Skip to main content

வீடு புகுந்து பீரோக்களை தூக்கிச் செல்லும் 'பலே' திருடர்கள்!

Published on 25/02/2021 | Edited on 25/02/2021

 

The robbers who get into the house and lift the burea outside

 

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ளது குச்சிப்பாளையம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன் மகன் சக்திவேல். இவர் அப்பகுதியில் செங்கல்சூளை வைத்து நடத்திவருகிறார். நேற்று முன்தினம் இரவு செங்கல்சூளை பாதுகாப்புப் பணிக்கு சக்திவேலும் அவரது மனைவியும் சென்றுவிட்டனர். அவரது வீட்டுக்குள் அவர்களது மகன் சசிகுமார் (25), மருமகள் மற்றும் மூன்று வயது குழந்தை ஆகிய மூவரும் தனி அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

 

செங்கல் சூளைக்குச் சென்ற தனது தாய் தந்தையர் மீண்டும் வீட்டுக்கு வந்துவிடுவார்கள் என்ற எண்ணத்தில் சசிகுமார் முன்பக்கக் கதவைப் பூட்டாமல் சாத்திவிட்டு வீட்டுக்குள் சென்று தூங்கியுள்ளார். அதிகாலை, 4 மணி அளவில் சசிகுமார் மட்டும் இயற்கை உபாதை கழிப்பதற்காக எழுந்து கதவைத் திறந்து வெளியே வந்துள்ளார். அப்போது வெறுமனே சாத்தியிருந்த கதவு வெளிப்புறமாகப் பூட்டப்பட்டிருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் தனது செல்ஃபோன் மூலம் பக்கத்துத் தெருவில் இருந்த தனது நண்பர் ஒருவருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.

 

இதையடுத்து அவரது நண்பர் வந்து கதவைத் திறந்துவிட்டுள்ளார். இதன்பிறகு வீட்டுக்குள் சென்று பார்த்தபோது வீட்டுக்குள் இருந்த இரும்பு பீரோ மாயமாகி இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். தேடிப் பார்த்தும் காணவில்லை. பீரோவைக் கண்டுபிடிக்க முடியாமல் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். அதன்பிறகு கிராமமக்கள் ஆற்றுப் பகுதிக்குச் செல்லும் வழியில் உள்ள ஒரு  வயல்வெளியில் சசிக்குமாரின் வீட்டு பீரோ உடைக்கப்பட்ட நிலையில் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக சசிகுமார் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

 

The robbers who get into the house and lift the burea outside

 

அவர்கள் வந்து உடைக்கப்பட்டுக் கிடந்த பீரோவை ஆய்வு செய்துள்ளனர். அதன் உள்ளே வைக்கப்பட்டிருந்த 32 பவுன் நகை, 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்ததும் அதிர்ச்சி அடைந்தனர். இதன் மூலம் கதவு திறந்திருந்ததால் வீட்டுக்குள் சுலபமாக புகுந்த கொள்ளையர்கள் வீட்டுக்குள்ளேயே வைத்து பீரோவை உடைத்தால் சத்தம் வரும் அதனால் அக்கம்பக்கத்தினர் குடும்பத்தினர் எச்சரிக்கை அடைந்து விடுவார்கள் என்பதற்காக பீரோவை மட்டும் வீட்டை விட்டு வெளியே தூக்கிச் சென்று நகை பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

 

கொள்ளை போன நகை பணம் ஆகியவற்றின் மதிப்பு சுமார் 11 லட்சம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த விழுப்புரம் டிஎஸ்பி நல்லசிவம் திருவெண்ணெய்நல்லூர் இன்ஸ்பெக்டர் பாண்டியன், சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், அய்யனார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அதன்பிறகு வயல் வெளியில் கிடந்த பீரோவைக் கைப்பற்றியுள்ளனர். விழுப்புரத்தில் இருந்து கைரேகை நிபுணர் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் பதிவாகியிருந்த கொள்ளையர்களின் கைரேகைகளைச் சேகரித்துள்ளனர்.

 

போலீஸார் இதுகுறித்து தீவிர விசாரணை செய்துவருகின்றனர். இப்போதெல்லாம் கொள்ளையடிக்க வீடுகளுக்குள் நுழையும் கொள்ளையர்கள், வீட்டில் தூங்கிக் கொண்டு இருப்பவர்கள் வெளியே வராதபடி வெளிப்பக்கம் தாழ்ப்பாள் போட்டு விட்டு வேண்டியவற்றை வெளியே கொண்டுச் சென்று சாவகாசமாகக் கொள்ளையடித்துச் செல்கின்றனர். இவர்கள் புதுமாதிரியான கொள்ளையர்களாகத் தெரியவருகிறது.

 

உதாரணமாக சமீபத்தில் கடலூர் மாவட்டம் ராமநத்தம் காவல் நிலைய எல்லைப் பகுதியில் உள்ள ஆலம்பாடி கிராமத்தில் இதேபோன்று இரண்டு வீடுகளுக்குள் புகுந்த வீட்டுக்குள் கொள்ளையர்கள் பீரோவைத் தூக்கிச் சென்று உடைத்து 100 பவுன் நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதேபோன்ற கொள்ளைச் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. அதிலும் பீரோக்களை தூக்கிச்செல்லும் இதுபோன்ற சம்பவம் கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் அவ்வப்போது தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. காவல்துறையோ, குற்றவாளிகளைத் தேடி வருவதாகக் கூறியபடியே உள்ளனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மறைந்த எம்.எல்.ஏ. புகழேந்தி உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
Late MLA pugazhendhi Tribute to CM MK Stalin

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (வயது 71). இத்தகைய சூழலில் விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் (05.04.2024) இரவு விழுப்புரம் வந்திருந்தார். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார்.

அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து நேற்று (06.04.2024) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் ஆவார். எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (06.04.2024) இரவு விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு நேரில் சென்று, உடல்நலக் குறைவால் காலமான விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா. புகழேந்தியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.  அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, க. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர். 

Next Story

விழுப்புரத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பரப்புரை!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Cm MK Stalin election campaign In Villupuram 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இதற்கிடையே தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது. அதன்படி, 39 மக்களவை தொகுதிகளில் 1085 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், 135 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. இதன் மூலம் 39 தொகுதிகளில் மொத்தம் 950 பேர் போட்டியிடுகின்றனர். தமிழ்நாட்டில் மொத்தமாக 874 ஆண்களும், 76 பெண்களும் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக, கரூர் மக்களவை தொகுதியில் 54 பேர் களம் காண்கின்றனர். குறைந்தபட்சமாக, நாகப்பட்டினம் தொகுதியில் 9 பேர் மட்டுமே போட்டியிடுகின்றனர். மேலும், தேர்தலையொட்டி தமிழகத்தில் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் தொடர் நடவடிக்கைகள் தேர்தல் ஆணையம் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது.

அதே சமயம் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (05.04.2024) விழுப்புரத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதனையொட்டி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இன்று மாலை நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்திலும் கலந்து கொண்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்ற உள்ளார். அப்போது விழுப்புரம் மக்களவைத் தொகுதி வி.சி.க. வேட்பாளர் ரவிக்குமார் மற்றும் கடலூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து முதல்வர் வாக்கு சேகரிக்க உள்ளார்.