருட்டில் ஈடுபடும் கொள்ளையர்கள் பொது மக்களோடு மக்களாக பேருந்தில் பயணம் செய்வது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.  இதனை தொடர்ந்து இன்று ஈரோடு  மாநகர பகுதிக்கு உட்பட்ட  போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் திடீரென தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான காளைமாடு சிலை, ஈரோடு பஸ் நிலையம், சக்தி ஈரோடு பவானி, ஈரோடு காவிரி ரோடு, ஆர்கேவி ரோடு, மணிக்கூண்டு போன்ற பகுதிகளில் கிரைம் போலீசார் அந்தப் பகுதியில் வரும் தனியார் பஸ், அரசு பஸ், மினிபஸ்களில் வரும் பயணிகளை சோதனை செய்தனர்.
 

போலீசார் சோதனையில் சந்தேகப்படும் நபர்கள் யாராவது இருந்தால் அந்த நபர்களை தீவிர விசாரணைக்கு உட்படுத்தினார்கள். அப்படிப்பட்ட நபர்களின் பெயர் முகவரி  செய்யும் வேலை, அந்த நபர்களை போட்டோ எடுத்து பிறகு விடுவித்தனர். இது சம்பந்தமாக மாவட்ட எஸ்.பி. சக்தி கணேசன் கூறும்போது,

தொடர் குற்றச் சம்பவங்களை தடுக்கவும், குற்றவாளிகளை பிடிக்கும் வகையிலும்  திடீர் வாகன சோதனை மேற்கொண்டோம். சமீபகாலமாக தொடர் திருட்டில் ஈடுபட்ட கொள்ளையர்கள் மோட்டார் சைக்கிளை பயன்படுத்தாமல் பொது மக்களோடு மக்களாக பஸ்ஸில் பயணம் செய்தது எங்களுக்கு தெரியவந்தது. இதனால் ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள அனைத்து போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட முக்கியமான பகுதிகளில் வரும் பஸ்கள்,  தனியார் பஸ் அரசு பஸ் மினிபஸ் என அனைத்தையும் தீவிரமாக சோதனை செய்தோம்.

இதில் உள்ளூர் வெளியூர் வெளிமாவட்ட பேரூந்துகளும்  சோதனை செய்யப்பட்டது. சென்ற முறை இவ்வாறு சோதனை செய்தபோது பஸ் பயணிகளிடம் கைவரிசை காட்டிய நாலு பெண்களை கைது செய்தோம். தொடர்ந்து இதேபோன்று திடீர் சோதனை  அடிக்கடி  நடக்கும் என கூறினார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.