Robbers who snatched a chain from a woman

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பின்னல்வாடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மனைவி குமாரி (39). இருவரும் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகில் கீழக்குறிச்சி கிராமத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டில் நடைபெற்ற விசேஷத்தில் கலந்துகொள்வதற்காக தங்களுக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.

Advertisment

நிகழ்ச்சி முடிந்து மீண்டும் தங்களது ஊரான பின்னல்வாடி செல்வதற்காக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது ஐவதுகுடி ரயில்வே மேம்பாலத்தை அவர்கள் வாகனத்தில் கடந்து சென்றுகொண்டிருந்தபோது, திடீரென முகத்தைத் துணியால் மூடி கட்டிக்கொண்டு வந்தஇருவர், இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்து குமாரி கழுத்தில் அணிந்திருந்த தாலிச் செயின் மற்றும் அதில் இருந்த நகைகளைக் கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்துச் சென்றனர்.

Advertisment

இதில் நிலைதடுமாறிய அவரது கணவர் சுதாரித்து வாகனத்தை நிறுத்தியுள்ளார். அவரது மனைவி கழுத்தில் இருந்து பறித்துச் சென்ற தாலிச் செயின் 5 பவுன் என்று தெரியவருகிறது. இதையடுத்து, கணவன் மனைவி இருவரும் வேப்பூர் காவல் நிலையம் சென்று புகார் அளித்தனர். அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.