Rob theft with a knife around neck

Advertisment

ஈரோடு மாவட்டம் பெருந்துறை வள்ளலார் வீதி, கொங்கு நகரை சேர்ந்தவர் கார்த்திக். இவர் ஜவுளி வியாபாரி. அவரது மனைவி மல்லிகா. 3ந் தேதி காலை கணவர் கார்த்திக் வியாபாரத்துக்காக வெளியே சென்றுவிட்டார். மல்லிகா தனது மகனை பள்ளிக்கு கொண்டு சென்று விட்டு விட்டு தனது வீட்டிற்குள் வந்தார்.

அப்போது வீட்டுக்குள் திடீரென புகுந்த ஒரு மர்ம நபர் மல்லிகாவிடம் கத்தியை காட்டி சத்தம் போட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். மேலும் வீட்டில் பீரோவில் இருந்த 11 பவுன் நகை, மற்றும் ரூபாய் மூன்று லட்சம் ரொக்கப் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்று விட்டார். கொள்ளையன் வீட்டை விட்டு ஒடிய பிறகு மல்லிகா இதுகுறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் தகவல் தெரிவித்தார்.

பெருந்துறை போலீசுக்கும் இதுகுறித்த தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். பட்டப்பகலில் வீட்டுக்குள் புகுந்து பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து நகை பணம் கொள்ளை அடித்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.