Skip to main content

வனத்திற்குள் ஆடு மேய்க்க ரேஞ்சருக்கு மோதிரம்! 

Published on 01/07/2023 | Edited on 01/07/2023

 

Ring bribe to ranger to graze goats in Dharmapuri forest

 

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள கோடுபட்டி மற்றும் அதனை ஒட்டி உள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் விவசாய தொழிலோடு இணைந்து ஆடு வளர்த்து தங்கள் வாழ்வாதாரத்தைப் பூர்த்தி செய்து வருகின்றனர். கடந்த சில வருடங்களாக வனப்பகுதியில் ஆடு மேய்க்க பென்னாகரம் வனத்துறை அலுவலர்கள் லஞ்சம் கேட்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆடி மாதத்தில் ஆடு ஒன்றுக்கு 300 ரூபாயும் வருடப் பிறப்பான ஜனவரி மாதத்தில் ஆயிரம் ரூபாயும் எனக் கணக்கிட்டு வனத்துறை ஊழியர்கள் பணம் கேட்பதாகவும் பணம் தர மறுத்தால் அபராதம் விதிப்பதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.

 

இதுதொடர்பாக கோடுபட்டியைச் சேர்ந்த விவசாயி மாணிக்கம் கூறியதாவது; “எங்கள் கிராமத்தில் நாங்கள் தலைமுறை தலைமுறையாக விவசாயம் செய்து வருகிறோம். ஆடு மாடு மேய்ப்பது தொழில். அதனுடன் சுண்டைக்காய் சேகரித்தல் போன்ற வேலைகளைச் செய்து வருகின்றோம். அரசு காடுகளில் விறகு பொறுக்கலாம் ஆடு மாடு மேய்க்கலாம் என்று கூறி வருகிறது.

 

தற்பொழுது வனத்துறையினர் காடுகளில் ஆடு மாடு மேய்க்கக் கூடாது, சுண்டக்காய் பறிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என மிரட்டி வருகின்றனர். ஆடு மேய்த்தாலும் மாடு மேய்த்தாலும் அபராதம் விதிக்கின்றனர். வனத்திலிருந்து கிராமத்திற்குள் நுழையும் வனவிலங்குகள் விவசாய நிலத்தில் உள்ள பயிர்களை நாசம் செய்தாலும் அவர்களுக்கு அது கணக்காகத் தெரிவதில்லை. நாங்கள் வனத்திற்குள் சென்றால் உடனடியாக அபராதம் விதிக்கிறார்கள்” என வேதனை தெரிவித்தார்.

 

Ring bribe to ranger to graze goats in Dharmapuri forest

 

தாசம்பட்டி பகுதியைச் சேர்ந்த சிவப்பிரகாசம் பேசும்போது; “ஆடி மாதத்தில் ஒரு ஆட்டுக்கு 300 ரூபாய் மாமூல் தர வேண்டும். குடும்பத்திற்கு ஆயிரம் ரூபாய் ஜனவரி மாதத்தில் தர வேண்டும். ரேஞ்சருக்கு மோதிரம் வழங்க வேண்டும் என வசூலிக்கின்றனர். பணம் தர மறுத்தால் துப்பாக்கி வழக்கு போன்ற பொய் வழக்குகளைப் போடுவதாக மிரட்டுகிறார்கள். தொந்தரவு செய்கிறார்கள் என தர்மபுரி மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினோம்.

 

மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கியதால் 27 ஆம் தேதி முதல் மாடு ஒன்றுக்கு மூன்று ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கின்றனர். ஆடு ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கின்றனர். வனப்பகுதியில் இருந்து விவசாய நிலத்தைச் சேதப்படுத்த வரும் யானை, மயில், பன்றி போன்ற வன விலங்குகளை வனத்துறையினர் பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். நாங்கள் ஆடு மாடுகள் மேய்க்க வனப்பகுதிக்குள் செல்வதில்லை என்றும், இல்லையென்றால் நாங்கள் ஆடு மாடுகள் மேய்ப்பதற்கு உரிய அனுமதி வழங்க வேண்டும்” எனத் தெரிவித்தனர்.

 

இது தொடர்பாக தருமபுரி டி.எஃப்.ஓ. அப்பலோ நாயுடுவை நாம் தொடர்பு கொண்டு கேட்டபோது, “அந்தப் பகுதி மக்கள் விவசாயிகள் கால்நடை மேய்ப்பதாகக் கூறி காட்டிற்குள் சென்று அங்கிருக்கும் மரம் செடி கொடிகளை வெட்டி விட்டி காட்டை சமப்படுத்தி விவசாயம் செய்கின்றனர். அதனால் காட்டு விலங்கிற்கு பாதிப்பு ஏற்படுகிறது. இப்படி காட்டை ஆக்கிரமிப்பதால், வனவிலங்குகள் இருப்பிடத்தை தேடி ஊருக்குள் வந்துவிடுகிறது. அதனால் தான் அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். மற்றபடி அரசு காட்டிற்குள் செல்ல அவர்களுக்கு அளித்திருக்கும் அனுமதியை நாங்கள் தடுப்பதில்லை. அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக எனக்கும் புகார் வந்தது. அதுகுறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன். தவறு நடந்திருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக - நா.த.க.வினர் இடையே திடீர் மோதல்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Sudden issue between ADMK and ntk

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இத்தகைய சூழலில் தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் அதிமுக - நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பாலக்கோடு காவல் நிலையம் அருகே நாம் தமிழர் கட்சியினருக்கு காலை 11 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதே போன்று அதிமுகவினருக்கு காலை 12 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் 12 மணிக்கு முன்பாகவே அதிமுகவினர் பாலக்கோடு காவல் நிலையம் அருகே வந்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.

அப்போது அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாக அதிமுகவினர் பிரச்சாரம் செய்ததால் நாம் தமிழர் கட்சியினர் எதிர்த்துள்ளனர். இதனால் இரு கட்சியினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. மேலும் நாம் தமிழர் கட்சியினர் வந்த வாகனத்தை அதிமுகவினர் உடைத்ததால் அப்பகுதியில் பெரும்  பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக பாலக்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

சிக்காத சிறுத்தை! பிடிக்க முடியாமல் தடுமாறும் வனத்துறை!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
 forest department is struggling to catch the elusive leopard

கடந்த 2ஆம் தேதி மயிலாடுதுறை சுற்றியுள்ள பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து பயிற்சி பெற்ற அனுபவம் வாய்ந்த வனத்துறையினர் மற்றும் அதிகாரிகளை வரவழைத்து, தனிக்குழு அமைத்து அந்தச் சிறுத்தையின் நடமாட்டத்தைத் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

அதன்படி, சிறுத்தையின் காலடித்தடம் அது சிறுநீர் கழித்ததற்கான அடையாளம், அதன் கழிவு ஆகியவற்றை அடையாளம் கண்டு, சிறுத்தை மயிலாடுதுறை பகுதியில் நடமாடுவதை உறுதி செய்தனர். அதைப் பிடிப்பதற்காக வனத்துறையினர் பல்வேறு முயற்சிகளை செய்து வந்த நிலையில், நான்கு தினங்களுக்கு முன் அரியலூர் மாவட்டம் செந்துறை நகரப் பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை பொதுமக்கள் பார்த்தனர். இது குறித்து அரியலூர் வனத்துறை மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அப்பகுதி இளைஞர்களுடன் சிறுத்தையைப் பிடிப்பதற்கு முயற்சி செய்தனர்.

 forest department is struggling to catch the elusive leopard

ஒரு லேத் பட்டறையில் பதுங்கி இருந்த சிறுத்தை அங்கிருந்து தப்பி ஓடியதைப் பலரும் பார்த்தனர். இதையடுத்து சிறப்பு குழுவினர் பெரிய கூண்டை கொண்டு வந்து செந்துரை அருகே உள்ள ஓடை பகுதியில் கூண்டுக்குள் ஆட்டை அடைத்து வைத்தனர். ஆடு கத்தும் சத்தத்தை கேட்டு ஆட்டை உணவாக சாப்பிட்டு சிறுத்தை அந்த கூண்டை தேடி வரும் அப்போது அதில் மாட்டிக்கொள்ளும் வகையில் தயார் நிலையில் வைத்திருந்தனர். ஆனால் சிறுத்தை அந்தக் கூண்டுக்குள் வந்து சிக்கவில்லை.

இதைத்தொடர்ந்து செந்துறையைச் சுற்றிலும் உள்ள முந்தரிக்காட்டு பகுதிகளுக்குள் சிறுத்தை பதுங்கி இருக்கலாம் என்று ட்ரோன் கேமரா மூலம் தேடுதல் வேட்டை நடத்தினர். சிறுத்தை நடமாட்டத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. சிறுத்தை அரியலூர் மாவட்டத்திலிருந்து பெரம்பலூர் மாவட்டம் அல்லது அருகில் உள்ள கடலூர் மாவட்ட பகுதிகளுக்குள் சென்று இருக்கலாம் என்று வனத்துறையினர் கூறுகின்றனர். தற்போது நிலவரப்படி தினசரி ஒரு நாளைக்கு சுமார் 10 முதல் 15 கிலோமீட்டர் வரை சிறுத்தை இரவு நேரங்களில் இடம்பெயர்ந்து சென்றுள்ளது.

 forest department is struggling to catch the elusive leopard

இதனடிப்படையில் அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்ட எல்லைய ஒட்டிய கிராமங்களில் வனத்துறையினர் தங்களது கண்காணிப்பைத் தீவிர படுத்தியுள்ளனர். இதனைப்போன்று கடந்த 2013 ஆம் ஆண்டு பெரம்பலூர் நகரை ஒட்டி உள்ள பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருந்ததை பொதுமக்கள் பார்த்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது பெரம்பலூர் அருகில் உள்ள துறைமங்கலம், கவுல்பாளையம் ஆகிய பகுதிகளில் சிறுத்தையைத் தேடும் பணி தீவிரமாக நடந்தது. நீண்ட முயற்சிக்குப் பிறகு அப்பகுதியில் சிறுத்தையைப் பிடிக்க கூண்டுக்குள் ஆட்டை விட்டு காட்டுப்பகுதியில் வைத்தனர். அப்போது அந்தச் சிறுத்தை ஆடு கத்தும் சத்தத்தை கேட்டு அதை கடித்து தின்பதற்காக கூண்டுக்குள் சென்று சிக்கியது. இதனையடுத்து அங்கு சென்ற வனத்துறையினர், அந்தச் சிறுத்தையை சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு கொண்டு சென்று விட்டனர். இவ்வாறு சில ஆண்டுகளுக்கு ஒரு முறை பெரம்பலூர் ,அரியலூர்,மாவட்டங்களில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.