Skip to main content

இருளர் சமூகப் பெண்ணின் சடலத்தை எடுத்துச் செல்ல அனுமதி மறுப்பு! - உறவினர்கள் சாலை மறியல்!

Published on 04/03/2021 | Edited on 04/03/2021

 

road blockade for not road proper road to grave yard

 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகில் உள்ளது வழுக்கம்பாறை. இந்தப் பகுதியில் பழங்குடி இருளர் சமூகத்தைச் சேர்ந்த சுமார் 150 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்தச் சமூகத்தைச் சேர்ந்த மக்களில் யாராவது ஒருவர் இறந்துபோனால் சடலத்தைச் சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்வதற்கு முறையான பாதை வசதி இல்லை. இதனால், அப்பகுதி மக்கள் அவ்வப்போது பிரச்சனைகளைச் சந்தித்து வந்துள்ளனர்.

 

சுடுகாட்டிற்குச் செல்வதற்கு நிரந்தர வழி ஏற்படுத்தித் தருமாறு வட்டாட்சியர் உட்பட பல்வேறு அதிகாரிகளுக்குப் பலமுறை மனு அளித்துள்ளனர் அந்தப் பகுதி மக்கள். ஆனால் அதிகாரிகள் அவர்களுக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படுத்தித் தரவில்லை. இதனிடையே நேற்று முன்தினம் அந்தப் பகுதியைச் சேர்ந்த இருளர் இனப் பெண் ஒருவர் உடல்நலக்குறைவால் இறந்து போயுள்ளார். இதையடுத்து, அவரது உடலை சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல முயன்றுள்ளனர்.

 

ஆனால் ஒரு தரப்பினர் அந்த வழியாக சடலத்தை எடுத்துச் செல்ல வழிவிட மறுத்து தகராறில் ஈடுபட்டதாக தெரியவருகிறது. இதனால், கோபமுற்ற பழங்குடி இருளர் இன மக்கள் அந்தச் சடலத்தை செஞ்சி திருவண்ணாமலை சாலையில் குறுக்கே வைத்து கறுப்புக்கொடி ஏந்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்தத் தகவல் அறிந்த செஞ்சி தாசில்தார் ராஜன், இன்ஸ்பெக்டர் ராஜாராம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். சடலத்துடன் சாலை மறியல் செய்துவந்த பழங்குடி இருளர் இன மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

 

இதையடுத்து சடலத்தை சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்வதாக உறுதி அளித்தனர். பின்னர் அவர்கள் சாலை மறியலைக் கைவிட்டுச் சடலத்தைச் சுடுகாட்டிற்கு கொண்டு சென்று அடக்கம் செய்தனர். இந்தப் போராட்டத்தினால் செஞ்சி திருவண்ணாமலை சாலையில், சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. சுடுகாட்டிற்கு, இறந்தவர் உடலைக் கொண்டு சென்று அடக்கம் செய்வதற்கு நிரந்தரத் தீர்வு காணவேண்டும் என்று பழங்குடி இருளர் இனமக்கள் அதிகாரிகளிடம் வேண்டுகோள் வைத்துள்ளார்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பா.ம.க. வேட்பாளரை ஆதரித்து ராமதாஸ் பிரச்சாரம்!

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
PMK Ramdas campaign supporting the candidate

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக தமிழக முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று முன்தினம் (22.03.2024) திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற பிரச்சார பொது கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு திருச்சி தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோவையும், பெரம்பலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அருண் நேருவையும் ஆதரித்து வாக்கு சேகரித்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார். இத்தகைய சூழலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (24.03.2024) மாலை திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டு வண்ணாங்கோயில் என்ற இடத்தில் இந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க.வின் முதல் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தை தொடங்கியுள்ளார்.

இதற்கிடையே பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பட்டாளி மக்கள் கட்சிக்கு காஞ்சிபுரம், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து பா.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதன்படி அரக்கோணம் - பாலு, கடலூர் - தங்கர்பச்சான், திண்டுக்கல் - திலகபாமா, தர்மபுரி - செளமியா அன்புமணி, விழுப்புரம் - முரளி சங்கர், ஆரணி - கணேஷ் குமார், மயிலாடுதுறை - ம.க. ஸ்டாலின், சேலம் - அண்ணாதுரை, கள்ளக்குறிச்சி - தேவதாஸ்  காஞ்சிபுரம் - ஜோதி வெங்கடேஷ் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் விழுப்புரம் மக்களவைத் தொகுதி பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கரை ஆதரித்து கோவடி கிராமத்தில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்கு ஒரு நல்ல வேட்பாளரான முரளி சங்கர் நிறைய படித்துள்ளார். 6 மொழிகளில் சரளமாக பேசுவார். மக்களை பற்றி சிந்திக்க கூடியவர். மக்களுக்காக பாடுபடக்கூடியவர். சிறந்த விளையாட்டு வீரரும் ஆவார்” எனத் தெரிவித்தார். 

Next Story

திரௌபதி அம்மன் கோவில் இன்று திறப்பு; போலீசார் குவிப்பு

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Draupadi Amman temple opens today; Police build up

விழுப்புரம் திரௌபதி அம்மன் கோவில் இன்று திறக்கப்படுகிறது.

விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதி கிராமத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த திரௌபதி அம்மன் தீமிதி திருவிழாவில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் கோவிலுக்கு சீல் வைத்தது. கோவிலில் இதுவரை யாரும் அனுமதிக்கப்படவில்லை. எட்டு கட்டமாக சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் இரு தரப்பும் நீதிமன்றத்தை நாடி இருந்தது.

இந்நிலையில் 22 ஆம் தேதியான இன்று கோவிலைத் திறந்து பூஜை நடத்துவதற்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படாத நிலையில், ஒரு கால பூஜை மற்றும் பூசாரியால் செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று அதிகாலை முதலே கோவிலை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்ற நிலையில், தற்போது கட்டிங் மெஷின் மூலம் கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கோவிலைத் திறக்கும் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், பாதுகாப்புப் பணிக்காக அதிகப்படியான போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.