75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டுள்ள நிலையிலும் சில இடங்களில் ஆதிதிராவிடர் ஊராட்சி மன்றத் தலைவர்களால் தேசியக் கொடி ஏற்ற முடியவில்லை என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
75வது சுதந்திர தினத்தில் தேசியக் கொடி ஏற்ற யாரையும் தடுக்கக் கூடாது. தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 497 ஊராட்சிகளிலும் அந்தந்த ஊராட்சி மன்றத் தலைவர்கள் தேசியக் கொடி ஏற்றினார்கள். அதே போல சேந்தாக்குடி ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் தமிழரசன் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றினார். ஆனால் தங்கள் ஊராட்சிக்குட்பட்ட கீழையூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தன்னால் தேசியக் கொடி ஏற்ற முடியவில்லை. தடுக்கப்படுகிறேன் என்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்திருந்தார். இந்த புகார் குறித்து விசாரணை செய்த மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு பின்னொரு தேதியில் தேசியக் கொடி ஏற்றலாம் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், இன்று மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் கீழையூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் சேந்தாக்குடி ஊராட்சி மன்றத் தலைவர் தமிழரசன் தேசியக் கொடி ஏற்றினார்.
பல வருட போராட்டத்திற்கு பிறகு ஒரு ஆதிதிராவிடர் ஊராட்சி மன்றத் தலைவர் அரசுப் பள்ளியில் தேசிய கொடி ஏற்றியுள்ளார் என்றனர் பலர். அதே போல, ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் தேசிய கொடி ஏற்றுவதை தடுக்க கூடாது. அதே போல பள்ளிகளில் பள்ளி தலைமை ஆசிரியர் ஏற்றலாம். ஊராட்சி மன்றத் தலைவர் தான் தேசிய கொடி ஏற்றலாம் என்பது இல்லை என்கின்றனர் அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.