வெளி மாவட்ட மக்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவதன் வழியாக தென்மாவட்டங்களில் கரோனா தொற்று அன்றாடம் கணிசமாக ஏறிக்கொண்டே போகின்றது. நெல்லையில் 1,875 மற்றும் தூத்துக்குடியில் 2,385 என பாதிப்பின் கிராஃப் எகிறிவிட்டன. இந்த இரண்டு மாவட்டங்களில் எடுக்கப்படும் ரத்த மாதிரிகளின் சோதனைகள் அந்தந்த மாவட்ட அரசு மருத்துவமனைகளிலேயே சோதனை செய்யப்படுவதால் மறுநாள் சோதனை முடிவு வந்துவிடுகிறது. இதனால் தொற்று பரவலை ஒரளவு கட்டுப்படுத்த முடிகிறது என்கிறார்கள்.
ஆனால் தென்காசி மாவட்டத்தின் தொற்றும் அதிகமாகவே இருக்கிறது. இன்றைய அளவில் 721 என்ற எண்ணிக்கையிலிருக்கிறது. மேலும் ரத்த சோதனை முடிவுகள் வர கால தாமதமாவதும் தொற்று பரவலுக்கு முக்கிய காரணியாகிறது என்று சமூக நல ஆர்வலர்கள் கூறுகின்றனர். ஏனெனில் இந்த மாவட்டத்தில் எடுக்கப்படும் ரத்த மாதிரிகள், பரிசோதனை வசதிகள் தென்காசி அரசு மருத்துமனையில் இல்லாததால், தொலைவிலுள்ள தேனி மற்றும் விருதுநகர் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனவாம். இதனால் சோதனை முடிவுகள் வர கால தாமதமேற்படுவதால் அதற்குள் தொற்று பரவல் மேலும் அதிகமாகிவிடுகின்றன என்பதே சமூக நல ஆர்வலர்கள் தெரிவிக்கும் புகார்.
குறிப்பாக கடந்த 8ம் தேதி சங்கரன்கோவில் நகரில் எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகளின் சோதனை 5 நாட்களுக்கு பின்பு 12ம் தேதியன்று வந்ததில் அதில் 20 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதால் ஏற்கனவே 26 பேர்களுக்கு மேல் பாதிக்கப்பட்ட இங்கே இதன் காரணமாக மக்களிடையே அச்சமும் பீதியும் கிளம்பியிருக்கிறது. 5 தெருக்களும் மக்கள் வெளியேறாதவாறு அடைக்கப்பட்டன. இதனால் நகர வியாபாரிகளின் சங்கத்தினர் வரும் 17ம் தேதி முதல் ஒரு வாரம் முழுக்கடையடைப்பு ஊரடங்கு என்று அறிவித்துவிட்டனர்.
இதுபோன்ற சோதனை முடிவு தாமதம் உள்ளிட்டவைகளையும், நிவர்த்தி செய்து காலதாமதமின்றி முடிவுகள் வெளியிட நடவடிக்கை எடுக்கவும், கரோனா நோயாளிகளுக்கு போதுமான உணவு அளிக்கப்படவேண்டுமென்றும், மேலும் கரோனா வார்டில் தென்காசி நகராட்சியில் பணியாற்றிய ஒருவர் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த 9ம் தேதியன்று தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் 3 நாட்களுக்கு பிறகு அவர் குணமடைந்தாகக்கூறி 12ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவரிடம் விசாரித்தபோது பல்வேறு குறைபாடுகள் வெளிப்பட்டன. மேலும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டபோது நோயாளியிடம் பல்வேறு பேப்பர்களில் கையெழுத்தும் பெறப்பட்டதாக கூறியதையும் கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனர். இந்த விஷயத்தில் அரசு நடைமுறையைப் பின்பற்ற வேண்டுமென்று மாவட்ட கலெக்டரான அருண்சுந்தர் தயாளனிடம் கோரிக்கை மனுவில் வலியுறுத்தியுள்ளார் தென்காசி மாவட்டத்தின் தி.மு.க.வின் மா.செ.வான சிவபத்மநாபன்.