Skip to main content

 தடுப்பணையில் மூழ்கி 7 பேர்  உயிரிழந்ததால் சோகம்!

Published on 06/06/2022 | Edited on 06/06/2022

 

river childrens and womens incident police investigation

 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் ஏ.குச்சிப்பாளையத்தை ஒட்டி கெடிலம் ஆறு பாய்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் தண்ணீரை தடுத்து வைக்கும் அளவில் தடுப்பணை அமைக்கப்பட்டது. இந்த தடுப்பணையில் தற்போது சேறும் சகதியுமாக உள்ளது.

 

இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த மோகன் மகள் நவநீதம் (வயது 20), அவரது மருமகளும் குணாள் மனைவியுமான பிரியா (வயது 19) ஆகியோர் குளிக்க சென்றுள்ளனர். உடன், அவர்களது வீட்டிற்கு வந்திருந்த குறிஞ்சிப்பாடியை சேர்ந்த உறவினரான ராஜகுரு மகள்கள் பிரியதர்ஷினிவயது (வயது 13), காவியா (வயது 11) ஆகியோரும் குளிக்க சென்றுள்ளனர். இதில், தடுப்பணை சேற்றில் சிக்கியவரை மாற்றி மாற்றி காப்பாற்ற முயன்று சேற்றில் சிக்கிக் கொண்டனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் நின்று கொண்டிருந்த முத்துராமன் மகள் சுமதா (16), அமர்நாத் மகள் மோனிகா (வயது 16), சங்கர் மகள் சங்கவி (வயது 15) ஆகியோரும் காப்பாற்றச் சென்று அவர்களும் சேற்றில் சிக்கிக் கொண்டனர். 

 

தகவலறிந்த அப்பகுதியினர் ஆற்றுக்குள் இறங்கி மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஒருவர் பின் ஒருவராக 7 பேரையும் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனளிக்காமல் உயிரிழந்தனர். தகவலறிந்த கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில் திரண்டு கதறி அழுததால் அப்பகுதியே சோகமாக மாறியது. மேலும் ஒரே கிராமத்தில் 5 பேர் இறந்ததாலும் இறந்த அனைவரும் உறவினர்கள் என்பதாலும் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.

 

இதில், இறந்த பிரியா ஒரு மாதத்திற்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டது குறிப்பிட்டத்தக்கது.கடலூர் தலைமை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த 7 பேர்களின் உடலை தமிழக உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,  கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகனேஷ் ஆகியோர் பார்வையிட்டு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

 

பின்னர், அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "இதுபோன்று ஆறு, குளம், குட்டை, அணைக்கட்டு, தடுப்பணை பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீரில் குளிக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் பல்வேறு முறை எச்சரித்தும் மீறி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது வருத்தத்திற்குரியது. இது சம்பந்தமாக தமிழக முதல்வர் அறிவுறுத்தல் பேரில்  தானும் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் இறந்தவர்களின் உறவினர்கள்  குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்தோம். தமிழக அரசு தலா 5 லட்ச ரூபாய் நிவாரண உதவி வழங்குவதாக அறிவித்துள்ளது" என  தெரிவித்தார்.

 

சார்ந்த செய்திகள்